Sunday, July 21, 2013

சாராயத் தமிழன்

வீட்டிலிருந்து அலுவகத்திற்கு செல்லும் போது தினந்தோறும் நான்கு சாராயக்கடைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு சாராய கடையிலும் காலை நேரத்திலும் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.  பகல் நேரத்தில் குறைந்தபட்சம்  இருபது பேர்களுக்கு குறையாமல் நின்று கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பார்கள்.  

இன்று எவரும் சாராயக்கடை என்று சொல்வதில்லை. டாஸ்மாக் என்ற கௌரவப் பெயரில் அழைக்கின்றனர்.

கள்ளு என்பது சாராயமாக மாறியது. அதுவே கள்ளச்சாராயமாக மாறி காலப்போகில் நல்ல சாரயமாகவும் மாறியது.  தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறிய போது ஒவ்வொரு சமயத்திலும் காட்சிகள் மாறிக் கொண்டே வந்தது.

இன்று அதுவும் வழக்கொழிந்து விட்டது.

நெப்போலியன், விஸ்ஓபி, ஓல்டுமங்க் போன்ற பல்வேறு பிராண்டு வகைகளைச் சொல்லித்தான் அழைக்கின்றனர்.  எந்தவொரு இடத்திலும் ஆண்கள் இரண்டு பேர்களாக நின்று பேசிக் கொண்டிருந்தால் பேச்சு தொடங்கிய பத்து நிமிடத்திற்குள் இந்த மது குறித்த பேச்சு அவசியம் வந்து விடும்.

குற்றவுணர்ச்சி இல்லாத சமூக மாற்றத்தில் குதுகலத்தில் ஒன்றாக இந்த மதுக் கொண்டாட்டங்களும் சேர்ந்துள்ளது. 

மதுவென்பது சங்ககாலம் முதல் தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாததாக இருந்தாலும்  இலைமறை காயாகத்தான் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழ்நாடு சாராய நாடாக மாறி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் தள்ளாடாமல் இருக்க இந்த சாராயம் தான் உதவுகின்றது என்ற சப்பைக்கட்டு மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் தொழிலாக மாறியுள்ளது.

இன்று தமிழ்நாட்டு தான் மது விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது.

வருடந்தோறும் 45000 கோடிக்கு தமிழர்கள் குடிக்கின்றார்கள் என்று மற்றொரு கணக்கு சொல்கின்றது.  

தமிழ் சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் பயமுறுத்துவதாகவே உள்ளது. இது வெறுமனே ஒரு தனிமனிதன் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. சாராயம் குடித்தவனால் பாதிக்கப்பட்ட குடும்பம் முதல் அவனுக்கு காசில்லாத போது அவன் ஈடுபடும் கொலை கொள்ளை வரைக்கும் சமூகத்திற்கு சவாலை தந்து கொண்டிருந்தாலும் உள்ளே சென்றவர்களால் வெளியே வர முடியவில்லை. வெளியே இருப்பவர்களும் உள்ளே செல்வதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது.

நான் வாழ்ந்த ஊருக்கு அருகே சாராயம் காய்ச்சி விற்றுத்தான் பிழைக்க வேண்டிய கல்லூர் என்ற ஊர் இருந்தது.  அந்த ஊரின் தொடக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லை தொடங்கும். எல்லை தொடங்கும் இடம் வரைக்கும் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமாக இருந்தது. காவல்துறைக்கு இது மிகப் பெரிய சவாலாக இருந்தது. எங்கள் மாவட்டத்தின் எல்லையிலிருந்து மிகப் பெரிய முந்திரிக்காட்டின் தொடக்கம் இருந்தது. அது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரந்து விரிந்து அடுத்த மாவட்டத்திற்குள்ளும் சென்று கொண்டிருந்தது. 

விற்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் இது வசதியாகவே இருந்தது. முந்திரி தோப்புக்குள் இருக்கும் சாராய ஊறல்களை கண்டு அழிப்பதும் அது மீண்டும் வளர்வதும் இயல்பானதாக இருக்க இது இரண்டு மாவட்ட காவல்துறைக்குக்கு பலவிதங்களில் வசதியாகவும், பல சமயங்களில் சவாலாகவும் இருந்தது. இரண்டு பக்கமும் இரவு நேரங்களில் நின்று கொண்டு வசூலிப்பதும், சிக்கியவர்களை கொண்டு செல்வதுமாக பலவற்றையும் பார்த்துக் கொண்டே தான் வளர்ந்தேன்.

சாராய ஊறல் படிப்படியாக வளர்ந்து நான் படித்த பள்ளிக்கருகே இருந்த முந்திரிக்காட்டுக்குள்  வந்து சாராயம் விற்பர்களை பார்த்துள்ளேன்.  அருகே செல்ல பயந்து கொண்டு நண்பர்களுடன் தூர நின்று பார்ப்பதோடு சரி. அருகே சென்றால் எங்களை அடிக்க ஓடி வருவார்கள். குடிப்பவர்களின் ரகளையும், ரகளை செய்பவர்களை வெளுத்து வாங்கும் காட்சிகளை பார்த்தாலும் அடிப்படையில் இரு தரப்பிலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. 

ஒரு முறை காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் உள்ளே புகுந்து வெளுத்து வாங்க அந்த ஊரே கலகலத்து போய்விட்டது.  பெண்கள் மட்டுமல்ல.  குழந்தைகள் வரைக்கும் அள்ளிக் கொண்டு சென்று விட இது போல பலமுறை அதகளமாகியிருந்தாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போல இந்த சாராயம் காய்ச்சும் தொழில் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டேயிருந்தது. 

பெரும்பாலான வீடுகளுக்குள் இந்த ஊறல் ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவே இருந்தது. 

இப்போது அந்த ஊரின் முகம் குட்டி சிங்கப்பூராக மாறி இரண்டாம் தலைமுறை அத்தனை பேர்களும் இன்று மிகப் பெரிய நவீன அரசி ஆலைகளின் உரிமையாளராக மாறியுள்ளனர்.  அதன் பிறகு ஊர்ப்பக்கம் எந்த இடத்திலும் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்று எதுவுமே இல்லை. 

ஆனால் மாறிய தமிழ்நாட்டின் ஆட்சிகளில் இந்த சாராயக் கடைகளுக்கு முறைப்படியான அனுமதி கிடைத்த போது ஊருக்குள் ஒரே ஒரு இடத்தில் கடை ஒன்று இருந்தது. அங்கே குறிப்பிட்ட நேரத்தில் சிலர் சென்று வந்து கொண்டிருந்தனர்.  ஆனால் போவதும் தெரியாது. வருவதும் தெரியாது.

இன்று அத்தனையும் மாறியுள்ளது.  

ஊருக்குள் உள்ள கடைத்தெரு முதல் மக்கள் அதிகளவில் புழங்கும் நாலைந்து இடங்களில் இப்போது டாஸ்மாக் கடையுள்ளது.  எந்த கூச்சமும் இன்றி இன்று இயல்பாக போய் வந்து கொண்டிருக்கின்றனர்.

திருப்பூருக்குள் பலதரப்பட்ட தொழிலாளர்களுடன் அதிகளவில் பழகிய காரணத்தினால் இந்த மதுப்பழக்கம் கொண்டவர்களை காண்பதும், அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை ஆச்சரியமாக பார்த்து பரிதாபப்பட்டதுண்டு.  என்ன பேசினாலும் எதுவும் அவர்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு பத்து வருடங்கள் ஆனது.  ஆனால் நாளுக்கு நாள் அவர்கள் குடிக்கும் மதுவின் அளவு மட்டும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.

நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில் தான் அவரைப் பார்த்தேன்.  

ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் உற்பத்தி சார்ந்த ஒவ்வொரு துறைகளையும் குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும்.  ஆய்த்த ஆடைகள் தைப்பவர்களை இரண்டு விதமாக பிரித்து இருப்பார்கள்.

ஒன்று பவர்டேபிள் மற்றொன்று சிங்கர்.

இந்த இரண்டு துறைகளும் இரண்டு உலகமாக இருக்கும். இதில் சிங்கர் துறையில் இருக்கும் டைலர்கள் தான் அதிகளவில் குடிக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். நான் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில் அவரும் ஒரு சிங்கர் டைலராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல ஒவ்வொருவரும் தைப்பதை பார்த்துக் கொண்டே வந்த போது தான் அவர் எனக்கு அறிமுகம் ஆனார்.  அவர் தைத்துப் போட்ட உடைகளை ஒவ்வொன்றாக பரிசோதித்துக் கொண்டே வந்த போது என்னால் எந்த குறைகளையும் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவரைப் பார்த்த போது நம்ப முடியாததாக இருந்தது. 

அழுக்குச் சட்டையுடன், சிக்கு படிந்த முடியுடன், கொஞ்சம் நாற்றத்துடன் இருந்த அவரை முதன் முதலாக பார்த்த போது சற்று வித்தியாசமாக எனக்குத் தெரிந்தார்.

எப்போதும் போல அவருடன் உரிமையுடன் பேசத் தொடங்கினேன். ஆனால் அவர் வாயிலிருந்து வார்த்தைகளை புடுங்க வேண்டியதாக இருந்தது.


அங்கே நின்று கொண்டிருந்த ஒப்பந்தக்காரர் என்னை தனியாக அழைத்துச் சென்றார். 

"சார் அவரிடம் எதுவும் கேட்காதீங்க. எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்க" என்ற போது எனக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.   

காரணம் கேட்ட போது "அவனொரு குடிகாரப் பய. ஏதாவது கேட்டால் பாதியிலே போட்டுட்டு ஓடிடுவான்" என்றார். 

"உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் ஏதாவது சொல்லிவிடுவார்" என்று பயமுறுத்தினார்.

ஆனால் மனதிற்குள் அவரை குறித்து வைத்திருந்தேன். 

ஏதோவொரு வித்தியாசமான திறமை அவரிடம் இருப்பதாக என் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. சில வாரங்களில் ஒரு காலர் சட்டை சாம்பிள் பீஸ் தைத்தே ஆக வேண்டும் என்ற வேலை வந்த போது ஒப்பந்தக்காரரை அழைத்து இரண்டு மணி நேரத்தில் முடித்து தர வேண்டும் என்று சொன்னேன். அவர் தயங்கிக் கொண்டே "நாளை தைத்து தருகின்றேன்"  என்றார். 

அதற்கான காரணத்தை சொன்ன போது தான் நான் மனதில் வைத்திருந்தது சரியானது என்பதை உணர்ந்து கொண்டேன். 

அந்த குடிகார டைலர் இரண்டு நாளாக வராமல் இருந்ததை சொல்லிவிட்டு அவர் வந்த பிறகு தைத்து தருகின்றேன் என்றார். நுறு பேர்கள் தைக்கும் இடத்தில் அந்த ஒருவருக்கு மட்டும் இருந்த முக்கியத்துவத்தை அன்று தான் உணர்ந்து கொண்டேன். 

காலர் சட்டை என்ற ஆய்த்த ஆடையில் கழுத்தில் உள்ள காலரும் முன்பக்கம் வரக்கூடிய பட்டி என்ற அமைப்பும் முக்கியமானது.  இந்த இரண்டும் தான் ஒரு காலர் சட்டை ஆடைக்கு அழகையும் ஒழுங்கான தோற்றத்தையும் கொடுக்கும். இரண்டும் சரியான அளவில் பொருத்தமாக இல்லாவிட்டால் முரண்டு பிடிக்கும் மாமியார் மருமகள் போல திரும்பி நிற்கும். 

ஒழுங்காக அளவின் படி தைக்காவிட்டால் முழு ஆடையும் வீணாகி அது பெட்டிக்கு போகாமல் குப்பையில் சேர வேண்டியதாக இருக்கும். இதற்கென்று உள்ள அனுபவம் வாய்ந்த சிங்கர் டைலர்கள் தைக்கும் போதே அது ஒரே முயற்சியில் சரியான அளவில் வெளியே வரும். ஒரு முறை பிரித்து மீண்டும் தைத்தால் கூட பல்லிளிப்பதை கண்டு பிடித்து விடலாம். 

நான் மேலே சொன்ன குடிகார டைலரின் பெயர் சுப்ரமணி.

வந்தவாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்பவர்.  மனைவி குழந்தைகளை ஊரில் விட்டு விட்டு அவர் மட்டுமே நிறுவனங்கள் கொடுக்கும் அறைகளில் தங்கிக் கொண்டு இந்த சிங்கர் தொழிலில் இருப்பவர்.
சுமார் 3639 கோடி லாபத்தில் தொடங்கிய மது விற்பனை வருவாய் 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது

குடும்ப பிரச்சனைகள் அவருக்கு குடிப்பழக்கத்தை உருவாக்கியது.  அதுவே நாளுக்கு நாள் வளர்ந்த போதிலும் அவரின் தனிப்பட்ட திறமைகள் எதுவும் மங்கவில்லை.அவர் பெயரைச் சொன்னால் எந்த ஒப்பந்தக்காரரும் உடனடியாக அவரைச் சேர்த்துக் கொள்வார்கள். 

யாருடனும் பேச மாட்டார். மெஷினில் உட்காரந்தால் கருமமே கண்ணாக இருப்பார்.  தீப்பொறி பறப்பது போல தைத்துக் கொண்டேயிருப்பார்.  பீஸ் ரேட்டில் மட்டுமே எப்போதும் வேலை செய்வார்.  காலை எட்டறைக்குத் தொடங்கும் நிறுவனத்தில் எட்டு மணிக்கே வந்து மிஷினில் உட்கார்ந்து முதல் நாள் எடுத்து வைத்துள்ள ஆடைகளை தைக்கத் தொடங்கி விடுவார். 

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு ஒரு மணி நேரம் வரைக்கும் சளைக்காமல் உழைக்கக்கூடியவர். பல சமயம் சனிக்கிழமை விடிநைட் என்று சொல்லக்கூடிய ஞாயிறு அதிகாலை வரைக்கும் உழைத்து முடித்து நிச்சயம் அந்த வாரத்து சம்பளமாக ஐந்தாயிரத்துக் குறையாமல் வாங்கிக் கொண்டு செல்வார்.

திங்கள் கிழமை நிறுவனத்திற்கு வர மாட்டார். செவ்வாய்க் கிழமை எப்போதும் போல அவர் அசுர உழைப்பு தொடங்கும். சென்ற வாரம் வாங்கிய பணத்தில் ஐம்பது ரூபாய் கூட அவர் பையில் இருக்காது. குடித்தே அழிப்பாரா? அல்லது குடி வெறியில் கையில் உள்ள பணத்தை தொலைப்பாரா என்று தெரியாது.

எவருக்கும் எந்த பிரச்சனைகளையும் கொடுக்காமல் அவர் உண்டு அவர் வேலை உண்டு இருக்கும் அவருக்கும் ஒப்பந்தக்காரருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும்.

இவரைப் பொறுத்தவரையிலும் ஒரு வேலையைக் கையில் கொடுத்து விட்டால் இடையில் எவரும் தொந்தரவும் செய்யக்கூடாது. தெளிவாக புரிய் வைத்து விட்டு அளவுகளை சொல்லிவிட்டு நகர்ந்து விட வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்ற மாதிரி பீஸ் ஒன்றை அவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டால் போதுமானது. எனக்கு புரிந்த காரணத்தால் ஒதுங்கி நின்று விடுவதுண்டு.

ஆனால் ஒப்பந்தக்காரர் இடையிடையே போய் அவரை நோண்டும் வழக்கமுள்ளவர். சட்டென்று இவர் தூக்கியெற்றிந்து விட்டு வெளியே சென்று விடுவார்.  

பலமுறை இதை பார்த்துள்ளேன். 

அவருக்கு சாதகமாக பேசி ஒப்பந்தக்காரரை திட்டும் போது அவர் என்னிடம் எப்போதும் போல சொல்வார். 

"நீங்க அவருக்கு ரொம்ப சப்போர்ட் செய்றீங்க" என்பார்.  

நான் சிரித்துக் கொண்டே "அவர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்பேன். 

"சார் அவன் ஒரு குடிகாரப் பய. ஏதாவது கெடுத்து வச்சுட்டு போயிடுவான் " என்பார்.  

"அப்படியெல்லாம் நடக்காது" என்று அவருடன் வாதாடுவதுண்டு.

இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தக்காரரை அழைத்து "நீங்க இனிமேல் அவர் விசயத்தில் கண்டு கொள்ள வேண்டாம். சாம்பிள் பீஸ் நான் தைத்து வாங்கிக் கொள்கின்றேன்" என்றேன்.

என் கணக்கு தப்பியதே இல்லை.

என் அறைக்கு அழைத்து மாதிரி ஆடையை அவரிடம் காட்டி தைக்க வேண்டிய அளவுகளை தமிழில் பெரிய எழுத்தாக எழுதிக் கொடுத்து விட்டு என் மற்ற வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது அழகாக தைத்து என் அறைக்கு எடுத்துக் கொண்டு வருவார்.

ஒரு குறையும் சொல்ல முடியாது.

பல சமயம் எனக்கு இவர் மூலம் சிறப்பான அங்கீகாரங்கள் என்னைத் தேடி வந்த காரணத்தால் அவர் மேல் எப்போதும் எனக்கு தனிப்பட்ட அக்கறையுண்டு. 

அது அங்கேயுள்ள பல டைலர்களுக்கு பொறாமையை ஏற்படுத்திய போதும் நான் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதிலலை.

நான் நிறுவனங்கள் மாறி வந்த போது அவரை மறந்தே போனேன். 

ஒப்பந்தக்காரர் மட்டும் என் தொடர்பில் இருந்தார். சென்ற வருடத்தில் ஒரு நாள் மதிய வேளையில் என்னை அழைத்தார். 

"உங்க செல்லபிள்ளை கொங்கு நகர் ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரி பக்கத்தில் அனாதை பிணமாக கிடக்கின்றார். பார்க்க வர முடியுமா" என்று அழைத்து விபரங்களைச் சொன்ன போது அவசரமாக அங்கே சென்று பார்த்த போது திகைத்துப் போனேன்.

சாலை ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தார். போட்டிருந்த சட்டையும், வேட்டியும் அலங்கோலமாக அழுக்கடைந்து இருந்தது. இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் போல. அன்று தான் ஒரு போலீஸ்காரர் வந்து கடமையைச் செய்து கொண்டிருந்தார். பல நண்பர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். எவரும் தங்களுக்கு தெரிந்தவர் என்று வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத காரணத்தால் அங்கேயிருந்த போலீஸ்காரர் அனாதை பிணம் என்கிற ரீதியில் அவர் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

எனக்கு பல சமயங்களில் மறைமுகமாக உதவியவர் என்கிற ரீதியில் அவருக்கு இந்த சமயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்ற நண்பரிடம் சொன்ன போது அவர் மறுத்து ஒதுங்கத் தொடங்கினர். 

பிடிவாதமாக அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் சொந்த ஊர் முகவரி கிடைத்தது. அதில் உள்ள ஒரு பிபி தொலைபேசியின் மூலம் அவர் மனைவியை அழைத்துச் சொன்ன போது "அவன் இப்பவாவது செத்தானே? நாங்க படுற கஷ்டத்தில அங்கே வந்து என்ன செய்யவது? அங்கேயே புதைத்து விடுங்க" என்றார்.

நண்பர் பேசிக் கொண்டிருந்த தொலைபேசியை வாங்கி "அவர் மகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேர்த்து வைத்திருக்கின்றார்.  அதை என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியலை.  என்ன செய்யட்டும்" என்றேன். 

சற்று நேரம் அமைதிக்குப் பிறகு "சரிங்க சனியனை கடைசியாக பார்க்கனும்ன்னு என் தலையில எழுதியிருக்கு. அதை மாத்தவா முடியும். நாளை காலை வருகின்றோம்" என்றார்..

மது மாது சூது

34 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுமை...! வர்றோம் என்பதும்... (லாபம்...?)

"சாவட்டும்... இந்த சாக்கடை புழுக்கள், கருமாந்திரம் பிடித்த சனியன்கள், நாதாரி அலிகள்" இருந்து என்ன பயன்... ?" மனைவி உட்பட குழந்தைகளின் கதறல்கள்...!

ssk said...

மதுவை தடை செய்ய வேண்டும். கல்வி குறைவாகவும், மூட நம்பிக்கை மிகுந்தும் உள்ள தமிழர் மதுவினால் எளிதாக அழிவை தேடுவர். மதுவிற்காக குறுக்கு வழியில் பொருள் தேட புகுவர் . அமைதி ,வளர்ச்சி நிச்சயம் கெடும். நல்லோர் இதை எதிர்க்க வேண்டும். நல்லோர் அமைதியே சமுக அழிவிற்கு காரணம். தடை இருந்தால் ஓரளவிற்காவது சரியாகும்.

srinivasan said...

கல்லூரில் எல்லா பேருந்துகளும் முன்பு நிற்காது ! குடி குடியை கெடுக்கும் என்ன செய்ய ? பழக்கம்தான் மாலையில் கால்கள் தானாக கடையை நோக்கி நடக்க வைத்து விடுகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இறந்த பின்பு கூட மனைவி மக்கள் வெறுக்கும் அளவுக்கு காரணம் குடிதானே! அதை உணராத மக்களை என்ன செய்வது. அரசு மதுக் கடைகளை திறந்து வைப்பது தவறு என்றாலும் இவர்களைப் போன்றவர்கள் கள்ள சாராயம் குடித்தாவது அழிந்தே போவர். சுய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத் தரும் கல்வியால் மட்டுமே இது போன்ற அழிவுகளை குறைக்க முடியும்.

எஸ் சம்பத் said...

வியாபாரத்தில் வருடந்தோறும் விற்பனை இலக்கு, லாப இலக்கு என நிர்ணயிப்பதும், அதை எட்டுவதற்காக கடுமையாக உழைப்பதும் நல்ல அம்சங்கள். எங்கள் அரசு பேருந்து தொழிலில் கடந்த ஆண்டு தீபாவளி முன் தின வசூல் 1.3 கோடி, இந்த ஆண்டு 1.8 கோடி இலக்கு என நிர்ணயிப்பார்கள்- அப்படியானால் அந்த அளவிற்கு கூடுதலான பயணிகள் நகர்வினை நாங்கள் கையாள வேண்டும். ஆனால் எங்கள் வசூல் செய்தி பேப்பரில் வருவதற்குள் டாஸ்மாக் இலக்கை கடந்த வசூல் செய்தி பேப்பரில் வந்துவிடும். வருடந்தோறும் எத்தனை உயிருக்கு தீங்கு விளைவிப்பது என்ற இலக்கு அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனையின் உச்ச கட்டம்.

தி.தமிழ் இளங்கோ said...

திருப்பூர் சாயத் தமிழனைப் பற்றி எழுதிய நீங்கள் சாராயத் தமிழனைப் பற்றியும் நன்றாகச் சொன்னீர்கள். ஒரு சின்ன சந்தேகம். (எனக்கு மது அருந்துதல் மற்றும் பீடி, சிகரெட் புகைத்தல் பழக்கம் கிடையாது என்பதையும் முன்னதாகவே சொல்லிக் கொள்கிறேன்). அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகம் போன்றவற்றிலும் மதுக்கடைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இதுமாதிரி இருக்கும் மதுக்கடைகளைப் பற்றியோ குடிகாரர்களைப் பற்றியோ, பொதுமக்கள் எதிர்த்ததாவோ செய்திகள் எதுவும் ஏன் வருவதில்லை என்று அடிக்கடி நான் யோசனை செய்து இருக்கிறேன். தமிழன் மட்டும் அதிகமாக குடித்து அழிகிறானா என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை எதிர்க்கும் அரசியல்வாதிகள் மற்ற இடங்களில் ஏன் எதிர்ப்பதில்லை? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

SNR.தேவதாஸ் said...

குடி குடியைக் கெடுக்கும் என்பது இதுதான்.
அந்த டைலரைப் போன்று நிறைய நபர்களை பார்த்து இருக்கிறேன்.இருந்தும் ஒரு சக மனிதனின் முடிவுக்கு ஒரு அனுதாபம்தான் தெரிவிக்கமுடியும்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தெவதாஸ்

Unknown said...

சாராயம் விற்பதை இந்த அளவு ஊக்குவிக்கும் ஒரு அரசாங்கம் ஏன் கள்ளு இறக்க மட்டும் தடை விதித்து தன் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது?. மல்லையாக்களுக்கு ஒரு சட்டம். ஏழை பாமரனுக்கு ஒரு சட்டமா? இது என்ன நியாயம்!. Please visit http://writervijayakumar.blogspot.com/2012/04/blog-post.html

Avargal Unmaigal said...

ஜோதிஜி உங்கள் பதிவிற்கு பதில் சொல்லுவதைவிட வந்த பதிலுக்கு பதில் சொல்லாம் என நினைக்கிறேன்.

ஒருவர் சொன்னார் மதுவை தடை செய்ய வேண்டும் என்று. உண்மையை சொல்லப் போனால் மதுவை தடை செய்வது என்பது இந்த காலக் கட்டத்தில் இயலாது என்பது மறுக்க முடியாது ஏன் காந்தியே மறுபிறவி வந்தாலும் அது முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இல்லை முடியும் என்று சொல்லுபவர்கள்தான் இன்னும் அறியாமையில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது

தடை செய்யும் வேண்டும் என்று போராடும் நேரத்தில் மதுவை பற்றி நல்ல விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி விழிபுணர்வை உண்டாக்கலாம். ஒரு செயலை செய்பவர்களிடம் அது தவறானது அதை நிருத்திவிடுங்கள் என்று அட்வைஸ் சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள் அதனால் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதகங்களை தெளிவாக விளக்கி குடிக்கும் அளவை குறைக்க செய்வதுதான் குடிக்காதவர்கள் செய்யும் புத்திசாலிதனமாகும்

அடுத்தாக நமது மதிப்பிற்குரிய இளங்கோ சார் அவர்கள் ஒரு நல்ல கேள்வியை கேட்டு இருக்கிறார்

//அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகம் போன்றவற்றிலும் மதுக்கடைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இதுமாதிரி இருக்கும் மதுக்கடைகளைப் பற்றியோ குடிகாரர்களைப் பற்றியோ, பொதுமக்கள் எதிர்த்ததாவோ செய்திகள் எதுவும் ஏன் வருவதில்லை என்று அடிக்கடி நான் யோசனை செய்து இருக்கிறேன். தமிழன் மட்டும் அதிகமாக குடித்து அழிகிறானா என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை எதிர்க்கும் அரசியல்வாதிகள் மற்ற இடங்களில் ஏன் எதிர்ப்பதில்லை? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?///


தமிழ்நாட்டில் திராவிட தலைவர்களின் ஆதிக்கம் நம் தமிழர்களின் மனதில் வேறுன்றி இருப்பாதால் நம் தமிழர்கள் கருத்துரை சிங்ககளாக இருப்பதால் குடியை பற்றி அதிகம் பேசுகிறார்கள் ஆனால் செயலில்தான் அவர்கள் இறங்குவதில்லை

தமிழக மக்கள் தொகையில் குடிப்பவர்கள் எத்தனை சதவிகிதம் என்றுபார்த்தால் மிக குறைந்த அளவுதான் அதனால் குடிக்காதவர்கள அனைவரும் ஒன்று திரண்டு ஒருவாரம் தீவிரமாக போராடினால் நிச்சயம் மூட வைக்க முடியும் ஆனால் வாய்கிழியும் பேசும் தமிழர்கள் இதை செய்யமாட்டார்கள்


சிலபேர் சொல்லாம் அதை மூடிவிட்டால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுமே என்று. அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட தமிழ்ர்கள் ஒரு காரியம் செய்ததால் அரசாங்கத்திற்கு வருமானம் சுனாமி போல வந்து சேரும் அது வேறு ஒன்றுமல்ல தமிழர்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்திற்கு ஏமாற்றாமல் ஒழுங்காக வருமான வரிக் கட்டினாலே போதும். அதை உங்களால் முடியும் என்றால் நீங்கள்( தமிழக் மக்கள்) மதுக்கடைகளை மூடுவதை பற்றி பேசுங்கள் இல்லையென்றால் வாயை பொத்திக் கொண்டு போங்கள் என்பதுதான் நான் சொல்ல வருவது.

இன்னும் நிறைய சொல்லாம் நேரமில்லாததால் நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்

Avargal Unmaigal said...

புள்ளிவிபரங்கள் எடுத்து பார்த்தால் குடித்தவன் தன் குடுமபத்தை குடியால் அழித்து இருக்கலாம் ஆனால் அவன் மற்ற குடும்பங்களை அழித்தானல் என்றால் அது மிக சொற்பமே இருக்கும் ஆனால் குடிக்காதவர்கள் அழித்த குடும்பங்களின் எண்ணிக்கையை எடுத்து பாருங்களேன் அவர்கள் அழித்த குடுமபங்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்பது உண்மையே இல்லை என்பவர்கள் இதை சேலஞ்சாக புள்ளிவிபரங்கள் எடுத்து பார்க்கலாம்.

இப்படி அழிப்பது என்பது மதுவினால் மட்டுமல்ல உங்களுடைய குணங்களாலும் அதிக அழிவு ஏற்படுகிறது என்ற உண்மையை எத்தனை பேர் மனதை தொட்டு ஏற்றுக் கொள்வீர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணே... வாங்க... கொஞ்சம் ஜாலியா.... http://timeforsomelove.blogspot.in/2013/07/blog-post_21.html

kamalakkannan said...

உங்க பக்கெட்ல இருந்து பத்தாயிரம் கோவிந்தவா :) , இங்க மட்டும் இல்லா சிங்கப்பூரில் கூட தமிழன் குடுச்சி தன் சம்பாத்தியத்தை இழக்கிறான் , சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஒரு சாராய கடையின் பெயர் கூட டாஸ்க்மார்க் தான்.

உலக சினிமா ரசிகன் said...

உங்கள் சங்கு ‘ஆளுவோர்’ காதில் ஒலிக்கும்.ஆனால் கேக்காத மாதிரி நடிப்பார்கள்.
‘நடிப்பது’ இவர்கள் குலத்தொழில்.

கூடல் பாலா said...

அரசுகள் ஏற்று நடத்தவேண்டிய கல்லூரிகள் பல சாராய வியாபாரிகள் வசம்.....கல்வி போதிக்கவேண்டிய அரசு சாராய வியாபாரத்தில்...

சேக்காளி said...

"இப்பவாவது செத்தானே" என்ற வாயை எவ்வளவு சடுதியில் "நாளை காலை வருகிறோம்" என்று சொல்ல வைத்து விட்டது அந்த பத்தாயிரம்.பணம் பத்தும் செய்யும்.ஆனால் பத்தாயிரம் தலை எழுத்தையே படிக்க வைத்து விட்டதே.மதுக்கடைகளை மூடினால் மதுவர்கள் மனிதனாக மாறிவிடுவார்கள்(நம்புவோம்).ஆனால் ஒவ்வொரு நாளும் வேசக்காரியை பாசக்காரியாய் மாற்ற பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்ய.வரும் தேர்தலில் ஆட்சியமைப்பவர்கள் இலவச ATM (தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்) வைத்து கொடுக்கிறார்களா என்று பார்ப்போம்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

வருந்த வைக்கும் இம்மாதிரி விசயங்களை படிக்கவே பரிதாபமும் இந்த சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் பயமாகவும் இருக்கிறது .

கவியாழி said...

எவரும் தங்களுக்கு தெரிந்தவர் என்று வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத காரணத்தால் //மொடாக் குடிகாரர்கள் நிலை இப்போது இப்படித்தான் ஆகிவிட்டது

ஜோதிஜி said...

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.

ஜோதிஜி said...

கல்வி குறைவாகவும், மூட நம்பிக்கை மிகுந்தும் உள்ள தமிழர்

3000 வருடங்களாக இப்படி இருந்த தமிழினம் தற்போது அறைகுறை கல்வியுடன் கூட வினோதமான மூட நம்பிக்கைகள் உள்ளவர்களாக மாறியுள்ளார்கள்.

ஜோதிஜி said...

இன்னமும் நினைவில் வைத்திருப்பீங்க போலிருக்கே. பேரூந்து ஓட்டுநரும் நடத்துநரும் அந்த ஊரைத்தாண்டும் போது படபடப்போடு இருப்பார்கள்.

ஜோதிஜி said...

ஆனால் இப்போது படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று பாரபட்சமே இல்லாமல் இந்த மதுப்பழக்கம் சகல இடத்திலும் வியாபித்து உள்ளதே?

ஜோதிஜி said...

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கு இலக்கு முக்கியம் என்பதை அரசாங்கம் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் இத்தனை அளவு குடிக்க வேண்டும் என்ற இலக்காக மாற்றி விட்டதோ?

ஜோதிஜி said...

சாயத்தமிழன் சாராயத்தமிழன்

வித்தியாசமான சிந்தனை. நீங்கள் கேட்டததை நண்பரிடம் கேட்டது போது கேரளா தான் ஒரு தனிமனிதன் பயன்படுத்தும் மதுவின் அளவு அதிகம் என்கிற மாதிரி பதில் அளித்தார். உங்களின் வித்தியாசமான கேள்வி ஆச்சரியமளித்தது. இன்னும் முழுமையான பதில் கிடைத்தபாடில்லை.

ஜோதிஜி said...

கஞ்சா பழக்கம் உள்ளது மரத்தில் மணி நேரத்தில் அழகான சிலை செய்ததை பார்த்துள்ளேன்.

ஜோதிஜி said...

நான் கணக்கிட்ட வரையில் ஒவ்வொரு மதுப்பாட்டிலும் பாதிக்கு மேற்பட்ட லாபம். அதற்கு மேல் இதன் மூலம் ஆதாயம் அடையும் தனிப்பட்ட நபர்கள் லட்சகணக்கான பேர்கள். இதைப் பற்றி விரிவாக எழுதும்அளவுக்கு மது மாஃபியா என்பது மிகப் பெரிய வலைபின்னல்.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே

ஜோதிஜி said...

உன்னால் முடியும் தம்பி படம் நினைவுக்கு வருகின்றது.

ஜோதிஜி said...

விசயத்தை புரிந்து கொண்டீர்கள் போல.

ஜோதிஜி said...

ஆனால் இவர்கள் வாழ்க்கையில் கடைசியில் ஒரு நாள் சங்கு ஒலிக்கும்.

ஜோதிஜி said...

இந்த தலைகீழ் மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள்.

ஜோதிஜி said...

மனிதர்களாக மாறினால் சிந்திக்கத் தொடங்கி விடுவார்களே? சிந்திக்காத வரைக்கும் தானே இலவசத்தை கொடுத்து மயக்க நிலையிலேயே வைத்திருக்க முடியும்.

ஜோதிஜி said...

குடிப்பவர்களை விட குடித்து கெட்டழிந்தவர்களுடன் மற்றவர்கள் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் இங்கே முக்கிய செய்தியாக அதுவே பெரிய கவலையாக எனக்கு தெரிகின்றது.

ஜோதிஜி said...

எல்லா இடத்திலும் இன்று வரையிலும் இப்படித்தான் உள்ளது.

Unknown said...

குடிப்பழக்கம் அவர் குடும்பப் பொறுப்புகளை ஏற்க விடாமல் செய்தது. எனவே பொறுப்பற்ற மனிதனை நம்பியுள்ள குடும்பத்தின் நிலை அது. பத்தாயிரம் சேர்த்து வைத்துள்ளார் என்றதை நம்ப முடியவில்லை அக்குடும்பத்தினரால். காரணம் அக் குடும்பத்தின் வறுமையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.