Monday, November 05, 2012

(இனி) மின்சாரமே கனவு

மின்சாரம் --  புரிந்து கொள்வதற்கு மட்டும்  பயன்படுத்த அல்ல. 1


இந்த தொடரின் கருத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தின் வாயிலாக அதில் எழுதியுள்ள முக்கிய கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்படுகின்றது.


மின் மிகை மாநிலம்.

கடந்த சில மாதங்களாக தமிழர்களுக்கு கிடைத்த தமிழ் வார்த்தை இது. அங்காடித் தெரு என்ற வார்த்தையை தமிழர்கள் திரைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டது போல இப்போதுள்ள தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறையில் அரசாங்கத்தால் சொல்லப்படும் கனவு வார்த்தை தான் மின் மிகை மாநிலம். 

மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போகின்றோம் என்ற நம்பிக்கை வார்த்தைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மாறுமா? மாற்ற முடியுமா? 


கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சியாகட்டும், தற்போது ஆண்டு கொண்டுருக்கும் அம்மையார் ஆட்சியாகட்டும் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையின் பின்னால் உள்ள உண்மையான நிலவரங்களை எவரும் புரிந்து கொள்ளவில்லை.

ஆட்சியில் இருப்பவர்களும் சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம், ஆனால் சமாளிக்க திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.  விரைவில் எல்லாமே சரியாகிவிடும் என்ற வார்த்தையை நாம் நம்பித்தான் வாழ வேண்டும்.

இது ஆட்சியாளர்களுக்கு அப்பாற்பட்ட விசயமாக மாறியுள்ளது. ஒரு துறையின் அமைச்சரையே ஒரு நிறுவனம் மனம் வைத்தால் மாற்ற முடிகின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கினறோம்.  ஆனால் சராசரி இந்திய குடிமகன் இன்னமும் இந்தியாவில் உள்ள ஜனநாயகத்தை நம்பி வாழ்ந்து கொண்டுருக்கின்றான். 

முதலில் மின்சாரம் குறித்த தொடக்க காலத்தை பார்த்துவிடலாம்.

இந்திய நாடு சுந்திரம் அடைந்த போது வெறும் 1300 அளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்பொழுது 1,24,311 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் நமக்கு தற்போதைக்கு தேவைப்படுவதை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக 1,00,000 மெகாவாட் தேவை என்று கணக்கிட்டுள்ளனர். 

தற்போது நடைமுறையில் நாம் பெறும் மின்சாரம் எந்தந்த வகையில் கிடைக்கின்றது என்பதை பார்த்து விடலாம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார தேவையில் நிலக்கரி, எரிவாயு, மற்றும் எண்ணெய் அடிப்படையில்  அமைந்த அனல் மின்சார உற்பத்தி என்பது 66 சதவிகிதமாகவும், புனல் (நீர்) மின்சாரத்தின் 26 சதவிகிதமாகவும் உள்ளது. 

இந்தியாவில் தற்போது இயங்கிக் கொண்டுருக்கும் அணுமின் உலைகள் மூலம் நாம் பெறுவது வெறுமனே 2.7 சதவிகிதமாகவும் உள்ளது. ஆனால் இயங்கிக் கொண்டுருக்கும் அணுமின் உலைகளுக்கு இந்திய அரசாங்கம் செலவழித்த, செலவழித்துக் கொண்டுருக்கும் தொகையானது தனியாக பார்க்க வேண்டும்.  

இந்த அணு உலைகள் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு என்ற ஒரு வார்த்தைக்குள் முடித்து விடுவார்கள். 

காரணம் அதற்கு பின்னால் உள்ள அத்தனை விசயங்களும் அணுகுண்டு ரகசியங்களைப் போல இருப்பதால் நாம் இப்போது அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. 

அணு உலைகளை தயாரிப்பவ்ர்கள், அதனை விற்பவர்கள், இடைத்தரகர்கள், சர்வதேச நாடுகள், இடையில் உள்ள லாபிக்களுடன் சேர்ந்து பயன்படும் இந்திய அரசியலில் உள்ள செல்வாக்கு படைத்தவர்கள் பெறும் ஆதாயங்கள் என்று அதன் அத்தியாயம் தொடர்கதை போலவே போய்க் கொண்டுருக்கும்.

இது நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்று சொல்வார்கள். நாமும் பயத்தோடு ஒதுங்கியிருப்பது தான் சரியாக இருக்கும்.

1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் 5,93,732 கிராமங்களில் 4,74,982 கிராமங்கள் மின் இணைப்பை பெற்றிருந்தன. அதாவது 80 சதவிகித கிராமங்கள் மின்சாரத்தை உபயோகிக்கும் கிராமங்களாக இருந்தன. இந்த சமயத்தில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். 

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 13.83 கோடி வீடுகள் கிராமங்களில் இருந்தன. ஆனால் இந்த தொகையில் 60.20 சதவிகித வீடுகளால் மட்டுமே மின்சாரத்தை உபயோகிக்கும் வசதிகள் இருந்தன. 

கிராமங்களில் உள்ள வீடுகளில் மின்சாரத்தை பயன்படுத்தும் கட்டமைப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அவர்களால் மின்சாரத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டுருந்தனர். 

இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முன்னால் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் தாராளமயமாக்கல் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது.  அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் தற்போதைய பாரத பிரதமர் மன் மோகன் சிங். 

அப்போது உருவான திட்டம் 2012 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வாழ்ந்து கொண்டுருக்கும் அனைவருக்கும் மின்சாரம் என்ற கொள்கை வகுக்கப்பட்டது.  அப்போது உருவானது தான் கிராம மின்மயமாக்கலுக்கான விரைவுத் திட்டம். ( A COMPREHENSIVE'  BLUE PRINT FOR POWER SECTOR DEVELOPMENT )

இப்போது 2012 ஆம் ஆண்டு முடியப் போகின்றது. பொருளாதார மேதை மன் மோகன் சிங் கூட பிரதமராகவும் இரண்டாவது முறையாகவும் இந்தியாவை ஆண்டு கொண்டுருக்கிறார். 

உருவான திட்டம் தவறா? உருவாக்கியவர்களின் தவறா?

இவர்கள் இந்த திட்டத்தை உருவாக்கும் போது மற்றொரு விசயத்தையும் தெளிவு படுத்தினர்.    இந்தியா 8 சதவிகித பொருள் உற்பத்தியை (GDP) அடைய இந்திய மக்கள் வறுமை நிலையை தாண்டி மேலே வந்து விட வேண்டும். அதற்கு நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியமானது என்றனர்.

ஆனால் தற்போதைய நிலைமை?


இந்தியாவில் நடுத்தரவர்க்கமும், அடித்தட்டு மக்களும் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கைக்கு பெயர் 'தர்மசங்கடமான சூழ்நிலை' அல்லது 'ரெண்டாங்கெட்டான் வாழ்க்கை' எனபதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒரு விதமான கிடுக்கியில் அகப்பட்ட ஜந்து போலத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றோம். நாம். வாழ்ந்த பழைய வாழ்க்கைக்கும் செல்ல முடியாது. தற்போதையை வாழ்க்கையிலும் விரும்பியபடி வாழ முடியாது.  இது தான் இப்போது நடந்து கொண்டுருக்கிறது.  

காரணம் நாம் விஞ்ஞானத்தின் மூலம் பெற்ற வசதிகள் அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகள், அனுபவிக்கும் சந்தோஷங்களை. விட்டு ஒதுங்கி நிற்க நமக்கு மனம் வருமா?

உங்க வீட்டில் மிக்ஸி கூட இல்லையா? என்று ஏளனமாக கேட்கும் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.  அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவை எப்படியிருக்கும் என்றே சமகாலத்தில் உள்ளவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக உள்ளது. நாம் உடல் உழைப்பை குறைத்து பொருள் ஈட்ட வேண்டிய நடைமுறை வாழ்க்கைக்கு மாறி வெகுகாலமாகிவிட்டது. 

மின்சாரத்தின் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இது தவிர தன்னுடைய சுகத்திற்கு, வசதிக்கு என்று ஏராளமான பொருட்கள் தினந்தோறும்  சந்தையை ஆக்ரமித்துக் கொண்டேயிருக்கிறது.

ஆசைகளுக்கு அளவில்லை.  அதே சமயத்தில் அவஸ்த்தைகள் என்பதும் இயல்பானதாக மாறியும் விட்டது.

அந்நிய செலவாணியை கணக்கில் வைத்து இன்று இந்தியா என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஒரு சந்தையாக மாற்றியுள்ளனர். வரப்போகும், வந்து கொண்டுருக்கின்ற, வந்த அத்தனை நிறுவனங்களுக்கும் நம் நாட்டில் தற்போது உற்பத்தியாகிக் கொண்டுருக்கும் மிச்ச சொச்ச மின்சாரத்தையும் கருணை அடிப்படையில் ஆட்சியாளர்கள் வழங்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

உள் நாட்டு தொழிற்சாலைகள் அம்போவென்று விடப்பட்ட போதிலும இன்னமும் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கென்று திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும் தங்கள் வாழ்க்கையை வாழ முடியாதவர்களின் திட்டுக்கள் எதுவும் ஆள்பவர்களின் காதுக்கு செல்வதில்லை. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி என்று திட்டமிட்டவர்கள் இன்றும் திறமைசாலிகள் என்ற போர்வையில் தான் ஆட்சியில், அதிகாரத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  

தாங்கள் உருவாக்கிய திட்டங்கள் நடைமுறையில் எப்படி மாறியுள்ளது என்பதை அறிந்த போதிலும் இன்னமும் அவர்களுக்கு விழிப்பு வந்தபாடியில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியம் லாபத்தில் செயல்பட்டுக் கொண்டுருந்த ஒரு நிறுவனம். மற்ற மாநில மின்சார வாரியங்களைக் காட்டிலும் முதன்மையான இடத்தில் தான் இருந்தது. 

ஆனால் இன்று?  

53,000 கோடி நஷ்டம்.  ஆனாலும் இன்று நமக்கு பயன்படுத்த மின்சாரம் இல்லை.

'"அமைதியாக பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும். 

அடுத்த வருடம் இறுதிக்குள் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற்றிவிடுவோம்" என்று ஆட்சியாளர்கள் சொல்வது உண்மையா?

வாய்ப்புகள் உள்ளதா?

தொடர்ந்தால் ஷாக் அடிக்கும்....................


7 comments:

ப.கந்தசாமி said...

நம்ம சமாசாரம், சம்சாரம் இல்லீங்க, (கம்ப்யூட்டர்) எத்தனை மின்சாரம் குடிக்கும்னு சொல்லாம உட்டுட்டீங்களே?

திண்டுக்கல் தனபாலன் said...

(இனி) மின்சாரமே கனவு..

(அடுத்து) குடிதண்ணீரே கனவு...

பல அலசல்களுக்கு நன்றி...

வடுவூர் குமார் said...

தொடர்ந்தால் மட்டும் ஷாக் அடிக்காது தொட்டாலும் அடிக்கும்.
பல விஷயங்கள் இப்படித்தான் “சமீபத்தில் தூங்கி எழுந்த மாதிரி” இருக்கும்,அதில் மின்சார பற்றாக்குறையும் ஒன்று.

வவ்வால் said...

ஜோதிஜி ,

இன்றைய நிலையில் மின்சாரம் ஒரு எரும்பொருள் ஆகிவிட்டது.

மிகை மின் மாநிலமாக ஆகும்னு சொல்லக்காரணம் பல திட்டங்கள் அரைகுறையாகவும், பல காகித அளவிலும் ஒப்புதல் ஆகி இருக்கு, அதெல்லாம் நடைமுறைக்கு வந்திடும்னு ஒரு நம்பிக்கையில் சொல்வது.

திருவள்ளூர், மீஞ்சூர், கடலூர், தூத்துக்குடி என பல இடங்களில் பெரிய பிராஜெக்ட் போயிட்டு இருக்கு , திருவள்ளூர் 2011 இல் திறக்க வேண்டியது, பூட்டுக்கு சாவி இன்னும் கிடைக்கலையாம் :-))

ஜோதிஜி said...

பழனி கந்தசாமி

நீங்கள் கேட்டதற்கு.

Most standard types using dual core processors from a few years ago consume around 80 watts. The newer core consume less power these days.

Atom processors as very low power and can be as low as 50 watts. The best idea is the amount of battery life you get for the unit. At around 2 hours you are looking at the higher end 80-90 watt but the 5-6 hour units are closer to 50-60 watts.

Laptops are far lower power than a desktop which has a 400 watt psu, 50 LCD and other gadgets.


வாங்க தனபாலன், குமார்.

வவ்வால் நீங்க சொல்றது உண்மை. ஆனால் இந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் செய்து கொண்டு இருக்கும் நடவடிக்கைகள், அதன் செயல்பாடுகள் தான் பலருக்கும் வெளியே தெரிவது இல்லை. அதைப்பற்றி சொல்லத்தான் இந்த தொடரை தொடங்கினேன்.

வவ்வால் said...

ஜோதிஜி,

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது அரசின் செயல்பாட்டினை தூக்கி ஒரு அமைப்பின் மீது போட்டு தப்பவே, அதற்கு தான் அப்படி உருவாக்கி வைத்துள்ளார்கள்.

வருங்காலத்தில் இவ்வாணையம் டிராய் போல ஆகிவிடும், மின் உற்பத்தி ,விநியோகம் எல்லாம் தனியார் கையில் போக வாய்ப்புள்ளது, அதற்கு தோதாக மின்சாரவாரியம் ஒரு லிமிட்டர் நிறுவனமாக மாற்றப்பட்டுவிட்டது.

பொது துறை எண்ணை நிறுவனங்கள் போல,பிற்காலத்தில் சந்தை விலை , பங்கு வெளியீடு, தனியார் முதலீடு என பயணிக்கும்.

இதனை எல்லாம் எனது மின்சாரக்கொடுங்கனவுகள் பதிவிலும் சொல்லி இருக்கிறேன், சரியா கவனிக்கலைனு நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

வவ்வால் படித்தேன். ஒரு தலைப்பில் உங்கள் தலைப்பை இணைப்பு கொடுத்துள்ளேன். ஆனால் காந்தி அந்த துறையில் இருந்த காரணத்தால் இன்னமும் எளிமையாக சொல்லியுள்ளார். அடுத்த தலைப்பு வெளியிட்டு உள்ளேன். பாருங்க.