Wednesday, February 07, 2018

மதம் மீறும் மனிதர்கள்


எனக்குத் தெரிந்தவரையில், நான் அறிந்தவரையிலும் இந்து மதத்தில் மதம் ஆட்சி செய்வதில்லை. சாதி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மூலம் மதம் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இந்த ஆண்டு முதல் முறையாகக் கிறிஸ்துவம், முஸ்லீம் மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள் என்று கணக்கெடுத்தார்கள் என்று வந்து சொன்ன போது மனதிற்குள் பல விசயங்கள் வந்து போனது.

வலைபதிவில் பல இஸ்லாமிய நண்பர்கள் விமர்சனங்கள் வாயிலாக அறிமுகம் ஆனாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மதங்களைத் தாண்டி யோசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை அறியாமல் அவர்களின் மதம் தான் முன்னுக்கு வந்து நிற்கின்றது. இது அவரவர்களின் தனிப்பட்ட கொள்கைகள் என்று நான் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுவதுண்டு.

தன்னை உணராமல் தனக்கான அடையாளம் இது தான் என்று கடைசி வரைக்கும் நிரூபித்துக் கொண்டேயிருப்பது அவஸ்தையான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை என்றும் நான் வாழ விரும்புவதில்லை.

இவரின் எழுத்துக்கள் மிதவாதம் இல்லை. அதே சமயத்தில் தீவிரவாதமும் இல்லை. சக இஸ்லாமிய நண்பர்கள் இவரை அவ்வப்போது இப்படி எழுதாதீர்கள் என்று விமர்சனங்களில் வாயிலாகச் சுட்டிக் காட்டுவதையும் கவனித்து வந்துள்ளேன். ஆனால் இவர் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டதே இல்லை.

ஒரு முறை பேசியுள்ளேன். நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். உண்மையான இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படி தான் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவிற்கு அவரின் உரையாடல் இருந்தது.

தன் குடும்பத்தை அதிக அளவு நேசிப்பவர். அதே அளவுக்குச் சமூகத்தைப் பாரபட்சமின்றி நேசிப்பவர் என்பதனை அவரின் எழுத்துக்கள் வாயிலாகப் புரிந்துள்ளேன். ஆனால் சொந்த வாழ்க்கையில் சுதாரிப்பு இல்லாதவர் என்பதால் பலருக்கும் உழைத்துக் கொடுப்பவர் என்ற நிலையில் அவர் மாற முடியாமல் தடுமாறிக் கொண்டேயிருக்கின்றார் என்பதனை யூகிக்க முடிகின்றது.

பணம் என்ற விசயத்தில், தன் உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம் அதுவும் தான் சார்ந்த இன மக்களே சொல் ஒன்று செயல் ஒன்று வாழும் போது அதன் ஆதங்கத்தையும் அவ்வப்போது எழுத்தில் வாயிலாக வடிகாலாக மாற்றிக் கொண்டு திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்.

திமுக என்பது இஸ்லாமியர்களின் விருப்பக்கட்சியாக இருந்தாலும் அதன் கொள்கைகள் மீதும், மாறிக் கொண்டே வரும் எண்ணங்கள் மீதும் விமர்சனத்துடன் தன் கருத்தைப் பதிய வைக்கின்றார். அதே போலச் சக இஸ்லாம் சார்ந்த தவறுகளையும் சுட்டிக் காட்டிவிடுகின்றார். சற்று மென்மையாக.

வாழ்த்துகளும் அன்பும் சற்று கூடுதல் பிரியங்களுடன். Jamesha Habib

https://www.facebook.com/home.planners.5?fref=mentions&pnref=story

2 comments:

G.M Balasubramaniam said...

ஜமேஷா ஹபீப் போல பல நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன் பாராடலுக்கு உரியவர்கள்

Rathnavel Natarajan said...

அருமையான அறிமுகம். நன்றி.