Friday, January 27, 2017

அடிச்சுவடுகளை அங்கங்கே பதிக்கவும்

பழைய குப்பைகள் மதிப்புரை 

‘வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முறை வைத்துக் கூட்டிப் பெருக்கிக் கொண்டே இருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில் வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில்குப்பைகள் இருந்து கொண்டே இருக்கும்’ என்று சொல்லும் ஜோதிஜிதன் மனதில் தேங்கிக் கிடக்கும் பழைய குப்பைகளை வெளியே கொட்ட முயன்றிருக்கிறார் இந்த மின்னூல் மூலம்.

அவரது பல கட்டுரைகளை, சில மின்புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.அவரது எழுத்துக்கள் எந்தவிதப் பாராபட்சமுமின்றி அகப்பட்டவர்களை எல்லாம் ‘சுருக் சுருக்’ என்று ஊசியாய் குத்தும். ‘நறுக் நறுக்’ என்று கேள்விகள் கேட்கும். உண்மைகளை அப்பட்டமாய் போட்டு உடைக்கும்.இந்தப் பழைய குப்பைகளில் ‘சுருக் சுருக்’, ‘நறுக் நறுக்’ சற்றுக் குறைவு.ஏனெனில் இது அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிய சுயஅலசல். கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்ததால் தான் இவரும் இப்படி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.நடுநடுவே இதுவரை வெளிக்காட்டாத தனது மென்மையான பகுதியை இந்தப்‘பழைய குப்பைகள்’ மூலம் வெளிக் காட்டியுள்ளார் என்று சொல்லலாம்.

தனது தொழில் நிமித்தம் தான் வாழும் வாழ்க்கையைவிட இவர் மிகவும் ரசிப்பது தனது எழுத்துலக வாழ்க்கையைத் தான். என்னவென்று தெரியாமல் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தவர்,பல்லாயிரக்கணக்கான வாசிப்பாளர்களை, ரசிகர்களைப் பெற்றுத் தந்த தமிழ் இணையத்தை நினைவு கூர்கிறார்,இந்தப் பழைய குப்பையில்.‘ஏதோ ஒரு காலத்தில் நிச்சயம் இறந்துவிடத்தான் போகிறோம். நாம் விட்டுச் செல்வது குடும்பத்திற்கான நலன் என்பதோடு, சமூகத்திற்கான பங்களிப்பு; நாம் இல்லாதபோதும் நம்மைப்பற்றி நம் எழுத்துக்கள் புரிய வைக்கும். வலைப்பதிவு எழுத்தென்பது உணர்ந்தவர்களுக்கு வாழ்நாள் பொக்கிஷம்’என்கிறார்.

எழுத்தின் மூலம் நண்பர்கள் ஆனவர்களிடமிருந்தும், விமரிசனம் என்ற போர்வையில் ‘நீ இப்படித்தான்’ என்று ஒரு முத்திரை பதித்து ஓரம் கட்டப்பார்ப்பவர்களிடமிருந்தும்இவர் கற்றதும், பெற்றதும்இவரைஅடுத்த நிலைக்கு நகர வைத்திருக்கிறது. சமூகம் பற்றிய ஆழமான கட்டுரைகளை எழுத இவருக்குஆவல் பிறந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

‘புதிதாக வலைத்தளங்களில் எழுத ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் எதைப்பற்றி எழுத வருகிறதோ,அதை எழுதலாம். ஆனால் படிப்படியான மாறுதல் இந்த எழுத்துக்களத்தில் நிச்சயம் தேவை. நீங்கள் ரசித்து எழுதும் ஒருவிஷயம் படிப்பவர்களைக் கவராமல் போகலாம். நீங்கள் மேம்போக்காக எழுதுவது மிகுந்த வரவேற்பைப் பெறலாம். இதற்குக் காரணம் படிப்பவனின் வாழ்க்கையை எழுதுபவனால் யூகிக்க இயலாமல்போவதுதான்’ என்று சொல்லும் ஜோதிஜி, சமூகம் சார்ந்து எழுதும்போதுதான் நமது எழுத்துத் தகுதிகள் நமக்குப் புரிய வரும் என்கிறார்.தான் கடந்து வந்த ஒவ்வொரு நிலையையும் பதிவு செய்யும் போதே அப்போதைய சமூகநிலை பற்றிய தனது எண்ணங்களையும் எழுதி வருகிறார்.பல வலைப்பதிவாளர்கள் இதைச் செய்வதில்லை என்பதையும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

வேர்ட்ப்ரஸ் தளத்தில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தவர் முதலில் எழுதியது தனது தந்தையைப் பற்றித்தான். எந்தத் தந்தை தனது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக நினைத்தாரோ அவரைப் பற்றிய எண்ணங்கள் தனது மகள்கள் பிறந்ததும் மாறியதை, ‘கால் நூற்றாண்டு காலம் அவரை வெறுத்துக்கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடித் தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் மீது முதன் முறையாக மரியாதை உருவானது’ என்றுகுறிப்பிடுகிறார்.தனது எழுத்திற்கு மூலகாரணமாக தன் அப்பா வாங்கிப்படித்த ‘தினமணி’யில் வந்த கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளையும், துணுக்குச் செய்திகளையும் சேகரித்து வைத்த தனது வழக்கத்தையும், தனது புத்தகம் வாங்கும் பழக்கத்தையும் சொல்லுகிறார்.ஆறாம் வகுப்பில் ஆரம்பித்த தனது வாசிக்கும் பழக்கம் படிப்படியாக மாறி வந்ததையும் சொல்லுகிறார்.

திருமணமும், தொடர்ந்து பிறந்த இரட்டையர்களும் தனது காட்டாற்று வாழ்க்கையை நதியாக மாற்றியதை சொல்லும்போது நாம் இதுவரை அறிந்திராத மென்மையான மனம் படைத்த ஜோதிஜி நம் முன் தோன்றுகிறார்.அதேமென்மை மாறாமல் தனது சொந்த ஊர் பற்றிச் சொல்லுகிறார். அந்தக் காலத்தில் தன் மனதை நிறைத்த முதல் காதலையும்,‘அவளது’ பெயரையும், தனது பெயரையும் செதுக்கி வைத்த ஆசை மரத்தைப் பற்றியும்ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறார்.

(இன்னொரு புத்தகத்திற்கென்று சேமித்து வைத்திருக்கிறாரோ?)

மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்த தன் அம்மா தனது அமைதியான நடவடிக்கை மூலமே தனது அப்பாவின் முரட்டுத்தனத்திற்கு ஈடு கொடுத்ததைச்சொல்லுகிறார்.அதே அம்மாவிற்கும் தனது குழந்தைகளுக்கும் இடையே நிற்கும் தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிறார். தன் குழந்தைகளின்வாழ்க்கையை தினமும் ரசிக்கும் ஒரு அப்பாவாக தனது நிலையை வெகு சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார். நடுவேஇன்றைய கல்வியின் தரம் பற்றியும் தனது ஆதங்கத்தை வெளியிடத் தவறவில்லை.(தற்போதைய கல்வியின் பலன் –அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று கேட்கும் குழந்தைகள்)

உலகத்தை உணர வைத்த காலங்களை ஒவ்வொன்றாக நினைவிற்குக் கொண்டு வந்து சொல்லிக்கொண்டே போகிறார்.தான் பிறந்த செட்டிநாடு, அதன்மக்கள் என்று ஆரம்பித்து வள்ளல் அழகப்பருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறார்.

தான் செய்த ரயில் பயணம் தன் ஊர் ரயில்வே ஸ்டேஷனை, அதன் நீண்ட நடைமேடையை(‘அதுதான்என்போதிமரம்’) நினைவுபடுத்த அதைப்பற்றியும் சொல்லுகிறார். ஒவ்வொரு  இடமும் காலப்போக்கில்  உருமாறியிருந்த போதிலும் இவரது நினைவுகள் அங்கங்கே நிலைத்திருப்பதை நாம் உணரமுடிகிறது.

அரசியல், விளம்பரங்கள் என்று தன் பாணியில் வெளுத்து வாங்குபவர் சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை என்று களம் புகுகிறார். 2 களங்களில் தான் கண்டதை, கேட்டதை எழுதியவர், மூன்றாவதாக தன் குழந்தைகளுடன் சாதி, மதம் பற்றிய தனது உரையாடல்களை குறிப்பிடுகிறார். தனது கருத்துக்களுடன் தலைவர்கள் சாதிப் பெயரில் விளையாடும் விளையாட்டுக்களையும் தோலுரித்துக் காட்டுகிறார். அங்கெல்லாம் நமக்குத் தெரிவது ஏற்கனவே நாம் அவரது வலைத்தளங்களில் பார்த்த ஜோதிஜி தான்.

அடுத்ததாக இவர் ஆன்மிகம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார். திருவாவடுதுறை ஆசானுடன் தான் செய்த பயணம்; பயணத்தின் முடிவில் வந்து சேர்ந்த மடம்; அதன் பூர்வீக வரலாறு (இங்கும் இன்னொரு புத்தகம் தேறும்!) இப்போதைய அதன் நிலைமை, எதிர்கால நிலைமை எல்லாவற்றையும் சொல்லுகிறார். இதன் தொடர்ச்சியாக ஆன்மீகத்தைப் பற்றி இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்களும் உண்டு. முதல் சில அத்தியாயங்களில் இருந்த மென்மை இங்கு அடியோடு மாறி தடாலடியாகப் பேச ஆரம்பிக்கிறார் ஜோதிஜி.

கடைசி பகுதி கேள்வி-பதிலாக அமைந்திருக்கிறது.

மொத்தப் பழைய குப்பைகளையும் கிளறிப் பார்த்த பின் – மன்னிக்கவும் – படித்துப் பார்த்தபின் மனதில் வந்த எண்ணங்கள்:

1. கரடுமுரடர் என்ற பட்டம் வாங்கிய ஜோதிஜிக்கு மென்மையான பக்கமும் உண்டு.

2. எங்கு போனாலும் அங்கிருக்கும் மனிதர்களையும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் கூர்ந்து கவனித்து எழுதும் எழுத்தாளராக தன்னை இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இவரது சமூக அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது.

3. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போகும்போது தான் கற்றுக் கொண்டு போவதுடன் தன் அடிச்சுவடுகளை அங்கங்கே பதிக்கவும் தவறுவதில்லை.

4. தான் நிறைய சிந்திப்பதுடன், நம்மையும் அதிகமாகச் சிந்திக்க வைப்பது இவரது சிறப்பு என்று சொல்லலாம்.

5. எத்தனை உயர்ந்த நிலைக்குப் போனாலும் தனது முதலடியை மறக்காத மனிதராக இருப்பதால் தான் இப்படி எல்லாவற்றையும் பற்றி சமமாக எழுத முடிகிறது என்று தோன்றுகிறது.

திரு ஜோதிஜிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

திருமதி ரஞ்சனி நாராயணன்
பெங்களூர்.







பழைய குப்பைகள் (மின் நூல்)


இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்


ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்  (51.356)

தமிழர் தேசம்  (16.652)

காரைக்குடி உணவகம் (23.713)

பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)

வெள்ளை அடிமைகள்  (16. 943)



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மதிப்புரை : ரஞ்சனி அம்மா - உண்மையிலே ஒரு நொடி திகைத்தேன்...

முடிவில் கூறிய ஐந்தும் 100% உண்மை...

Rathnavel Natarajan said...

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு ஜோதிஜி. பாசாங்கில்லாத எழுத்தாற்றல். அருமை. நன்றி.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான விமர்சனப் பார்வை....
கடைசியில் அண்ணன் குறித்துச் சொல்லியிருப்பவை மிகவும் சரி அம்மா...