Sunday, August 28, 2016

சினிமாவுக்குப் போகலாம் வாரீகளா?


மீண்டு(ம்) வந்தேன். 

என் எழுத்துலக பயணத்தில் தொடர்பில் இருந்த, தொடர்ந்து என் தனிப்பட்ட தொடர்பில் இருக்கும், இனி தொடரப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

அடுத்த மாதம் செப்டம்பர் 30 அன்று எழுதுவதை நிறுத்தி ஒரு வருடம் முடியப் போகின்றது. மீண்டும் இப்பொழுது எழுதலாம் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. முதல் பதிவு இன்று முதல் தொடங்குகின்றது. இனி தொடர்ந்து எழுதுவேன்.

என் கடந்த கால எழுத்துலக பயணத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பது என் தகுதிக்கு மீறிய விசயமாகும்.  குறிப்பாக ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்ற மின் நூல், வெளியிட்ட மின் நூல் தளத்தில் வெளியான அதிகபட்ச தரவிறக்கம் கொண்ட முதல் பத்து புத்தகங்களில் (46.846) ஒன்றாக உள்ளது என்ற மகிழ்ச்சியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

இது தவிர வெளியிட்ட ஏனைய ஏழு மின் நூலும் சேர்த்து மொத்தமாக 1,51,298 பேர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.


காரணங்கள்  x காரியங்கள் 

சமீபத்தில் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் பேசிய வார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. "காலமென்பது இரக்கமற்ற அரக்கன். ஒவ்வொரு சமயத்திலும் சல்லடையில் போட்டு சலித்துக் கொண்டேயிருக்கும். நீ பதரா? இல்லை அரிசியா? என்பதனை நீயே கண்டு கொள்வாய்" என்றார். எழுதியதை நிறுத்திய போது இனி நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தே எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தினேன். ஆனால் கடந்த சில மாதங்களாகக் காலம் மற்றொரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது. அது தான் தமிழ்த் திரைப்பட உலகத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

மாற்றம்  x தக்க வைத்துக் கொள்வது? 

வாசிப்பின் தன்மையும் அளவு கோலும் மாறிக் கொண்டே இருக்கின்றது. கணினி பயன்படுத்தத் தெரிந்தவர்களும், நவீன தொழில் நுட்பத்தைக் கையாளத் தெரிந்தவர்களுக்கும் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க காரணமாக உள்ளது. வெறும் எழுத்தாளன் என்பதனைத் தாண்டி சமகாலத்தை பிரதிபலிக்கத் தெரிந்தவனுக்கு, வாசிக்க விரும்பும் நடையில், எளிமையுடன் கூடிய சுருக்கத்தைத் தரமுடிந்தவர்களால் மட்டும் எழுத்துலகில் நீடித்து இருக்க முடிகின்றது. நானும் மாறியுள்ளேன். மாற்றத்துடன் பயணிப்போம். 



எழுத்து  x சினிமா 

"எல்லாச் சாலைகளும் ரோம நகரை நோக்கி" என்ற பிரபல வாசகத்தைப் போல துண்டு துக்கடா கவிஞர்கள் முதல் முண்டாசு கட்டும் எழுத்தாளர்களின் இறுதி இலக்கு சினிமா.

ஃபேஸ்புக் மற்றும் சினிமா என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் நூறு சதவிகித தமிழ் வார்த்தைகளாக மாறிவிட்டது. நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது தான் உண்மை.

நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய முதல் நாள் முதல் கடைசி வரையிலும் திரைப்படங்கள் குறித்தோ, முதல் நாள் முதல் விமர்சனம் போன்ற மாயையிலிருந்து விலகியே தான் இருந்தேன். நான் எழுதிய 600 க்கும் மேற்பட்ட பதிவுகளில் நாலைந்து பதிவுகள் மட்டுமே திரைப்படங்கள் சார்ந்த விசயமாக இருந்தது. காரணம் வெறுப்பல்ல. திரைப்படம் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டியது. ஆனால் இன்று காசு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறியுள்ளதால் ரசனை என்பது பின்னுக்குச் சென்று பணம் என்பதே பிரதானமாக மாறியுள்ளது. 



அரசியல் x சினிமா 

இந்த இரண்டு உலகத்திலும் ஊடகங்களில் வரும் செய்திகளை விட வெளியே பகிர முடியாத செய்திகள் தான் அதிகம். கிளுகிளுப்புத்தனமாக விசயங்களில் உள்ள ஆர்வத்தைத் தாண்டி வெளியே வந்து விட்ட காரணத்தால் அது குறித்து எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதினால் மட்டுமே மற்றவர்கள் போல திரைப்படத்தை சிலாக்கியப்படுத்தி எழுதியதில்லை. ஆனால் பள்ளிப்பருவம் முதல் இன்று வரையிலும் நான் வாசித்த வாசிப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் என் ஏற்றத்திற்கு உதவியுள்ளது. இன்று அதிகமாக உதவிக் கொண்டிருக்கின்றது. 

திரை  x  படம் 

வாழ்க்கை முழுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு திரை தேவைப்படுகின்றது. தங்கள் பலவீனங்களை மறைந்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவருக்கான திரைகளை உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள். நான் பணியாற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்களின் வாழ்நாள் லட்சியமான திரைப்பட தயாரிப்பாளர் என்ற நிலையைக் கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளார். அதற்காக சில வருடங்கள் முன் முடிவுகளை எடுத்து, அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைக்காகக் காத்திருந்து இப்போது சரியான இடத்தை அடைந்துள்ளார். "மாயை" என்று சொல்லப்படும் இந்தத் திரைப்பட உலகத்தை எந்த "மயக்கத்திற்கும்" மயங்காதவர் நிச்சயம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

காரணம் கடந்த 25 வருடங்களாக ஊடகங்களை உள்வாங்கியவன் என்ற முறையில் நான் கற்று வைத்துள்ள வித்தைகளை அவருக்குப் பின்புலமாக நின்று கொண்டு அவருக்குத் தேவையான அனைத்து விசயங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். இது குறித்த பல தகவல்களை என் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுகின்றேன். 

அங்கீகாரம்  x புகழ்

புகழ் என்பதனை வெளிச்சத்தோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்கள். மயங்காதவர்கள் யாருமில்லை என்கிறார்கள். சுயம் இழந்து போய்விடுவோம் என்ற கவலைகள் உருவாவது இயல்பே. ஆனால் ஆணி வேர் என்பதனை எவரும் நினைவில் வைத்திருப்பதில்லை. அடிபட்டு மிதிபட்டு உள்ளே உள்ள ரணங்கள் அப்படியே தங்கிப் போய் இருக்க எத்தனைப் புகழ் மாலைகள் கழுத்தில் வந்து விழுந்தாலும் இது காய்ந்து போய் விடக்கூடும் என்பதனை உணராதவர்கள் மட்டுமே வெளிச்சத்தை விரும்புகின்றார்கள் என்று அர்த்தம், 

திரைப்பட உலகம் மாயை அல்ல. தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டே இருப்பதால் நம்ப வைக்கப்படும் ஒரு வினோத உலகம். இது தான் சிலருக்குச் சுண்டி இழுக்கக்கூடிய விசயமாக உள்ளது. என்னைப் பொருத்தவரையிலும் முரண்பாடுகள் நிறைய உள்ள உலகத்தை அருகே நின்று கவனிக்கும் வாய்ப்பாகவே இதனைப் பார்க்கின்றேன்.


ஆனால் என் விருப்பமான தொழில் என்பது கடைசி வரைக்கும் ஏற்றுமதி(ஆடைத் தொழில்) மட்டுமே. திரைப்படம் சார்ந்த பணிகள் என்பது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.

என்னைச் செதுக்கிய புத்தகம்

ஒவ்வொரு சமயத்திலும் யாரோ ஒருவர் என் மாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளார்கள். அதே போல ஒரு புத்தகம் என் சிந்தனை மாற்றத்திற்குக் காரணமாக இருந்ததுள்ளது. இப்போது என்னை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கிய புத்தகம் எழுத்தாளர் அமுதவன் எழுதிய சிவகுமார் எனும் மானிடன். இந்தப் புத்தகத்தைப் பற்றி தனிப்பதிவாக எழுதுகிறேன்.


இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தவற்றையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருக்கின்றேன். பல அத்தியாயங்களை எளிதில் கடக்க முடியவில்லை. என் ஆன்மாவோடு பேசுவது போல அமுதவனின் எழுத்து நடை உள்ளது.

இரட்டையரில் மூத்தவர் வாசிப்பு பழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்து விட்ட காரணத்தால் அவரும் 100 பக்கங்களுக்கு மேல் வாசித்துள்ளார். அப்பாவை இது போல் கொண்டாடுவாயா? என்று கேட்ட போது சிவகுமார் போல வாழ்ந்து காட்டுவீர்களா? அப்படியென்றால் அமுதவன் மாமா போல எழுத முடியுமா? என்று யோசிப்பேன் என்று சொல்லியுள்ளார்.