Sunday, December 03, 2017

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலா


வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் - நூல் விமர்சனம் 3

எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சி என்பது பிரசித்தமானது. வெகுஜன மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் படங்கள் திரையரங்கத்திற்கு எந்த அளவுக்கு லாபம் தரக்கூடியதோ அந்த அளவுக்கு ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களால் நஷ்டங்களையும் சந்தித்தது. உடைந்த சேர்களும், கிழிந்த இருக்கைகளும் அதிகம்.

நல்லவன். கெட்டவன். என்ற இரண்டே விசயங்களை வைத்துக்கொண்டு சித்து விளையாட்டு காட்டியவர். இறுதியில் எம்.ஜி.ஆர் வில்லனை வெல்வார் என்பதே. ஆனால் எம்.ஜி.ஆர் வாழ்க்கை முழுக்கக் கடைசி வரையிலும் தோற்றது ஜெயலலிதாவிடம் மட்டுமே.

தான் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தெரிந்தே தோற்றுக் கொண்டிருந்தார். 

தான் செலுத்திய அன்பைப் புரிந்து கொள்ளாமலும், அதே சமயத்தில் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமலும் தனக்குத் தானே மன உளைச்சலை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஜெ மேல் வைத்திருந்தது அன்பல்ல. ஆதிக்கம் என்று வைத்துக் கொண்டாலும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வைத்த பெயர் பெட்டை. இதன் அர்த்தத்தை விவரிக்கத் தேவையில்லை. 

இவர் முகத்தை மட்டுமே பார்ப்பதற்காக நாள் முழுக்கக் காத்திருந்த கோடிக்கணக்கான மக்களிடமிருந்த இவரின் அபரிமிதமான புகழும் செல்வாக்கும் எங்கே? ஒவ்வொருநாளும் ஜெ வுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காட்சிகளை எல்லாம் வாசிக்கும் போது தனி மனிதனின் அந்தரங்கமாகத் தெரியவில்லை. ஒரு தலைமைப்பண்பு உள்ளவரின் இருக்கத் தேவையில்லாத குணாதிசியங்களின் அவலமாகத்தான் தெரிகின்றது. 

தனக்குச் சொந்தமானதை வேறு எவரும் சொந்தமாக்கிவிடக் கூடாது என்பது அவரின் பிடிவாத கொள்கை. ஆனால் இதற்காக அவர் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அவர் வாழ்நாள் முழுக்க இதற்காகவே தன் ஆரோக்கியத்தைப் பரிசாகத் தர வேண்டியிருந்தது. மன நலத்தைப் பாதித்தது. கடைசியில் தன் முதல் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைக்கப் போகின்றது என்பதனை உணர்ந்து அவர் வருத்தப்பட்ட அந்தரங்க ரகசியங்கள் சிலவற்றை மட்டும் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 

ஜெயலலிதாவை மன்னர் பரம்பரை போல இன்னமும் சித்தரிப்பவர்கள் அவர் அம்மா வாழ்ந்த தொடக்க வாழ்க்கைப் பற்றிச் சில இடங்களில் வருகின்றது. ஆதாரங்களும், அதைக் கண்டவர்களைப் பற்றியும் குறிப்புக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் அம்மா தமிழ்நாட்டில் தொடக்கத்தில் தேவிபட்டணத்தில் ஆயாம்மா வேலை பார்த்ததும் அதன் பிறகே அவர்களின் பூர்விகமான ஸ்ரீ ரங்கம் ஊருக்கு வந்ததைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்குள்ளவர் தொடர்பின் மூலமாகத்தான் சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடி வந்துள்ளார், சந்தியாவின் தங்கையும் அப்போது நடிகையாக இருந்துள்ளார். 

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் படங்களில் கதாநாயகியாக வளரும் அளவுக்கு வாழ்க்கை மாறியுள்ளது. இடையில் வாழ்க்கையை நடத்தக் கஷ்டப்பட்ட காலத்தில் சந்தியாவும், ஜெயலலிதாவும் பணத்திற்காகச் செய்த பல காரியங்களை மேலோட்டமாகவே எழுதியுள்ளார். ஆண் துணை இல்லாத குடும்ப வாழ்க்கையில் தங்களையே உருக்கித்தான் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளனர். 

இது ஆண் உலகம். ஆண்கள் செய்கின்ற விசயங்கள் எதுவும் பெரிதாகத் தெரியாது. ஆனால் பெண்கள் அதுவும் நடிகையாக இருப்பவர்கள் செய்த காரியங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்டவர்கள் எவர் மூலமாகவோ வெளியே வந்து தான் தீரும். இவர்களின் தொடக்க வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக  நடித்த திரையரங்க அதிபர் ஜி. உமாபதி. தொடக்கக் கால இவர்களின் அழுக்கைப் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர் இவருக்கு வழங்கிய வாய்ப்புகளும், உதவிகளும் கடைசியில் அவருக்கே எதிராகவே வந்து சேர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆரின் புகழும், அவர் இருந்த பதவியும் ஜெயலலிதாவிற்கு முக்கியமாகத் தெரிந்தது. ஜெயலலிதாவின் எண்ணமும், அடுத்தடுத்து நகர்த்திய செயல்பாடுகளும் அதை நோக்கியே நகர்ந்தது. இது அரசியல் மட்டுமல்ல. பணம், புகழ் அதிகம் இருக்கும் அனைத்து துறைகளிலும் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்கள் செய்யக்கூடியதே. மன்னர்கள் காலம் முதல் படையெடுப்பாளர்கள் காலம் வரைக்கும் எவர் தமக்கு உதவி செய்தார்களோ அவர்களை முடித்துக் கட்டுவது தான் வாடிக்கையாக இருந்துள்ளது. காரணம் சொல்லத் தேவையில்லை. தன்னைப் போல மற்றவர்களுக்குச் செய்துவிடக்கூடாது என்பதே பிரதான காரணம். 

மற்றது எல்லாம் பிறகு தான். 

ஜெயலலிதா வாசித்த புத்தகங்கள் அவருக்கு அரசியல் ஆசைகளை உருவாக்கியது. அது தான் முதல் காரணம். முக்கியக் காரணம். கற்பனைகள் எல்லாமே எதார்த்தத்தில் பொருந்தி போய்விடுவதில்லை. ஆனால் உருவான இடையூறுகளைத் தாண்டி ஹைதராபாத் சென்று தங்கிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றி இங்கே தங்க வைத்தவர்கள் சசிகலா மற்றும் நடராஜன். 

ஜெயலலிதாவின் ஆசைகளை முழுமையாக்கிய பெருமை சசிகலா மற்றும் நடராஜனையே சாரும். ஒரு மூளையில் இருந்து உதிக்கும் சிந்தனைகளுக்கும் அதுவே மூன்று மூளைகளில் உருவாகும் செயல்பாடுகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும்? என்பதனை உங்களால் யூகிக்க முடிந்தால் ஏன் வெகுவிரைவில் ஜெயலலிதா முதல் அமைச்சர் பதவியில் அமர முடிந்தது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளும் சசிகலா வாழ்க்கையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் தான். ஒரு கிராமத்துப் பெண். கிராம வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் பார்த்திராத பெண். அரசு அதிகாரியாக இருந்த நடராஜனுடன் திருமணம் நடக்கின்றது. சென்னையில் ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. சசிகலா முதல் முறையாகச் சென்னை வருகின்றார். சென்னையில் யாரையும் தெரியாது. தங்குவதற்கு இடம் கூட இல்லை. சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கொடுத்த கடிதம் மட்டும் கையில் உள்ளது. காட்சிகள் மாறுகின்றது. ஆனால் கால் நூற்றாண்டு காலத்திற்குள் அகில உலகத்திற்கும் தெரிந்த நபராக மாறியுள்ளார். 

இவர் குடும்ப உறுப்பினர்களிடத்தில் உள்ள சொத்துக்களின் மொத்த அளவு என்பதனை எவராலும் இன்று வரையிலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகம் செய்து வைத்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கடைசியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? சசிகலா அதிமுகத் தலைமைச் செயலகத்திற்குத் தான் வந்த ஆட்டோவிற்கு அதிமுகக் கழகத்தில் உள்ளவர்களிடத்தில் ஐந்தும், பத்துமாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் என்றால் இன்று நம்பும்படியாக உள்ளதா?

ஜெயலலிதா, சசிகலா காலில் விழாத அரசியல்வாதிகளை இனி யாராவது மிச்சம் மீதி இருக்கின்றார்களா? 

சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நடராஜனைச் சார்ந்தது இருந்தது. நடராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையும் எவரும் நினைத்துப் பார்க்காத பொன் முட்டையிடும் வாத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தது. திட்டமிடுதலும், களப்பணியும் சரியாக இருக்க வேண்டும். அது காலச் சூழலுடன் ஒத்துப் போக வேண்டும். இதற்குச் சமகாலத்தில் மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை முறை தான். 

ஜெயலலிதாவிற்குத் தொடக்கத்தில் 14 பேர்கள் கொண்ட பாதுகாப்புக் குழுவை அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த திருநாவுக்கரசு தான் தன் சொந்த செலவில் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படையை நீக்கியது முதல் ஜெயலலிதாவின் உறவு முதல் நட்பு வட்டம் வரைக்கும் பார்த்துப் பார்த்து களையெடுத்த சசிகலா நடராஜனின் ராஜதந்திர நடவடிக்கைகளைப் பல இடங்களில் வலம்புரி ஜான் அதீதமாகப் பாராட்டி எழுதியுள்ளார். ஜெயலலிதா மனதில் அரசியல் ஆசை துளிர்விட்ட காலம் முதல் அவர் முதல் முறையாக முதலமைச்சர் பதவியேற்ற நாள் வரைக்கும் எத்தனையோ பேர்கள் உதவியுள்ளார்கள். பட்டியல் நீளம். ஆனால் அவர்கள் ஒருவர் கூட அருகில் இல்லாதவாறு பார்த்த பெருமை சசிகலா நடராஜனையே சாரும். 

இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட விசயத்தை ஜான் சுட்டிக் காட்டி எழுதுகின்றார். 

மன்னர் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் கடந்த எழுபது ஆண்டுக் கால இந்திய சரித்திரத்தில் பிராமணர்களைத் தவிர்த்து எந்த உயர் பதவிகளும் இருந்ததே இல்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் தான் இருப்பார்கள். இது அவர்களின் தனித்திறமை அல்லது புத்திசாலித்தனம். ஆனால் நடராஜன் தான் இந்த லாபி வட்டத்தை உடைத்துக் காட்டியவர். "எங்காத்து பொண்ணு வந்திருக்கா" என்று சிலாகித்த எந்தப் பிரமாணர்களும் ஜெ பக்கத்தில் நெருங்க முடியாத அளவிற்கு வலைப்பின்னல் சரியாகவே உருவாக்கி வைத்திருந்த சசிகலா நடராஜன் திறமையை எப்படிப் பாராட்டுவது? 

ஜெயலலிதாவிற்கு என்ன தான் திறமையிருந்தது? என்பது குறித்து வரலாற்றில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமில்லை. எடுத்தேன்? கவிழ்த்தேன் ரீதியான நபரைப் பொம்மை போல வைத்துக் கொண்டு மொத்த அதிகாரங்களையும் தாங்கள் கையில் வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிய அவர்களின் திறமையைப் பல இடங்களில் வலம்புரி ஜான் சிலாகித்து எழுதியுள்ளார். 

குறிப்பாக நடராஜன் வேட்டை நாய் போலவே தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளார். எதிரி என்றால் அழித்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. கணவன் வெளிப்புறம். மனைவி உட்புறம் என்பது எழுதப்படாத விதியாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் மொத்த விதியையும் மாற்றிய பெருமை இவர்களையே சேரும். சசிகலா நடராஜன் குறித்து அவர்களின் சகல பாகங்களையும் செய்த பாவங்களையும் பலரும் பல இடங்களில் பாகம் குறித்து எழுதிவிட்டனர். 

இவர்களைப் பற்றி வலம்புரி ஜான் எழுதிய வாசகம் பொருத்தமாக உள்ளது. 

ஜெயலலிதா செய்த வேலை எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகளை அழித்து ஒழித்தது. ஆனால் சசிகலா செய்தது ஜெயலலிதாவின் விசுவாசிகள் என்பது அறவே இருக்கக்கூடாது என்பதனை கர்மசிரத்தையுடன் செய்து முடித்தது.

தீபா, தீபக் போன்ற பெயர்கள் கூட ஜெயலலிதா இறப்புக்குப் பின் தானே நமக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் விலை வைத்திருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரோ விலை என்பதே இல்லை. அனைத்தும் நமக்குரியது என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரூபித்தனர். 

தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பலகீனம் இருந்தால் அது எந்த அளவுக்கு நாச விளைவுகளை நாட்டுக்கு உருவாக்கும் என்பதனை தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கை வழியே நமக்குப் பலவிதங்களில் உணர்த்திக் காட்டிச் சென்று உள்ளனர். 

ஆனால் ஜெயலலிதா வாசித்த புத்தக அறிவு மூலம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ஆளுமை எதுவும் அவரின் செயல்பாட்டில் காட்ட முடியாத அளவிற்குப் பரந்துபட்ட மனசு இல்லாமல் போனதற்கு முக்கியப் பல காரணங்களில் சசிகலா குடும்பமே முக்கியக் காரணமாக இருக்கின்றார்கள். 

காலம் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் அவரவருக்குண்டான சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை அவ்வப்போது வழங்கத் தான் செய்கின்றது. சிலர் சரியான சமயத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டு விடுகின்றார்கள். சிலர் அந்த வாய்ப்பு வந்ததை அறியாமல் கோட்டை விட்டு வாழ்நாள் முழுக்கப் புலம்பும் மனிதராக வாழ்கின்றார்கள். ஜெயலலிதாவிற்குத் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுக்கும் உண்டான பெரிய வித்தியாசம் ஒன்று என்னவென்றால் மொத்த அதிர்ஷ்டமும் இவர் பக்கம் இருந்தது. ஆனால் இவரின் அதிர்ஷ்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. 

உடல் உறுப்புகள் மொத்தமாக மாற்றி, சாவுக்கு மிக அருகே சென்று வந்தும் கூடத் தன் குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியாத நடராஜனின் சமீப பேட்டிகளை வாசிக்கும் போது அவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் போது அவரது எண்ணங்கள் எப்படியிருந்துக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. எம்.ஜி.ஆர் கடைசிக் காலத்தில் நோய் என்ற வலைக்குள் மாட்டிக் கொண்டார். ஆனால் அவருக்குண்டான உதவிகள் கிடைத்தது. எதுவும் மறைக்கப்படவில்லை. மறுக்கப்படவில்லை. 

ஆனால் ஜெயலலிதா வாழ்க்கையில் மொத்தமும் தலைகீழ். என்ன நடந்தது? என்ன நடந்திருக்கும்? என்பதனை இன்னமும் தமிழ்கூறும் நல்லுலகம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.

இது தான் சசிகலா? 

எம்.ஜி.ஆர் உடல் நலிவுற்று இருந்த போது ஜெயலலிதா இவரால் இந்தச் சூழ்நிலையில் கூடத் தமிழ்நாட்டை ஆள முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது? என்று கேள்வி எழுப்பியவர் என்றால் அரசியலை எந்த அளவுக்குப் பார்த்துள்ளார்? என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் என்பதும் முதல் அமைச்சர் நாற்காலி என்பதும் இப்போது கூட இரண்டு வெற்றிப்படங்கள் நடித்து விட்டால் அது நமக்குச் சொந்தம் என்று கருதும் தமிழ் நடிகர்கள் சொல்லும் விளையாட்டு நாற்காலி போலத்தானே இருக்கின்றது? 

பல புத்தகங்கள் வாசித்த ஜெயலலிதா தமிழக அரசியலைப் பற்றி எப்படிப் புரிந்து வைத்திருக்கக்கூடும்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தனக்குத் தெரிந்த ஆங்கில அறிவே அனைத்துக்கும் அருமருந்தாக இருக்கும் என்று கடைசி வரைக்கும் நம்பினார். ஆங்கிலம் தெரியாதவர்கள் அவர் பார்வையில் மனிதர்களாகவே தெரியவில்லை. 

தாழ்வு மனப்பான்மை என்பது பல சமயங்களில் உயர்வு மனப்பான்மையாகத் தெரியும். தன்னுடைய காயங்கள், தன் அழுக்கு, மறைக்க முடியாத தோல்விகள், மறைத்த ஆக வேண்டிய கடந்த கால அசிங்கங்கள் அனைத்தும் தன்னுடைய அகங்கார செயல்பாடுகளால் மறைத்து விட முடியும் என்று நம்புவர்களின் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் வாழ்க்கை. தொடக்கம் முதலே ஜாதகம் விசயங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதைப் போலவே மந்திர, சித்து வேளைகளில் அதே அளவுக்கு ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். 

வலம்புரி ஜான் தான் அதற்கும் உதவியுள்ளார். தன் உண்மையான ஜாதகத்தைப் போல மற்றொரு ஜாதகத்தையும் தயார் செய்து வைத்து மற்றவர்களைக் குழப்பும் வேலையையும் தெளிவாகவே செய்துள்ளார். பிரபல ஜோதிடர் இவரின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியவர் ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்லியுள்ளார். இந்த ஜாதகி போதை விவகாரங்களில் தள்ளியே இருக்க வேண்டும் என்பதே. நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். 

அமெரிக்கா சென்றவர் இறந்தே விட்டார் என்று நம்பி செய்த காரியங்கள் எதுவும் அவர் முழுமையாகத் திரும்பி வந்ததும் நிறைவேறவே இல்லை. ராஜ ரகசியங்கள், ராஜாங்க உள்ளடி வேலைகள் அனைத்தையும் அங்கங்கே வலம்புரி ஜான் விவரித்திருப்பதைப் பார்க்கும் போது பழிவாங்கும் குணம் அதிகம் உள்ள எம்.ஜி.ஆர் எப்படி இவர்களை எல்லாம் இவ்வளவு தூரம் விட்டு வைத்திருந்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. 

காலம் சில சமயம் கழிவுகளை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். தீமைகள் தன் பேயாட்டத்தை இறுதி வரைக்கும் நிறுத்தாது. ஆனால் வரலாற்றுப் பக்கங்கள் மொத்தத்தையும் ஏதோவொரு சமயங்களில் வெளியே கொண்டு வந்து துப்பி விடும் வல்லமை கொண்டது. 

கறை நல்லது



தொடர்புடைய  பதிவுகள்

ஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.





உங்கள் வாசிப்புக்கு மின் நூல்கள்




Thursday, November 30, 2017

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா


வணக்கம் -   நூல் விமர்சனம்  - 2

கலைஞரைப் பற்றி அவரின் தொடக்கக் கால வரலாற்றைப் பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசுபவர்களுக்கு இன்றைக்கும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற நூல் தான் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால் அதே கண்ணதாசன் எம்.ஜி.ஆர் குறித்து அலை ஓசை பத்திரிக்கையில் தொடராக எழுதினார் பாதியில் நிறுத்திவிட்டார். காரணம் பணம். கண்ணதாசனின் மொத்த கடன்களும் தீர்க்கப்பட்டது. அத்துடன் அந்த வருடமே கண்ணதாசன் அரசவைக் கவிஞராகவும் மாறினார். எம்.ஜி.ஆர் குறித்த தொடரும் நின்று போனது. தமிழக அரசியலை 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் இதனைப் பற்றித் தெரியும். 

எம்.ஜி.ஆர் தொடக்கம் முதல் அதிக அக்கறை காட்டிய இரண்டு விசயங்கள். ஒன்று தனது ஆரோக்கியம். மற்றொன்று தனது பிம்பம். திரைப்படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தனது மாயப் பிம்பம் கலைவதை எந்தக் காலத்திலும் சகித்துக் கொண்டேயில்லை. அந்தப் பிம்பத்திற்குள் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. ஆனால் நல்லது பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் அவருக்கு நிர்வாகம் தெரியாது, கோமாளி, மலையாளி என்ற அவப்பெயர்கள் துக்குநூறாகிப் போனது." நீ இருக்கும் வரையிலும் எங்களுக்கு நீ தான் ராஜா" என்று தமிழக மக்கள் மொத்த ஆதரவையும் வழங்கினர். 

ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் பழகிய ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவர். இவரைவிடவும் முக்கியத்துவம் பெற்று கடைசி வரைக்கும் அவர் நிழல் போல வாழ்ந்தவர்கள் பலர். எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைச் சுற்றி எப்படிப்பட்ட ஆட்கள் இருக்க வேண்டும்? அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் திட்டமிட்டு சரியாகவே செய்து வந்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கு உண்டான மதிப்பு வேறு. ஜேப்பியாருக்கு உண்டான மரியாதை வேறு. ஆனால் இருவருமே தங்கள் தலைவரை உயிரென நினைத்தனர். இதே போலப் பயில்வான்கள் முதல் பல்கலை வித்தகர் வரைக்கும் உண்டான அத்தனை பேர்களையும் அழகாக அவரருக்குண்டான மரியாதைகளுடன் வைத்திருந்தார். 

ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் குறித்து எழுதும் போதெல்லாம் எம்.ஜி.ஆரின் பலவீனங்களைச் சில வார்த்தைகளிலே சொல்லி புரிய வைத்து விடுகின்றார். "பலவீனம் என்பது மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அதில் விழுந்தால் யானை கூடப் பூனை தான்." 

ஆனாலும் எம்.ஜி.ஆரின் மொத்த பலவீனங்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றது அவரின் தயாள குணம். காரணம் அவரின் இளமைப் பருவத்தில் அவர் அடைந்த துன்பங்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவரும் அவர் குடும்பமும் பெற்ற துன்பங்களைக் கடைசி வரைக்கும் மறக்காமல் இருந்தது ஆச்சரியம். எவரைச் சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்பதும் இதனால் தான். 

எம்.ஜி.ஆரின் முதல் நாற்பது வருடங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூடக் கையேந்தும் நிலையில் வைத்த இயற்கையின் கருணைப்பார்வை அடுத்தடுத்து அவரை வளர்த்தது. நம்பமுடியாத அளவுக்குப் புகழ் வெளிச்சம் அவர் மேல் பரவி கொண்டேயிருந்தது. அஸ்தமனம் ஆகாத சூரியன் போலவே வாழ்ந்தார். அதனால் தான் அறிஞர் அண்ணா நம் சூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதே எம்.ஜி.ஆர் என்று உறுதியாக நம்பினார். இந்த நம்பிக்கை தான் அண்ணா முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது தான் தேர்ந்தெடுத்த அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆரின் பார்வைக்குக் கொடுத்து அவரின் ஒப்புதலையும் பெற வைத்தார். அவர் திருத்தியதையும் ஏற்றுக் கொண்டார். 

வளமிக்க, சக்திமிக்க, அதிகாரம் பொருந்திய மனிதராக மாற்றிய காலம் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை வெளியே சொல்ல முடியாத வெறுமையை, தனிமையை, உடல் பலகீனத்தை, நோயை பரிசாகத் தந்தது. 

இடைப்பட்ட காலம் தான் அவரின் பொற்காலம். வெறுமனே பொற்காலம் என்று சொல்லிவிட முடியாது. நாலைந்து பிறவிகள் ஒரு மனிதன் அடையவேண்டிய அத்தனை புகழையும், பெருமையையும் , வசதிகளையும் காலம் வழங்கிச் சென்றுள்ளது. பசி, பட்டினியைப் பார்த்தே வளர்ந்தவர் தன்னை நம்பியே இருந்தவர் என்றால் அவருக்குச் சிறிது கூட யோசிக்காமல் தன்னால் என்ன முடியுமோ? அனைத்தையும் வாரி வழங்கியுள்ளார். இது அவர் உடல் நலிவுற்று இருந்த சமயத்தில் கூட மாறவில்லை. சுய நினைவோடு இருந்த காலம் வரைக்கும் அவரின் வள்ளல் தன்மை மாறவே இல்லை. பேச்சுத் திறன் இழந்த நிலையிலும் அவரால் எப்படி இந்தக் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளாமல் வாழ முடிந்துள்ளது என்பதே மகத்தான ஆச்சரியம். 

அரசியலுக்காக, விளம்பரத்திற்காகச் செய்தார் என்றால் கூட அவர் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள், அருகே இருந்து பார்த்தவர்கள் என்று மொத்தமாக அவரின் இந்த ஈகை குணத்தைப் பல இடங்களில் எழுதியதை, கூட்டங்களில் பேசியதை கேட்கும் போதெல்லாம் அவரின் ஆழ்மன காயங்களை இதன் மூலம் தீர்க்க விரும்பியுள்ளார் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

"என்னை நம்பியவர் எவரும் கெட்டுப் போவதில்லை" என்பதனை பல இடங்களில் பல பேரிடம் தனது செய்கைகள் மூலம் நிரூபித்துள்ளார். எம்.ஜி.ஆரால் கெட்டுப் போனவர்களின் பட்டியலும் நீளம். அதற்குப் பின்னால் உள்ள காரணங்களும் அதிகம். வலம்புரி ஜான் அதனைப் பற்றி எந்தக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. ஆனால் ஜெயலலிதா மேல் புரிந்து கொள்ளவே முடியாத தீரா மயக்கம் இருந்தது ஏன்? என்று எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. 

எம்.ஜி.ஆர் எந்த விசயத்திலும் எவரையும் நம்புவதே இல்லை. ஒருவர் சொல்வதைப் பலபேர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேயிருப்பது அவரின் வாடிக்கையான பழக்கம். ஆனால் ஜெ குறித்த எண்ணங்களில் அவரால் மாற்ற முடியாத நிலைக்கே வாழ்ந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, போன்றவர்கள் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட பலவித அழுத்தங்கள், உருவாக்கப்பட்ட அச்சங்கள் எல்லாமே அவரின் ஆயுளை குறைக்கக் காரணமாகவும் இருந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில் இனி மாறித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் எடுத்த அடுத்த நாலைந்து மணி நேரத்தில் அப்படியே மாறிவிடுவார் என்பதனை அருகே உள்ளவர்கள் உணர்ந்திருந்த காரணத்தால் ஜெயலலிதா விசயத்தை மட்டும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. அதனையும் மீறி செயல்பட்டவர் ஆர். எம். வீரப்பன் மட்டுமே. 

ஜெயலலிதாவுக்குத் தொடக்கம் முதல் சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பனுக்கு வலம்புரி ஜான் மேல் தீரா கோபம். காரணம் அந்த அம்மையாருக்கு அரசியல் ஆசையை உருவாக்கிக் கொடுத்ததே இவர் தான் என்ற எண்ணத்தில் வீரப்பனுக்குப் பல காலம் வலம்புரி ஜான் வேண்டாத மனிதராகவே இருந்து உள்ளார். ஆனாலும் ஆர்.எம்.வீரப்பனின் நெருங்கிய நண்பராகவும் வலம்புரி ஜான் இருந்துள்ளார். இதில் ஒரு மகத்தான ஆச்சரியம் ஒன்று உண்டு. 

இன்று வரையிலும் ஜெயலலிதா குறித்துப் பேசுபவர்கள் இரண்டு விசயங்களைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகின்றார்கள். அவர் நடிகையாக இருந்தார். வசதிக்கு என்ன குறைவு? எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். இருவருக்கும் இயல்பான உறவு தொடக்கம் முதலே இருந்திருக்கும்? 

இரண்டுமே தவறு. 

ஒரு நடிகரை விட நடிகையின் ஆயுள் காலம் மிக மிகக் குறைவு. ஜெயலலிதா மாறிக் கொண்டேயிருந்த காலச் சூழலில் அவரின் படங்களும் எடுபடாமல் போனது. ஒதுக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் தொடர்பு இல்லாமல் தான் வாழ்ந்து வந்தார். 

எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்த ஆசைப்பட்டார். அது சார்ந்த முக்கியப் பொறுப்புகள் அனைத்து ஆம்.எம்.வீரப்பன் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரை நேரிடையாகத் தொடர்பு கொண்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெயலலிதா ஆம்.எம்.வீரப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாட்டியக்குழுவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அதிகாரிகள் கூட ஜெயலலிதாவை மதிக்கத் தயாராக இல்லை. அவர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி தான் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் எம்.ஜி.ஆருடன் உண்டான தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 

இது ஆரம்பம். 

இந்த ஆரம்பம் மற்றொரு விசயம் மூலம் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான தொடர்பை காலம் உருவாக்கிக் கொடுத்தது. அப்போது கலைஞர் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருக்கு எதிராகச் செயல்படக் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார் என்பதனை அதிகாரப்பூர்வமாகக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அதன் பிறகே ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது நேரிடைப் பார்வையில் கொண்டு வந்தார். இதன் பிறகே மாற்றங்கள் ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் துவங்கியது. 

பட வாய்ப்பு இல்லாமல் வருமான ரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு மறுவாழ்க்கை கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன் தான். அது எம்.ஜி.ஆரின் சாவு வரைக்கும் போய் நின்று விட்டது. எம்.ஜி.ஆரின் மரணம் ஜெயலலிதா விரும்பிய அரசியல் பாதையைக் காட்டியது. ராஜீவ் காந்தியின் மரணம் ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டக் கதவை திறந்து விட்டது. 

ஜெயலலிதாவின் குணத்தைப் பற்றி ஜான் ஒரு இடத்தில் இவ்வாறு சொல்கின்றார். 

பிராமணர்கள் வக்கிலாக, ஆசிரியராக, நீதிபதியாக, விஞ்ஞானியாகவே இருந்தாலும் அவர்கள் கடைசிவரைக்கும் முழுமையான பிரமாண குணாதிசியங்களாவே இருக்கின்றார்கள். தங்களால் வர முடியாத துறை என்றால் வந்தவர்களை மடக்கிக் கொள்ளுதல் அவர்களுக்குக் கைவந்த கலை. நடிகர் ரஜினிகாந்த வரைக்கும் உதாரணமாக அடுக்கிக் கொண்டே செல்கின்றார். 

காரணம் மத்திய அரசின் செல்வாக்கை தொடக்கத்தில் ஜெயலலிதாவிற்கு உருவாக்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். அவர் கடைசி வரைக்கும் ஜெயலலிதாவை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டு வருவதில் கர்மசிரத்தையுடன் செயல்பட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் ஜெ. வுக்குச் சாதி அபிமானம் என்ற ஒரே நோக்கத்தில் பலவிதங்களில் உதவியாக இருந்துள்ளனர். அது எந்த அளவுக்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி சென்னையில் நேரு சிலையைத் திறக்க வரும் போது ஜெயலலிதாவும் அதில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று எம்.ஜீ.ஆரை மிரட்டிப் பார்க்கும் அளவிற்கு மத்திய அரசின் லாபி வட்டம் கச்சிதமாகச் செயல்பட்டது. 

மற்ற துறைகளை விட அரசியல் என்பது வித்தியாசமான துறை. உச்சத்தை அடைந்தவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள், இவர்கள் இருவரையும் அனுசரித்துத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள். இந்த மூன்று வகையினர் தான் நம்மை மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மூன்று வட்டத்திற்குத் தொடர்பில்லாத தன் உழைப்பு தன் வாழ்க்கை என்று எப்போதும் போல மக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவரவருக்குப் பிடித்த கொள்கைகள், விருப்பங்கள் என்ற எளியத் தத்துவத்திற்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள். எம். ஜி.ஆரும் இப்படி வாழ்ந்து முடிந்து போயிருக்க வேண்டியவர் தான். ஆனால் தன் முயற்சியில் மனம் தளராத எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பயணம் என்பது தன்னம்பிக்கையின் மொத்த சாராம்சம். 

தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதனை எப்பாடுபட்டவது நிறைவேற்றி விடுவது என்ற கொள்கையில் எம்.ஜி.ஆர் கடைசி வரையிலும் உறுதியோடு வாழ்ந்துள்ளார். இன்று வரையிலும் ஈழப் போராட்டத்திற்குக் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர் செய்ய உதவிகள் அனைத்தும் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதற்கு மத்திய அரசாங்கம் விடுத்த மிரட்டலும் அதனைத் தாண்டி நான் ஏற்கனவே அவர்களுக்குப் பணம் கொடுத்து விட்டேன் என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனால் அன்று மத்திய அரசிடம் இவரின் செயல்பாடுகளைப் போட்டுக் கொடுப்பவராகத்தான் ஜெயலலிதா இருந்துள்ளார். ஈழ விசயத்தில் கடைசிவரைக்கும் நடிகையாகத் தான் வாழ்ந்துள்ளார். 

எம்.ஜி.ஆர் நடிகர் என்ற ஒரு வார்த்தையைத் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையோடு எந்த அளவுக்குக் கலந்துள்ளவர் என்பதனை சரியாகப் புரிந்து கொண்டவர் அறிஞர் அண்ணா. 1952 க்குப் பிறகு துணை நடிகர் மூலம் அண்ணாவைச் சந்தித்தார். அதுவரையிலும் காங்கிரஸ் அபிமானியாகவே இருந்தார். திமுக வில் எம்.ஜி.ஆர் வந்த பிறகே சூரியன் என்ற சின்னம் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழே உள்ள மொத்த மக்களிடமும் சென்று சேர்ந்து. அது வரையிலும் படித்தவர்கள், குறிப்பிட்ட இளைஞர்கள் கூட்டம் என்று இருந்த திராவிடக் கொள்கைகள், கட்சி, சின்னம் உழைப்பாளிகள், அடித்தட்டு மக்கள் வரைக்கும் சென்று சேர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆர் எப்போதும் சந்தேகம் கொள்பவராக இருந்துள்ளார். ஆனால் சரியான காரணம் தெரிந்தும் மீண்டும் அவரது இயல்பான குழந்தைத்தனமாக மாறுவதுமாகவும் இருந்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இதில் இருந்து வேறுபாடானவர். 

ஒவ்வொரு செயல்பாட்டிலும் வன்மமும், வக்கிரமும் கொடி கட்டிப் பறந்துள்ளது. அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துவிதமான அயோக்கியத்தனங்களையும் கூசாமல் செய்துள்ளார். தான் நினைத்ததை அடைந்த பின்பு கூட அவரால் தனது குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த போதிலும் உருவான சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் அவருக்குரியதாகவே மாறிப் போனதும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவரின் செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாற்றியது. 

தமிழக மக்களின் மாறாத மனோபாவங்கள் ஒரு புறம். அதை எந்தக் காலத்திலும் மாற்றிவிட ஆசைப்படாத ஆட்சியாளர்களின் தந்திரங்கள் மறுபுறம். இன்று வரையிலும் ஒவ்வொரு வாக்களானும் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவதன் மூலம் தாங்கள் இன்னமும் எம்.ஜி.ஆரின் விசுவாசி என்று காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கின்றார்கள்.  

ஆனாலும் காலம் அவருக்குத் தான் வாய்ப்பு வழங்கியது. 

வெற்றியாளர்களை மட்டுமே இந்தச் சமூகம் கொண்டாட விரும்புகின்றது. அப்போது அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள மோசமான விசயங்கள் அனைத்தும் மறக்கப்படுகின்றது. மாற்றப்படுகின்றது.


Wednesday, November 29, 2017

வணக்கம் - நூல் விமர்சனம்


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா (1917- 2017) கொண்டாடும் நேரமிது. வைகோ அவர்களும் எம்.ஜி.ஆருக்காகச் சமீபத்தில் ஒரு விழா நடத்தியிருந்தார். எம்.ஜி.ஆருக்கான விழா என்று சொல்லாமல் தனக்கான பொன்விழா என்று காரணம்காட்டி அரசாங்கத்திடமிருந்து கலைவாணர் அரங்கைப் பெற்று இருந்தார். விழா மேடையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர் பேசும் போது "நான் இந்த மேடையில் பேசுவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் குறித்து ஏறத்தாழ நாற்பது புத்தகங்கள் பல்வேறு நபர்கள் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியதை வாசித்து விட்டுத் தான் இங்கே பேசுகின்றேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

வைகோ வும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் திசையில் இருந்து அரசியல் களத்தில் செயல்பட்டவர்கள். வைகோ அவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து நேரிடையான, மறைமுகமான, செவிவழிச் செய்திகள் ஏராளமாகத் தெரிந்திருந்த போதிலும் எம்.ஜி.ஆர் குறித்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டு விழாவில் பேசியது என்னளவில் ஆச்சரியமாகவே இருந்தது. 

வைகோவின் உரையைக் கேட்டதிலிருந்தே எம்.ஜி.ஆர் குறித்த பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது கொண்டே இருந்தது. இதுவரையிலும் எம்.ஜி.ஆர் குறித்த தகவல்கள் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாகத் தெரிந்தது மட்டுமே. 

காரணம் எம்.ஜி.ஆர் மறைந்த போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தேன். நான் இதுவரையிலும் வாசித்த வாசிப்பின் வாயிலாகவே அவரைப் பற்றிப் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. தீரா ஆச்சரியங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை குறித்த தேடல்கள் இன்னும் முழுமையடையவில்லை. நீண்ட நாளைக்குப் பின் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. 

அது வலம்புரி ஜான் எழுதிய வணக்கம்

இந்தத் தொடர் நக்கீரனில் வாரந்தோறும் வெளிவந்த காலம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்போது கல்லூரி முடித்து வெளியே வந்து வேலையில் சேர்ந்த சமயம். இடையிடையே சில அத்தியாயங்களை வாசித்துள்ளேன். அப்போது தொடர் வாசிப்பில் இல்லாத காரணத்தால் வாசிப்பு நிலையில் இருந்து தள்ளியே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அப்போது வாசித்த விசயங்களுக்கும், இப்போது வாசிக்கும் போது உண்டான மனநிலைக்கும் ஏராளமான வித்தியாசங்கள். அன்று புரியாத பல அரசியல் சூட்சமங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இவையெல்லாம் நாம் அன்றாடம் செய்தித்தாளில் வாசித்தது தானே? என்று யோசிக்க வைக்கின்றது. 

வலம்புரி ஜான் எழுதிய பல புத்தகங்களை ஊரில் இருந்த போது நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். இருபது வயது இளைஞர்களைச் சுண்டியிழுக்கும் நடையது. அருவி போல நம்மை இழுத்துக் கொண்டே சொல்லும். எந்த எழுத்தாளர்களின் நடையுடனும் ஒப்பிடவே முடியாது. அதீத புத்திசாலிகள் வரிசையில் நிச்சயம் வலம்புரி ஜான் அவர்களுக்கும் ஒரு இடமுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கரை கண்டவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், பத்திரிக்கையாளர், பாராளுமன்ற உறுப்பினர் என்று வாழ்நாள் முழுக்கக் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வாழ்ந்தவர். பல இளைஞர்களைப் பத்திரிக்கையுலகத்திற்கு அடையாளம் காட்டியவர். 

குறிப்பாக நக்கீரன் கோபால் அவர்கள் வலம்புரி ஜான் மூலமாகத்தான் முதன் முறையாகப் பத்திரிக்கை உலகத்திற்கு உள்ளே வந்தார். அப்போது வலம்புரி ஜான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாய் வார இதழில் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக நக்கீரன் கோபால் தனது பத்திரிகை உலகப் பயணத்தைத் தொடங்கினார். 

கடந்த 25 ஆண்டுகளாக வலம்புரி ஜான் அவர்களின் எந்தப் புத்தகத்தையும் வாசித்தது இல்லை. ஆனால் பல்வேறு இடங்களிலும் பேசிய பேச்சுத் தொகுப்புகளை மட்டும் இணையத்தில் அவ்வப்போது கேட்பதுண்டு. பல சமயம் வியந்து போனதுண்டு. ஞாபக சக்தி, தொடர்ந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கும் வார்த்தைகளும், பலரும் அறிந்திராத சரித்திர குறிப்புகள் முதல் நிகழ்கால அரசியல் அவலங்கள் வரைக்கும் எனக் கலந்து கட்டி கேட்பவரை திகைக்க வைப்பதில் கில்லாடியாக இருப்பார். 

வணக்கம் தொடர் நக்கீரனில் வெளிவந்த போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தது. வலம்புரி ஜானுக்கு மட்டுமல்ல. நக்கீரன் வார இதழுக்கும் சேர்த்து ஜெ பல இடைஞ்சல்களை உருவாக்கினார். நீதிமன்றம், காவல்துறை கலந்து கட்டி கபடி விளையாடியது. ஜெ. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய போது தமிழகம் புதுப்புது விசயங்களைக் கண்டது. மேற்கத்திய நாடுகள் மட்டுமே கண்ட சர்வாதிகாரம் என்பது இங்கே உள்ள மக்களாட்சியில் என்னவெல்லாம் உருவாக்க முடியும் என்பதனை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதா காலத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் நான்கு பதிப்புகள் கண்டாலும் தற்போது தான் அதீத கவனம் பெற்றுள்ளது. காரணம் இதில் சசிகலா குறித்துச் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டிருப்பது முக்கியக் காரணமாக இருந்தது. வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்திற்கென என்னுரை என்று 2002 வருடத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் முதல் பதிப்பு 2005 வந்து அதற்குப் பிறகு ஐந்து பதிப்புகள் வெளி வந்துள்ளது. 

புத்தகத்தை முதல் முறை வாசித்து விட்டு உருவான தாக்கமும், மீண்டும் மீண்டும் பலவற்றை யோசித்துக் கொண்டே புத்தகத்தில் சொல்லப்பட்ட சின்னச் சின்னக் குறிப்புகளை யோசித்துக் கொண்டே மூன்று நாட்களும் இந்தப் புத்தகமே மனதிற்குள் சுழன்றடித்துக் கொண்டேயிருந்தது. 

தற்போது ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடக் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களைப் பற்றி எழுத்தின் வாயிலாகவே தெரிந்து இருப்பார்கள். தற்போது இணைய ஊடகங்கள் ஆதிக்கம் பெற்ற பின்பு தான் பல மறைக்கப்பட்ட பல தகவல்களும், உண்மையான விசயங்களும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

காரணம் இணையத்தில் கலைஞர் குறித்து நேர்மறை எதிர்மறை விசயங்கள் அனைத்தும் கலந்து இருப்பதால் வாசிப்பில் ருசி உள்ளவர்கள் எளிதாக எது சரி? எது தவறு? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். இன்று வரையிலும் பல அரசியல்வாதிகள் கடந்த கால வாழ்க்கை, அவர்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் விவாத பொருளாகவே உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் குறித்துச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே? ஏன் என்று பலமுறை நெருங்கிய நண்பர்களிடம் விவாதிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல்தன்மையைக் காரணமாகச் சொல்லி அதற்குப் பின்னால் உள்ள அரசியல் விசயங்களை நண்பர்கள் புரியவைப்பார்கள். 

ஆனால் ஜெயலலிதா குறித்து நம்மால் அனைத்து விசயங்களையும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ள முடியும். இணைய வளர்ச்சியில் ஜெயலலிதாவின் அகங்காரம் எடுபடாமல் போய்விட்டது. 

நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிச்சயம் இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மொத்த குணாதிசியங்களையும், அவரின் அவல ஆட்சி அதிகார அவலங்களை நன்றாகவே தெரிந்து வைத்து இருப்பார்கள். தமிழக அரசியலில் இறப்புக்குப் பின்பு ஜெ வைப் போலக் கேவலப்பட்டவர்கள் எவருமே இல்லை. அதேபோல இந்திய அரசியலில் இந்த அளவுக்கு அசிங்கப்பட்டவர்களும் எவருமில்லை. 

இன்றும் அவரை ஆதரிப்பவர்களை என் பார்வையில் இரண்டு விதமாகத் தான் பிரிக்க முடியும். 

ஒன்று அவர் சாதி சார்ந்த அபிமானம்.

மற்றொன்று மாற்றிக் கொள்ள முடியாத கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாகவும் இருக்கின்றார்கள். 

எம்.ஜி.ஆர் போல நிஜமான வள்ளல் தன்மை கொண்டவரும் இல்லை. ஆனால் தனக்கு ஒன்று தேவை என்றால் அதற்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்ற கேவல அத்தியாங்களைத் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதா தான். இவரைப் பற்றித் தான் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பேசுகின்றார். அத்துடன் அவர் வாழ்ந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் நிலைமைகள், சம்மந்தப்பட்ட மனிதர்கள், ஆயுதம் ஏந்தத் தேவையில்லாத அரசியல் யுத்தத்தின் சகல பரிணாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் பாணியில் தனித்தனி கட்டுரையாகச் சொல்லியுள்ளார். 

அவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தும் வலம்புரி ஜான் குறித்தும், இந்தப் புத்தகம் குறித்தும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு பேர்கள் எழுதிய விமர்சனங்கள் என் கண்ணில் பட்டது. ஆனால் மொக்கை எழுத்தாளர்க்கு இணையத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் கூட வலம்புரி ஜான் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எந்த இடத்திலும் வலம்புரி ஜான் குறித்த முழுமையான விபரங்கள் இல்லை. 

முக நூல் வந்த பிறகு ஐம்பது வருடங்களுக்கு முன்பு துணை கதாபாத்திரங்களில் நடித்த சாதாரண நடிகை நடிகர்களைப் பற்றிக் கூட விமர்சனமாகச் சிலாகித்து எழுதும் நபர்கள் எவரும் வலம்புரி ஜான் அவர்களைப் பற்றி எழுதாமல் இருப்பது ஒரு வகையில் ஆச்சரியம் என்றால் அவரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உரியதாகவே உள்ளது. தொடர்ந்து கட்சி மாறிக் கொண்ட வந்தது முதல் எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல் நினைத்த போது நினைத்தவாறு பேசியது வரைக்கும் எல்லாமே அவரைக் கடைசியில் மரணம் வரைக்கும் துரத்தியது. அவரின் மரணமும், மரண ஊர்வலமும் சங்கடமாக முடிந்தது. 

தொலைக்காட்சியில் தினந்தோறும் அவர் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன். மருத்துவத்தின் அத்தனை பக்கங்களையும் அலசுவார். ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டேயிருப்பார். கேட்பவர்களுக்கு எதை எடுத்துக் கொள்வது? எப்படிப் பின்பற்றுவது? என்று குழப்பங்களை வரும் வரைக்கும் சரித்திர காலச் சம்பவங்களுடன் கோர்த்துச் சொல்லுவார். கடைசியில் அவர் உடம்பு நோயின் மொத்த குத்தகை கிடங்காக மாறி எலும்பும் தோலுமாக இறந்தார். இந்த இறப்பில் ஜெயலலிதாவிற்கு முக்கால்வாசி பங்குண்டு. 

ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்து வைத்த போது எம்.ஜி.ஆர் அவர்களால் ஜெ. வுக்கு ஆலோசகர் என்ற நிலையில் வலம்புரி ஜான் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார். 

இவர் தான் வாசிப்பு முதல் அரசியல் பழக்கங்கள் வரைக்கும் ஜெ. வுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால் காலம் வேறுவிதமாக நகர்த்தியது. ஜெ அதிகாரத்திற்கு வந்த போது வலம்புரி ஜான் ஆகாத மனிதராக மாறிவிடக் கைது நடவடிக்கையின் போது மெல்ல கொலும் விசயத்தை டீ யில் கொடுத்து இவர் உடல் நலன் சீர்கெட்டுப் படுக்கையில் விழும் அளவிற்குக் கொண்டு போய் நிறுத்தியது. 

இந்த வணக்கம் புத்தகத்தை வெறுமனே நூல் விமர்சனம் என்ற நிலையில் பார்க்க மனம் வரவில்லை. இதில் உள்ள முக்கியக்குறிப்புகள் இணையத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பதிவுகளாக எழுதி வைத்திட விரும்புகின்றேன். 

எம்.ஜி.ஆர். -  ஜெயலலிதா 
ஜெயலலிதா -  எம்.ஜி.ஆர். 
ஜெயலலிதா -  சசிகலா 
மூவருக்கும் மத்தியில் வாழ்ந்த வலம்புரி ஜான். 

தொடர்ந்து பேசுவோம்........... 


Wednesday, November 22, 2017

திருமண நாள்


குழந்தைகள் மகள்களாக மாறிக் கொண்டிருக்கும் தருணமிது. மகள்களின் யாரோ ஒருவர் தான் முதலில் தெரியப்படுத்துவார். அடுத்தடுத்து மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள். மனைவியின் முறைப்பை உள்ளே உருளும் பாத்திர ஓசையின் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 

திருமண நாள், பிறந்த நாள் என்று எதுவும் நினைவில் இருப்பதில்லை. வயது கூடும் போது இரண்டு விசயங்கள் நமக்குள் நடக்கும். ஒன்று மறதி மற்றொன்று கொண்டாட்ட மனோ நிலை மாறும். 

நம் வயது கூடும் போது, நம் எண்ணங்களின் நோக்கம் வேறுவிதமாகப் போய்விடுகின்றது. நோக்கங்கள் மாறிக் கொண்டேயிருப்பதால் முக்கியமான பல விசயங்கள் மறந்துவிடுகின்றது. நமக்குள் இருக்கும் குழந்தைத் தனம் படிப்படியாகப் பலராலும் திருடப்பட்டு இருக்கும். நமக்கென பிரத்யோகமாக இருந்த பல ரசனைகள் மழுங்கடிக்கப்பட்டு இருக்கும். ஆழ்ந்த வாசிப்பு மாறி அவசர கதியில் உள்ளே நுழைந்த பலவும் குழப்பங்களைப் பந்தி போட்டு வரவேற்றுக் கொண்டிருக்கும். 

என்னைப் போலவே மகள்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். மாறவே மாட்டேன் என்ற மனைவியும் அவரின் எளிய விருப்பங்களும் பல சமயம் சவாலாக உள்ளது. 

திருமண நாள் வரும் சமயங்களில் அதுவும் ஒரு நாள் தானே? என்ற எண்ணத்தை மாற்றியவர் மனைவி. அவருக்கு அது தான் அவர் வாழ்வின் முக்கியமான நாள் என்பதனை உணரவே பல வருடங்கள் எனக்கு ஆனது. தொடக்கத்தில் மகள்களின் பிறந்தநாளில் தெரிந்த ஆராவாரம் இப்போது மெதுமெதுவாக அடங்கி இன்று பெரிதான சுவராசியம் இல்லாமல் மாறிவிட்டது. ஆனால் இவற்றை விட மற்றொன்றை எப்போதும் நான் நினைத்துக் கொள்வதுண்டு. 

இறந்தவர்களின் நினைவு நாளை ஏன் நம்மால் சரியாக நினைவில் கொண்டுவரமுடிவதில்லை என்று? 

அப்பாவின் இறந்த நாள் சரியான அவர் இறந்த அடுத்த மாதங்களில் தான் நினைவில் வருகின்றது. அதுவும் ஊரில் இருந்து யாராவது அழைத்துச் சொன்னால் தான். தாத்தா, பாட்டி இறந்த நாள் எந்த நாள் என்பதே மறந்தே போய்விட்டது. பழகிய பலரின் நினைவு தினமும் இப்படியாகத்தான் உள்ளது. 

அன்றாட அழுத்தங்கள் ஒவ்வொன்றும் உள்ளே இருக்க, முக்கிய நினைவுகள் அனைத்தும் மறந்து போய் வாழ்வின் அன்றைய தேவைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் கட்டாயம் ஒரு கணக்கு எடுத்துப் பார்ப்பதுண்டு. மாறிய எண்ணங்கள், மாறிக் கொண்டே வரும் ஆரோக்கியம், விலகிய நண்பர்கள், இழந்தவைகள், கற்ற பாடங்கள், படிப்பினைகள், பெற்ற நிந்தனைகள் என்று பட்டியலிட்டு பார்ப்பதுண்டு. 

சுருங்கிய உறுப்புகள், அடம்பிடிக்கும் ஆரோக்கியம், விட முடியாத பழக்கவழக்கங்கள் என்று கணக்கில் கொண்டு வந்தாலும் கண் கட்டி வித்தை போலவே நீ இன்னமும் திருந்த வேண்டும் என்றே காலம் மிரட்டிக் கொண்டேயிருக்கின்றது? வளரும் போது ஒவ்வொன்றும் மறையும் அல்லது குறையும். ஆனால் ருசி குறையாமல் இருக்கும் போது அது ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் விலையாக உள்ளது. வாயைத் திறக்காமல் இருக்க வேண்டிய சமயங்களில் திறந்த காரணங்களால் பெற்ற இழப்புகள் ஒவ்வொன்றும் பக்கவாட்டில் நின்று கொண்டு பாடங்களை நடத்திக் கொண்டேயிருக்கின்றது. 

இனியாவது திருந்துவாயா? என்று ஆசிரியர் போலக் காலம் தன் கைகளில் பிரம்புகளால் விளாசிக் கொண்டேயிருந்தாலும் எத்தனை முயற்சித்தாலும் மாற்றிக் கொள்ள முடியாத நம் அடிப்படை குணாதிசியங்கள் நமக்கே பழிப்பு காட்டும். 

இவற்றை எல்லாம் நாம் அடைய வேண்டும் என்ற பெரிய பட்டியல் தூசி அடைந்து கிடைக்க மூச்சு இறைக்க ஓடி வந்த களைப்பு பட்டியலை மறந்து அடுத்த நாள் பயத்தை தந்து விடுகின்றது. 

இன்று இரவு படுத்தவுடன் தூக்கம் வந்தால் போதும் என்ற எளிய விருப்பத்தில் எல்லாமே மறந்து போய் அடுத்த நாள் விழிப்பில் சாதாரண எளிய மனித வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டிருக்கின்றேன். இப்படியே ஒவ்வொரு சமயத்திலும் காலம் என்னை நகர்த்திக் கொண்டு இருக்கின்றது. 

அடுத்த நாள் ஆச்சரியம் என்னவாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் உள்ளே இருக்கும் நம்பிக்கைகள் விழிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றது. இப்படித்தான் ஒவ்வொரு சமயத்திலும் என்னைச் சுற்றிப் படரும் அவநம்பிக்கை கொடிகளை வெட்டி சாய்த்துக் கொண்டே என் மரத்தை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் மரத்தின் ஆணி வேர் என்ற ஆரோக்கியம் பழுது படாமல் இருப்பதால் எல்லா நிலைகளிலும் இயல்பாக வாழ முடிகின்றது. 


 (
படம்
நன்றி)
       Henk Oochappan

உங்கள் வாசிப்புக்கு 


Monday, November 06, 2017

தனுஷ்கோடி - அந்த ஒரு நாள்


மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை ஆசான் அவர்களுடன் சென்ற சுற்றுப் பயணத்தில் தனுஷ்கோடி பக்கமும் முதல் முறையாக செல்ல வாய்ப்பு அமைந்தது.  அப்போது அது சார்ந்த பயணக்கட்டுரையை எழுதி வைத்தேன். தற்போது அறுபது வயதை நெருங்கியவர்கள் அப்போது அந்தப் பதிவில் தனுஷ்கோடி கோரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.  இன்று இந்த செய்தி முகநூலில் கிடைத்தது. பதிவில் இருந்தால் இந்த வரலாற்றுக் கொடுமை பலருக்கும் சென்று சேரும் என்பதற்காக இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.

மணலுக்கு கீழே பிணங்கள் (பயணக்கட்டுரை)

♥#தனுஷ்கோடி 

#நடந்தது_என்ன? ஒரு அற்புத பதிவு,,,

♥டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.

♥கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

♥அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

♥புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.

♥ரயில் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.

♥ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.

♥இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

♥தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.

♥டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.

♥எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்.

♥அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........

♥ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர்.

♥ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

♥ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.

♥'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.

♥தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

♥தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,

♥''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.

♥நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

♥இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்.

♥அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள்.

♥இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.

♥அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும்.

♥இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....

♥ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது .

♥ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது.

♥ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.

♥தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது.

♥எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.

♥இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.

♥அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

♥மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

♥புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 

♥விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.

♥இந்திய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது.

♥இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

♥அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
♥''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

♥எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

♥மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.

♥மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.

♥இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.

♥பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார்.

♥தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.

♥தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னாரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.

♥விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 

♥''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.

♥நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது.

♥டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.

♥'அன்றைய இரவுப் பொழுது தனுஷ்கோடியில் இருக்க வேண்டும்' என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை.

♥சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

♥புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

♥"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது.

♥சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."

♥"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது.

♥அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்

♥அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.

♥அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

♥மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.

♥தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

♥ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

♥தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

♥ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.

♥மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.

♥இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.

♥"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர்.

♥சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

♥அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.

♥சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.

♥மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.

♥வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

♥சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், 'மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

♥வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நன்றி: ரிப்போர்ட்டர் அண்ணாதுரை
Via: ஆந்தை ரிப்போர்ட்டர்



எனது ஒன்பதாவது மின் நூல் சில ரகசிய குறிப்புகள்.

Saturday, October 28, 2017

பயணங்கள் கண்டறியும் பாதைகள்


பேசித் தீரா விசயங்களில் ஒன்று குழந்தைகள் வளர்ப்பு. அது இடம், வாழும் வாழ்க்கை, சூழ்நிலை பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும் விசயமிது. 

என் குழந்தைகள், குழந்தைகளுடன் பழகும் தோழியர்கள், குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடம், அங்கு நிலவும் தற்போதைய நிலையை வைத்து ஓரளவுக்கு நான் யூகிக்கும் அனைத்து விசயங்களும் சரியாகவே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சென்னையில் உள்ள சூழ்நிலை திருப்பூர் வாழ்நிலைக்குப் பொருந்திப் போகாது. அதே காரைக்குடியைச் சுற்றியுள்ள கல்விச்சூழலை அங்குள்ள சமூக வாழ்க்கை தான் தீர்மானிக்கின்றது. இதைத்தான் இங்குள்ள கல்வியாளர்கள் ஒரு மாணவரின் அறிவை ஒரு தேர்வு தீர்மானித்து விடாது என்கிறார்கள். அதிலும் நீட் போன்ற சம்மந்தம் இல்லாத பாடத்திட்டங்களின் வழியே கேட்கப்படும் கேள்விக்கான பதிலை தனிப்பட்ட பயிற்சியின் மூலமே மாணவர்கள் அணுக முடியும். அது நன்மையை விடக் கெடுதலையே அதிகம் கொண்டு வந்து சேர்க்கும் என்று வாதிடுகின்றார்கள். 

சமச்சீர்க் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வியில் தனிப்பட்ட பள்ளிகள் தனக்கென்று சேர்த்து வைத்துப் பாடத்திட்டம் அடங்கிய கல்வி, மத்திய அரசு பாடத்திட்டம், கேந்திரயா வித்தியாலயா பாடத்திட்டம், நவோதயப் பாடத்திட்டம், பன்னாட்டு பாடத் திட்டம் என்று இந்தியா முழுக்க ஏன் இன்று தமிழகம் முழுக்கக் கல்வி என்பது எது திசை? எது இலக்கு என்று தெரியாமல் எங்கங்கோ மாணவர்களை இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. 

இது சிறப்பா? அது சிறப்பா? என்று ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய வருமானத்தை, சேமிப்பை தங்கள் குழந்தைகளுக்காகப் பந்தயக்குதிரைகளில் பணம் கட்டுவதைப் போலக் கட்டுகின்றார்கள். 

மொத்தத்தில் கல்வியென்பது கடைச்சரக்கு போல மாறியுள்ளது. இருப்பவனுக்கு ஒரு மாதிரியாகவும், பணம் இல்லாதவனுக்கு வேறொரு மாதிரியாகவும் இங்கே கிடைக்கின்றது. பாடத்திட்டத்துடன் கல்வி நிலையங்கள் வழங்கும் பிற வசதிகள் இன்று பெற்றோர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது. வணிகமயமாகிவிட்ட கல்வியைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் வணிக நிறுவனங்கள் விரும்பும் வார்ப்பு போலவே இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அறிதல் என்பது பின்னுக்குப் போய்ப் பிழைத்தல் என்பது முக்கியமாக மாறியுள்ளது. 

குழந்தைகள் மேல் வைத்துள்ள அன்பு என்பது மாறி அவர்களின் இறுதி இலக்கு இதுவாக இருக்க வேண்டும் என்று எப்போது ஒரு பெற்றோர் நினைக்கத் தொடங்கினார்களோ? அன்றே குடும்பத்தின் அடிப்படை அறம் காணாமல் போய்விட்டது. நான் வெளியே பார்க்கும் பெற்றோர்கள், பழகும் நண்பர்களின் குடும்பம் அவர்களின் குழந்தைகளைக் கையாளும் விதம் போன்ற பலவும் என்னைப் பயமுறுத்துவதாக உள்ளது. தலைமுறை இடைவெளி என்பது ஒரு பக்கம் என்றாலும் இயல்பான வாழ்க்கைக்குத் தேவையானவற்றின் அளவு கோல் படிப்படியாக மாறிக் கொண்டே வருவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. 

பலசமயம் நாம் தனித்து இருக்கின்றோமோ? தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றோமோ என்று நாம் குற்றவுணர்ச்சியுடன் யோசிக்கும் அளவிற்கு வெளிப்புற சமூகம் என்பது வேறொரு பாதையில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின் ஆரோக்கியம் மாறியுள்ளது. அவர்களின் உணவுப் பழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. யோசிக்கும் திறன் குறைந்து வாசிக்கும் பழக்கம் மாறி புதுயுகத்தில் இப்போதைய கல்விச்சூழல் வினோத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. 

அடுத்த வருடம் வீட்டில் ஒருவர் பத்தாம் வகுப்பு செல்லப் போகின்றார். இதுவரையிலும் மதிப்பெண்கள் குறித்த அக்கறையை உருவாக்காமல் வளர்த்து வந்த எனக்கு இனி அந்த மதிப்பெண்கள் தான் அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றது என்ற எண்ணமே ஏராளமான அச்சத்தை இப்போதே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. கேள்விகள் கேட்டுப் பழகிய அவர்களின் செயல்பாடுகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றது. உங்களிடம் எதிர்பார்ப்பது இது மட்டுமே? என்று திரும்பத் திரும்பப் பள்ளிகளில் சொல்லப்படும் விசயங்கள் தான் அவர்கள் மனதில் பதிகின்றது. 

ஒரு நாளில் அதிகபட்ச நேரம் பள்ளியில் இருக்கும் அவர்களின் குணாதிசியம் என்பது அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியர்களின் குணத்தை வைத்தே உருவாகின்றது என்பதனை என்னால் நன்றாக உள்வாங்க முடிகின்றது. நாம் தற்போது உள்ள கல்வித்சூழலில் கற்றலில் காணும் குறைபாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்தாலும் கேட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் போதும் என்ற நிலைக்கே தள்ளப்படுவதால் வேறு எதுவும் இங்கே தேவையில்லை என்ற நிலைக்கு வந்து நிற்கின்றார்கள். 

இன்று நீட் என்ற மருத்துவக்கல்விக்கு என்று கொண்டு வரப்பட்ட தேர்வுக்குப் பிறகு தமிழகத்தில் பலதரப்பட்ட குரல்கள் பல இடங்களில் இருந்து எழுகின்றது. அத்தனை பேர்களும் நம் உரிமை. நம் தேர்வு என்கிற ஒற்றைவாக்கியத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். ஆனால் கடந்த மூன்று ஐந்தாண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டம் குறித்தோ, தனியார் பள்ளிகள் அரசு கொள்கைகளை மீறி வசூலிக்கும் அடாவடித்தனம் குறித்தோ யாரும் வாய் திறப்பதே இல்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

கொள்கை என்பது எத்தனைச் சிறப்பாக இருந்தாலும் அதில் ஊழல் என்பது சிறிதளவு இருந்தால் கூட அதற்குப் பெயர் கொள்கை அல்ல. கொள்ளை என்றே பொருள். ஆனால் இன்று கல்வி என்ற பெயரால் கொள்ளை தான் நடந்து கொண்டிருக்கின்றது. அதுவும் மாணவர்களின் அறிவு என்பதனை ஒரு வட்டத்திற்குள் வைத்து நடத்தப்படும் கொள்ளை. 

நம்மால் இதைப் பற்றிப் பேச முடியாது. பேசக்கூடியவர்களும் அவரவர் தனிப்பட்ட நலன் பொறுத்தே பேசுகின்றார்கள். காரணம் வியாபாரிகள் லாபத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். கல்வி வியாபாரிகளின் லாபத்திற்காகப் பலிகிடாவாக மாறும் மொத்த பெற்றோர்களும் இன்னும் சிறிது காலத்தில் தங்கள் குழந்தைகளுக்காகத் தகுதிக்கு மீறிச் செலவழித்து அதன் இறுதிப் பலனையும் பெற முடியாத சோகத்தில் தான் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கப் போகின்றார்கள். 

காரணம் தங்களின் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்பு, வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு, சமூகத்தில் உள்ள உயர் பதவிகளுக்கு உண்டான வேலை வாய்ப்பு என்ற இந்த மூன்று கொள்கைகளில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்கின்றார்கள். பள்ளிக்கூடக் கட்டணம் தங்கள் தகுதிக்கு மீறியதாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலை தான் தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. 

பள்ளிக்கட்டணம், சிறப்புப் பயிற்சி கட்டணம் என்று ஒவ்வொரு கட்டணமாகக் கட்டி வளரும் மாணவ சமுதாயத்தில் எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும்? 

மத்திய, மாநில அரசாங்கத்தின் உயர் கல்விக்கூடங்களில் படிக்கும் 90 சதவிகித மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விடுகின்றார்கள். அதிகாரவர்க்கத்தின் உயர்நிலை பதவிகளுக்குத் தேர்வு எழுதும் பத்து லட்சம் மாணவர்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் மட்டுமே வருடந்தோறும் தேர்ச்சியடைந்து அந்தப் பதவியை அடைகின்றனர். இதன் படிம நிலைகளை ஒவ்வொரு தேர்வின் மூலமும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும். 

மொத்தத்தில் நல்ல பதவி, நல்ல சம்பளம் என்கிற விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து வெளியே வரும் அனைத்துத் துறை சார்ந்த படிப்புகளையும் கணக்கிட்டால் அதிகபட்சமாக ஐந்து சதவிகித மாணவர்களே தேறுவார்கள். மற்றவர்கள் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத துறைகளில் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். 

நான் வாழும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியும் பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள் நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த வேலையில் தான் இருப்பேன். இப்படித்தான் என் வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற அவர்களின் மாணவ கனவு கருகிப் போய் வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற பரிதாப நிலைக்கு வந்து சேர்ந்து விடுகின்றார்கள். தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வந்தவர்களுக்கு மற்றொரு மிகப் பெரிய பிரச்சனையும் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் கல்விக்காக வாங்கிய வங்கிக் கடன், தனியார்களிடம் பெற்ற கடன் என்ற பெரிய சுமையையும் சேர்ந்து சுமக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். 

இங்கே எவருக்கும் சொந்தத் தொழில் ஆர்வமும் இல்லை. தமிழகத்தில் அதற்கான சூழ்நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. 

ஒவ்வொன்றும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், பணம் அதிகமாக வைத்திருப்பவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. சிறு தொழில்கள் குறித்தோ, மற்ற தொழில்நுட்ப விசயங்களில் ஆர்வம் செலுத்தி அதன் மூலம் மேலே வந்துவிடுவோம் என்ற எண்ணமே இல்லாத மாணவ சமூகத்தின் எண்ணத்திலும் நோக்கத்தில் எளிதில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே நம் கல்விச் சூழல் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. 

பணத்தை வைத்துக் கொண்டு அதனைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் அதிகாரத்தின் கீழ் நாம் வாழக் கடமைப்பட்டவர்கள். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நம் குழந்தைகளை மன உடல் ரீதியாக ஆரோக்கியத்தை அளிப்பதே முதன்மையாக இருக்க வேண்டும். 

என் தாத்தா என் அப்பா எப்படி உருப்படப் போகின்றார்? என்று கவலைப்பட்டார். என் அப்பா நான் எங்கே உருப்படப் போகின்றேன் என்று ஆதங்கமாய்ப் பேசினார். என் தாத்தாவுக்கு அவர் வாழ்ந்த சூழ்நிலையில் அவருக்காக எல்லையைத் தொட்டார். என் அப்பாவும் அவருக்கான எல்லையைத் தொட முடிந்தது. 

காரணம் வாழும் வரைக்கும் அவர்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியமும், எதையும் எதிர் கொண்டு வாழும் மன ஆரோக்கியமும் கை கொடுத்தது. நானும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் குழந்தைகளுக்கும் அதையே கற்றுக் கொடுக்க விரும்புகின்றேன். அப்படித்தான் கற்றுக் கொடுத்தும் வருகின்றேன். 

அவர்கள் வாழும் சூழ்நிலையைக் கைக்கொண்டு அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எந்நாளும் எனக்குண்டு. போட்டி நிறைந்த உலகில் போட்டிகளால் மட்டுமே வளர்நது கொண்டிருக்கும் உலகில் நாம் வெல்ல வேண்டுமென்றால் நமக்கான ஆரோக்கியம் முதன்மையாகத் தேவைப்படுகின்றது. நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம். மற்றவற்றை அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழ்நிலையில் பெறக்கூடிய அனுபவங்கள் வழி நடத்தும். வழி காட்டும். 

(முற்றும்) 


தொடர்புடைய பதிவுகள்


படம் (நன்றி) Henk Oochappan





எனது ஒன்பதாவது மின் நூல் சில ரகசிய குறிப்புகள்.

இது வரையிலும் வெளியான எட்டு மின் நூல்களும் 1,75,000+ தரவிறக்கம் செய்து ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.



Thursday, September 14, 2017

எழுந்து நிற்கலாம் வா?


மேலைநாடுகளில் கல்விக்கூடங்கள் என்பது சிறைக்கூடங்கள் அல்ல. அதுவொரு களம். பயன்படுத்திக் கொள்பவர்களின் திறமையைப் பொறுத்து வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு. அரசியல் கலக்காத உலகமிது. எந்தக் காலத்திலும் அரசியல் உள்ளே நுழைய முடியாதபடி ஒழுங்குபடுத்தி வைத்துள்ளார்கள். மாறிக் கொண்டேயிருக்கும் உலகை உள்வாங்கிக் கொண்டே மாறிக் கொண்டே வருவதால் மாணவர்களின் தகுதியும் திறமையும் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட முடியாத உயரத்தில் எப்போதும் உள்ளது. 

அங்கே தனி மனித வாழ்க்கை வசதிகள் என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் பிரதிபலிக்குமே தவிர அது பள்ளி, கல்லூரிக்குள் வந்து நிற்காது. சிறகுகளைக் கத்தரிக்காமல் வானத்தை எட்டிப்பிடிக்க ஆதரிக்கும் உலகமது. மேலைநாட்டுக் கல்விமுறைகளில் மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கூடுதல் தகுதி. விளையாட்டு மட்டுமல்ல. தனிப்பட்ட திறமைகளைக் கண்டறியும் கூட்டமும் உண்டு. அதனை வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வமும் கலந்த கல்வியது. ஆர்வமும் ஆரோக்கியமும் ஒன்றே கலந்து இருப்பதால் மன ரீதியான எழுச்சியும் இயல்பான ஒன்றாக உள்ளது. 

கடவுள் உண்டு இல்லை என்ற கூட்டமும் உண்டு. ஆனால் அறிவியல் அதனை விட நமக்கு முக்கியம் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒன்று மற்றதுடன் உரசுவதில்லை. 

ஆனால் இங்கே? 

ஒட்டி வைத்த மரத்தில் ஒடிக்கப்பட்ட கிளை போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட எல்லைக்குள் வளர்க்கப்படும் ஒருவித சோதனைச்சாலை. ஆன்மீகத்தை அறிவியலுடன் கலப்பார்கள். அறிவியலுக்கும் ஆதாரம் தேவையில்லை என்று வாதிடுவார்கள். வரலாறு என்பது சில சமயம் திணிக்கப்பட்டதாக இருக்கும். பல சமயம் நம்ப முடியாததாக இருக்கும். மொத்தத்தில் மாற்றுச் சிந்தனைகள் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் உருவாக்கப்படும் பாடத்திட்டம் என்பது பல் இல்லாத கிழவனுக்கு வழங்கப்படும் பக்கோடா போலவே இருக்கும். 

படிப்பவனுக்குப் புரியாது. புரிந்தவனுக்கும் குழப்பமே மிஞ்சும். வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இவர்கள் வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இடையே தான் நம் மாணவர்கள் போராடிப் பெற்ற அறிவுடன் தான் இன்று உலகமெங்கும் சென்று வெல்கின்றார்கள். 

இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் தனித்திறமையை எங்கே போய்க் காட்டுவது? அதுவும் இங்குள்ள அரசியலில் எல்லாமே விற்பனைக்கு என்ற சூழ்நிலையில் தான் பல மாணவர்கள் கருகிப் போகின்றார்கள். 

இந்திய விளையாட்டுத்துறை என்பது காசு பார்க்கும் கூட்டத்தால் ஆளப்படுவது. குறிப்பிட்ட வட்டம், குறிப்பிட்ட நபர்கள் என்ற எல்லையை உடைக்க முடியாத கூட்டத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தனி ராஜ்ஜியம் அது. எந்த விளையாட்டின் மூலம் வருமானம் அதிகமாகக் கிடைக்குமோ? அதுவே தேசிய விளையாட்டாகப் பார்க்கப்படுகின்றது. இன்று வரையிலும் ஊதிப் பெருக்கப்பட்ட கிரிக்கெட் முன்பு வேறெந்த விளையாட்டும் பேசப்படுகின்றதா? 

மகளிடம் ஒவ்வொருமுறையும் இங்குள்ள விளையாட்டிற்குப் பின்னால் உள்ள அரசியல் தகிடுதத்தங்களைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆனாலும் அவர் ஆர்வத்தை மட்டுப்படுத்துவதில்லை. 

மகள் "நான் நாளை இங்கே விளையாடச் செல்லப்போகின்றோம்?" என்று முதல் நாள் சொல்லிவிட்டுச் செல்லும் போது என் மனதில் பல கேள்விகள் வந்து எழும். ஆனால் இந்தச் சமயத்தில் அவரின் விருப்பத்திற்கு ஏன் தடை சொல்ல வேண்டும் என்று அனுமதி கொடுப்பதுண்டு. ஒருவரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவத்தை விடப் பள்ளிப் பருவம் தான் முக்கியமானது. நினைவுகளால் வாழ்ந்து பார்க்கக்கூடிய அத்தனை விசயங்களும் பள்ளிப்பருவத்தில் தான் கிடைக்கும். கல்லூரிப் பருவம் என்பது அடிப்படைக் கடமைகளும் சேர்ந்தே இருப்பதால் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. 

பள்ளிப்பருவத்தில் எனக்கான ஆர்வம் புத்தகங்களில் மட்டும் இருந்தது. ஆனால் இவர்களின் ஆர்வம் எல்லாவற்றிலும் கலவையாக உள்ளது. இதன் காரணமாகப் பெற்றோர்களுக்குத் தான் கூடுதல் சுமையாக உள்ளது. நடுத்தரவர்க்க பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணமென்பது உணவு, உடைகள், தங்குமிட வசதிகளை விடத் தற்போது குழந்தைகளில் கல்விக்குத்தான் பெரும்பங்கு செலவளிக்க வேண்டியதாக உள்ளது. இதற்கு மேல் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு நடுத்தரவர்க்க பெற்றோர்களும் பெரிய வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

குழந்தைக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதனை விடக் கற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் செலவளிக்கும் தொகை கணக்கில் அடங்கா? 
ஒரு பக்கம் பள்ளிக்கூடங்கள் காட்டும் ஆசை வார்த்தைகள். மறுபக்கம் பெற்றோர்களின் தனக்கான "கௌரவம்" என்ற பெயரில் காசைக் கரியாக்கும் தான் தோன்றித்தனம். இவை எல்லாமே மற்ற மாணவர்களை, பெற்றோர்களைப் பல விதங்களில் பாதிப்பு உண்டாக்கவே செய்கின்றது. 

இப்போதைய சூழ்நிலையில் தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. தனிப்பட்ட நபர்கள் வரைக்கும் எதையெல்லாம் காசாக்க முடியும் என்ற கலையில் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள். மாதம் எட்டு வகுப்புகள். கணக்குப்பாடம் மட்டும். ஆனால் தொகையோ 5000 ரூபாய். இதே போல ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக என்று பெரிய வன்முறையே நடந்து கொண்டிருக்கின்றது. 

எல்லாவற்றிலும், எப்போதும் காசு பார்க்க மட்டுமே என்கிற சூழ்நிலையில் தான் இங்கே மாணவர்களின் தனித்தகுதிகள் என்பது செல்லாக்காசாக மாறிவிடுகின்றது. 

மகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் ஒவ்வொன்றையும் அமைதியாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. பள்ளிக்குப் பெருமை வேண்டும். விளையாட்டு ஆசிரியருக்குத் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும். ஆனால் பள்ளி செய்ய வேண்டிய கடமைகளோ, அதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளோ பெற்றோர்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

நாம் அழைத்துச் செல்ல வேண்டும். நாமே அழைத்து வர வேண்டும். செல்லும் இடங்கள் தூரமாக இருந்தால் அதற்கெனத் தனிக்கட்டணம். ஒவ்வொரு நிலையிலும் இங்கே காசு தான் பேசுகின்றது. காசு தான் தீர்மானிக்கின்றது. அதிகமாக யோசித்தால் இந்த வாழ்க்கை அலுத்துவிடும். ஊழல் மட்டுமே நீக்கமற நிறைந்திருப்பதால் எதார்த்தம் புரிந்து எந்தப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பலிகிடாவாக்க முயற்சிப்பதே இல்லை. 

'முடிந்தவரைப் படி. முயற்சி எடுத்துப் படி. ஏதோவொரு ஏணியைப் பிடித்துக் கொள். எப்படியாவது தொற்றிக் கொள். ஏதோவொரு இடத்தை அடைந்து விடு' 

இங்கே உள்ள வாழ்க்கை இதுவே தான். 

மாணவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள், தன்னம்பிக்கை கதையைச் சொல்லி மாணவர்களைத் தளர வேண்டாம் என்று உற்சாகப்படுத்த நினைப்பவர்களுக்கும் கூட இங்குள்ள எதார்த்தம் புரிந்தாலும் ஏன் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டே வென்றவர்களின் கதையைப் பற்றி மட்டுமே விலாவாரியாகப் பேசுகின்றார்கள். எவரும் தோல்விகளைப் பற்றிப் பேசுவதில்லை. தோல்விகள் கற்றுத் தரும் பாடங்களைப் பற்றிக் கலந்துரையாடல் செய்வதில்லை. ஏன்? 

எதற்கு? எப்படி? என்ற வார்த்தைகளே இன்றைய கல்விச்சூழலில் தேவையில்லாத வார்த்தைகளாக மாறிவிட்டது. 

அவர்களுக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை? என்ற கேள்வியை நாம் நினைத்துப் பார்த்து இருப்போமா? இன்றைய குழந்தைகள் இந்தக் கேள்வியை எளிதாக முன் வைக்கின்றார்கள். ஆனால் துணிந்து எதிர்த்து நின்று கேட்பதில்லை. வெட்டி வெட்டி வளர்க்கும் போன்சாய் மரங்கள் போலச் சிறிது சிறிதாக அவர்களை மாற்றி நாங்கள் சொல்வதை மட்டுமே செய் என்பதான கீழ்ப்படிதல் நிலையை மட்டுமே ஒவ்வொரு பள்ளிக்கூடமும் உருவாக்கி வைத்துள்ளது. 

எங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நடக்கும் விவாதங்கள் பள்ளிக்கூடம் சார்ந்த பொது நிர்வாகம் பற்றியதாகவே இருக்கும். பலரின் தகுதியை அதன் மூலம் உருவான விளைவுகளைப்பற்றியே பேசுவோம். ஒவ்வொருவருக்கும் என்ன செலவாகின்றது? என்பதனை பொது விவாதமாக மாற்றிப் பேசுவோம்? ஏன் அரசாங்கம் அரசுப்பள்ளியை வளர்ப்பதில் இருந்து பின்வாங்கியது என்பதனை புரிய வைப்பதுண்டு. காரணக் காரியங்களையும் அதன் விளைவுகளைப் பற்றி முடிந்த வரைக்கும் புரிய வைக்க முயற்சிப்பதுண்டு. 

அரசு பள்ளிக்கூடங்கள் தோல்வியானதற்கு முக்கியக் காரணங்கள் பலவுண்டு. ஆனால் எல்லாவற்றிலும் முதன்மையானது மக்களின் மாறிய பொருளாதாரச் சூழல். 

மேலைநாடுகளில் வர்க்க பேதமுண்டு. நீ வெள்ளை. நீ கருப்பு என்ற இனப்பாகுபாடு உண்டு. இந்த இரண்டுக்குள் நின்று விடும். ஆனால் இங்கே சாதி, மதம், பணக்காரன், ஏழை, கோடீஸ்வரன், அதிகாரம் பெற்றவன் என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாலைகள் உண்டு. அவரவர் அந்தந்த சாலைகளை விட்டு வெளியே பயணிக்க விரும்புவதே இல்லை. 

தனக்கான அடையாளம் என்பதனை தொடக்கத்தில் சாதி வழியே பார்த்தவர்கள் இன்று தாங்கள் வைத்துள்ள பணம் மற்றும் வசதிகள் வழியே நிரூபிக்க விரும்புகின்றார்கள்.

"என் குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்" என்பது பழங்கதை. இன்றோ "என் குழந்தை இந்தப் பள்ளியில் படிக்கின்றார்" என்பதே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளி என்பது கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது என்று தொடங்கியதோ? அன்றே அரசு பள்ளிகளைத் தீண்டாத் தன்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்படத் தொடங்கியது. 

அதற்கு மேலும் அரசே வெளிப்படையாகச் செய்யக்கூடிய ஊழல் காரணமாக அரசுப் பள்ளிகளின் தரம் அதலபாதாளத்திற்குச் செல்லத் துவங்கியது. ஆனால் இன்னமும் அங்கங்கே மூச்சைப் பிடித்துக் கொண்டு தரத்தை மேம்படுத்தும் அரசுப் பள்ளிகளை ஆதரிக்க மனமில்லாத அதிகாரவர்க்கம் மறைமுகமாகப் பெற்றோர்களைத் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கம் தள்ளுவதைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பாடத்திட்டம். கற்பிக்கும் முறைகளில் வேறுபாடுகள். இதற்கு மேலாக இந்த மொழியை நீ படித்தே ஆக வேண்டும் என்ற அரசின் ஆணவபோக்கு என்று எட்டுத் திசைகளும் சேர்ந்து மாணவர்களைச் சோர்வடையச் செய்கின்றதோ இல்லையோ பெற்றோர்களின் மன உளைச்சலை இந்த அரசும், அதிகாரவர்க்கமும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. 

குழந்தைகளின் பாடப்புத்தகங்களை, பாடத்திட்டங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பார்பபதுண்டு. மிரண்டு போயுள்ளேன். எட்டாம் வகுப்புப் பாடங்கள் நான் கல்லூரியில் படித்த பாடங்கள். எல்லாம் சரி? ஆனால் பாடங்களை நடத்தும் ஆசிரியரின் தகுதி தானே இங்கே முதன்மையாகப் பேசப்பட வேண்டும்? 

பெரிய பள்ளிக்கூடம், பிரபல பள்ளிக்கூடம் என்று எந்த இடத்தில் நம் குழந்தைகளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அங்குள்ள நிர்வாகத்தின் தன்மையைப் பொறுத்து, பாடம் நடத்தும் ஆசிரியர் வைத்தே ஒரு மாணவரின் சிறப்பு வெளியே தெரியவரும். இவர்களின் மனோநிலையைத் தெரிந்து கொள்ள ஒரு முறை "ஏன்டா உங்கள் பள்ளியில் புதிதாகத் தொடங்கிய சிபிஎஸ்சி எப்படி இருக்கு?" என்று கேட்டேன். 

அப்போது தான் சில உண்மைகள் புரிய வந்தது. 

பெற்றோர்கள் ஆசைப்பட்டுச் சேர்ந்த குழந்தைகள் அடுத்த வருடமே பாரத்தைத் தாங்க முடியாமல் மீண்டும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்திற்கே வந்த கொடுமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனது குழந்தைகளின் அறிவுத் திறன் என்ன? என்பதையே உணர்ந்து கொள்ள முடியாத பெற்றோர்கள் நடத்தும் வன்முறையாட்டம் இது. 

சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்பது கடினமல்ல. அது தொடர்ச்சியாகப் பயிற்சியில் கொண்டுவர வேண்டியது. திடீரென்று கடலில் தள்ளி உனக்கு நீச்சல் தெரிந்தால் நீந்தி வா? என்று சொன்னால் நீச்சலே தெரியாதவனின் நிலை எப்படியிருக்கும்? அப்படித்தான் இங்கே அரசு நடத்தும் பரிட்சைகளும், தேர்வுகளும் உள்ளது. 

கோவையில் பணிரெண்டாம் வகுப்புக் கட்டணம் (இரண்டு வருடத்திற்கும் தங்கும் விடுதிக் கட்டணம் உட்பட) மூன்று லட்சம் ரூபாய் என்பதனைக் கேட்கும் போதே திகைப்பாக உள்ளது. அதன் பிறகு கல்லூரி மூன்று ஆண்டுகள். அதன் பிறகே அவருக்கான துறை சார்ந்த படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்து இயல்பான கலைக்கல்லூரி பட்டம் வாங்குவதற்குச் சிறப்பான பள்ளி மற்றும் கல்லூரி என்ற பெயரில் ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தபட்சம் ஆறு லட்சம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். 

ஆனால் இதன் மூலம் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் அந்த மாணவ மாணவியருக்குக் கிடைக்கும் என்பது எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது தான் இப்போதைய நிதர்சனம். 

பத்துலட்சம் லஞ்சம் கொடுத்து மாதம் 15000 ரூபாய் வேலைக்குச் செல்லும் ஒருவரின் வாழ்க்கைக்கும், ஒரு பட்டப்படிப்பு படிக்க ஆறு லட்சம் ரூபாய் செலவளிக்கும் ஒரு நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைக்கும் இடையே உள்ளது தான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். 

நாம் தான் உண்மையான அரசியலைப் பேச விரும்புவதில்லை. நாம் தான் பேச வேண்டியதை விட்டு பேசக்கூடாதவற்றைத் தானே இங்கே எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கின்றோம்? 

நாம் பேச வேண்டியதைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா? 

(தொடர்ந்து பேசுவோம்............) 


படம் (நன்றி) Henk Oochappan