Wednesday, September 30, 2015

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட் என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது. எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம் என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம் எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.

உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தா வர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை, மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம் இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது. தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.

அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும் கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர் பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத் தர ஆரம்பித்தனர்.

விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம்  செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாக மாறிப் போனது.

நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில் எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில் நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும் வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சி வலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்ப ஆரம்பித்தது.

வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.

நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்க முடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும் திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்று ஆனது.

பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும் போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப் பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாத மனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்,

தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.

கல்விகழகு கசடற மொழிதல் - இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும் இலக்கணம். கசடறப்  புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப்  புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களை நாம் எதிர் பார்க்க முடியும்.

கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும் ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை

தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோ ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில் நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை. அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல் இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பல ஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை.

.அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது, ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் ( அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம் படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்கு கட்டியம் கூறுகிறது.

பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்ப உறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப் பதிவுகளின் தொகுப்பே இந்த நூல்.

தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போல முக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திரு ஜோதிஜி.

இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும் கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு  சிந்தனை மாற்றம் வரட்டும்

என்றும் மாறாத நம்பிக்கையுடன்,

இராமச்சந்திரன்  (BKR)
திருநெல்வேலி

வலைபதிவு  http://ramachandranwrites.blogspot.ae/


கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி மின் நூல்

+++++++++++++
எழுத்தாளர்களின் முக்கிய விருப்பமே தங்களின் படைப்பு பலருக்கும் போய்ச் சேர வேண்டும். வாசிப்பவர்கள் அதை விமர்சனப் பார்வையில் அணுக வேண்டும் என்பதே. இந்த மின் நூலை வெளியிட முக்கியக் காரணம் ஈழம் குறித்து வெளியிட்ட மின்னூலை வாசித்த ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஒரு நள்ளிரவில் அழைத்து வெகுநேரம் பொளந்து கட்டினார்.

(புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு 2015)

இதற்கு முன்னால் இதே போலப் பலரும் மின் அஞ்சல் வாயிலாகத்தான் உரையாடியிருக்கின்றார்கள். இவர் ஆக்கப்பூர்வமான (எதிர்மறை) விமர்சனங்கள் என்றபோதிலும் அவர் பக்கத்திற்குப் பக்கம் படித்து இருந்த விதமும், அது சார்ந்த துணைக் கேள்விகளும் எனக் கேட்டு நள்ளிரவில் மொட்டை மாடியில் நான் இருந்த போதும் என் வியர்வைச் சுரப்பியை விரைவாக்கினார். புத்தகங்களுக்கும் மின் நூலுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே இது தான். நினைத்துப் பார்க்க முடியாத உலகில் எந்தவொரு மூலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் நம் உழைப்புப் போய்ச் சேர்ந்து விடுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதை விட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்?

(அங்கீகாரமும் அவஸ்த்தைகளும்)

உரையாடல் முடிவுக்கு வந்த போது தமிழ்நாட்டில் நிலவும் மொழிக் குழப்பத்தை, ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பற்றிச் சில கேள்விகள் கேட்டார். இதன் பொருட்டே தொகுத்து வைத்திருந்த கட்டுரைகளை மெருகேற்றி இன்று இந்த மின் நூல் அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது.

+++++++++++++

தொழில் உலகத்திற்கும் படைப்புலகத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. தொழிலில் "கொள்கை" என்பதே கூடாது. இருந்தாலும் மாறிக் கொண்டேயிருக்கும். நாமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 

வாரந்தோறும் ஒவ்வொன்றும் காலாவதியாகிக் கொண்டேயிருக்கும். மொத்தத்தில் "லாபம்" ஒன்றே குறிக்கோள் மற்றும் இறுதி லட்சியமாக இருக்கும். கிடைத்த வாய்ப்பே போதும். எல்லைகளை உடைக்கத் தேவையில்லை என்பவர்களுக்கு ஒவ்வொரு நாளின் பிரச்சனையும் இயல்பாகவே தோன்றும். அலசி ஆராயத் தோன்றாது. 

எல்லைகளை உடைக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் முடியாத பட்சத்தில் அனுபவங்களை எழுதத் தொடங்குவார்கள். அப்படித் தான் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன். 

2015 ஜுலை வரைக்கும் ஆறு வருடங்கள் என்றாலும் 62 மாதங்கள் தொடர்ச்சியாக மற்றும் இடைவெளி விட்டு எழுதிய போதும் 697 பதிவுகள் எழுதியுள்ளேன். 

டாலர்நகரம் மற்றும் நண்பர்களின் விமர்சனங்கள் என்பது போன்ற கட்டுரைகளைக் கணக்கில் கொண்டாலும் ஏறக்குறைய 650 பதிவுகள் எழுதியதை ஒரு புத்தகமாக மற்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள மின்னூலைச் சேர்த்து எட்டு மின் நூலாக வெளியிட முடிந்துள்ளது. 

ஏழு மின் நூலும் 93,910+ பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. 

(200 வது மின்நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துக்கடிதம்)

தொழில் உலகத்தில் நாம் என்ன முயற்சித்தாலும் சூழ்நிலை சந்தர்ப்பங்கள் பொறுத்தே நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். முட்டாள் நிர்வாகத்தில் மாட்டிக் கொண்டவர்கள் வாழ் நாள் முழுக்க முழு மூடனாகத்தான் வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் படைப்புலகத்தில் உங்களின் உழைப்புக்கேற்ற, திறமைக்கேற்ற எல்லாவிதமாக அங்கீகாரமும் எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தேடி வரலாம். அப்படிப் பலமுறை வந்துள்ளது. மாதம் இரண்டு மின் அஞ்சலாவது படித்த மின் நூல் குறித்த உரையாடலுக்கு உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து யாரோ ஒருவர் அழைத்து அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

வலைதளங்கள், மற்றும் பின்னூட்டங்கள் மூலம் பலரின் அன்பையும் மரியாதையும் பெற்று இருப்பதையும் உணர முடிந்தது. எப்பொழுதோ உழைத்த உழைப்பு இன்று வரையிலும் ஏதோவொரு வகையில் திரும்பக் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது என்கிற வகையில் மகிழ்ச்சியே.

(நன்றிக்குரியவர்கள் -  துளசிதளம்,  மூன்றாம் சுழி,  அவர்கள் உண்மைகள்)

எழுதும் ஆர்வம் இன்னமும் இருக்கக்தான் செய்கின்றது. ஆனால் முழுமையான ஈடுபாடு உருவாகாதன் காரணம் மாறிக் கொண்டேயிருக்கும் சூழ்நிலைகள், சுவராசியத்திற்கு என்று எழுதியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சில காலம் எழுதுவதை விட்டு வெளியே நிற்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

மற்றவர்களின் விருப்பத்திற்காகவே செயல்பட வேண்டும் என்றால் நமக்கான ஆர்வம் கால் பங்கு கூட அதில் இருக்க வாய்ப்பு இருக்காது. அதில் வாசிப்புக்கான வார்த்தைகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். வாசிப்பின் மூலம் கிடைக்க வேண்டிய தாக்கம் எதுவும் மிஞ்சாது. 

தினந்தோறும் சமரசங்களோடு வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலையிலும், குறைந்தபட்சம் எழுத்தின் மூலமாவது நேர்மையையும் உண்மைகளோடு உறவாட வேண்டும் என்பது என் எண்ணம்.  மாறிக் கொண்டே வரும் சூழ்நிலைகளின் மூலம் கிடைக்கப் பெறும் அனுபவங்கள் அடுத்த கட்ட எழுத்துப் பயணத்திற்கு உதவும் என்று நம்புகிறேன்.

அது போன்ற சூழ்நிலைகள் உருவாகும் போது மீண்டும் என் எழுத்துப் பயணம் தொடங்கும். 

Wednesday, March 18, 2015

வாணி உருவான கதை

(முந்தைய பதிவு) எழுத்துப் பிழைகள் எல்லாம் ஒட்டிப்பிறந்தவையாக எனது எழுத்தோடு வந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு மறுமொழி எனது மொழியறிவை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கற்றிருந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரல்மொழி உதவியுடன் ஒற்றுப் பிழைக்கு மட்டும் சிறு செயலி உருவாக்க முனைந்து முடியாமல் போனது. ஆண்டொன்று கடந்தபோதே நிரலாக்க மற்றும் மொழிநுட்ப அறியாமை விலகி நாவி என்று எனக்காக சந்திப்பிழைகளுக்கு ஒரு செயலி தயாரிக்க முடிந்தது. 

அச்செயலி திருத்துதலை விட கற்பிப்பதையே முக்கியமாகக் கொண்டிருந்தது. சந்தி இலக்கணத்தின் தேவை அத்தகையது. அந்த நாவி பிழைதிருத்தியைப் பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிட்டபோது போது பலர் அதைப் பயனுள்ளதாகவே கருதினர். ஆனால் முழுமையான எழுத்துப்பிழை திருத்தியுடன் ஒப்பிடுகையில் நாவின் பங்கு சொர்ப்பம் என்று அத்திருத்திக்காகப் பல்வேறு நூல்களும், அறிஞர்களின் விளக்கங்களும் படிக்க நேர்கையில் உணரமுடிந்தது.

எளிதில் கிடைக்கக்கூடிய கூகிள் ஸ்கிரிப்ட் மொழியைக் கற்றுவந்தபோது நண்பர் தகவலுழவனின் ஒரு வேண்டுகோளுக்கிணங்க ஒரு தானியங்கி செய்து இணைய அகராதி ஒன்றில் 1.1 லட்சம் தமிழ்ச் சொற்களை விக்சனரிக்காக எடுத்தேன். அப்போதைக்கு அப்பணி முடிந்தது. ஆனால் இப்பட்டியலே பிற்கால எழுத்துப்பிழை ஆய்விற்கு அடிக்கோளாக இருந்தது. தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாததால் அகராதிச் சொற்கள் மட்டும் கொண்டு ஒரு திருத்தி செய்வது முடியாத காரியம் என்பதால் ஆர்வமிருந்தாலும் வழியின்றி திருத்திக்கான திட்டம் கிடப்பில் போடப்பட்டது 

தமிழ் பிழை திருத்திக்கான அடிப்படை நுணுக்கம் என்ன என்ற தொடராய்வு ஒருநாள் வெற்றிபெற்றது அதாவது வேர்ச்சொல்லையும் அதன் குடும்பப் பண்பையும் கணினிக்குக் கற்றுத்தருவதன் மூலம் அந்த வேர்ச்சொல்லின் அனைத்துவடிவங்களையும் கணினி புரிந்து கொள்ளத் தொடங்கியது. அடுத்த சவால் தொழிற்நுட்பம். இவ்வளவு பெரிய பட்டியலை எவ்விதத்தில் கணினிக்குத் தருதல் உகந்தது என்று தேடியும் கற்கவும் முனையும் போது கூகிள் ஸ்கிரிப்ட் மொழியே ஆய்வு நிலைக்குப் பொருந்தியது. காரணம் இம்மொழியை இயக்க பொருட்செலவில்லை, மேகநுட்பம் என்பதால் எங்கிருந்தும் ஆய்வைத் தொடரலாம், பிற கூகிள் விரிதாள் போன்ற தரவுதளச் செயலிகளை எளிதில் அனுகலாம்.

முன்னர் திரட்டிய சொற்பட்டியலை இப்போது குடும்பம் குடும்பமாகப் பிரிக்கப்பட்டது, இப்பணிதான் மிகவும் தொய்வைக் கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு சொல்லையும் பல்வேறு நிலைகளில் சோதித்த பின்னர்தான் அதற்கான குடும்பத்தில் சேர்க்கமுடியும். கொஞ்சம் தானியக்கம், கொஞ்சம் கைமுறைத் திருத்தம் எனக் கடந்து முழுப் பட்டியல் தயாரானது. புதிய திருத்திக்கான நிரலாக்கக் கட்டமைப்பை முடித்து இயக்கும் போது புதிய சவாலாக அதீத காலத்தாமதம் ஏற்பட்டது. 

காரணம் இலட்சக்கணக்கான சொற்களைப் பிடித்துச் சோதித்து பிழைகாட்டுவதற்குள் நாமே படித்துத் திருத்திவிடலாம் என்பது போன்ற தாமதம். சில புதுப்புது யுக்திகள் மூலம் திருத்தியின் நேரத்தைச் சேமிக்க முயன்றாலும் பலனில்லை. காரணம் கூகிள் ஸ்கிரிப்ட் ஆய்விற்கு ஏற்றது ஆனால் வெளியீட்டிற்கு உகந்ததில்லை என்று புரிந்தது. அதன் பிறகு ஒருவிதத்தில் இத்திட்டம் கிடப்பில் மீண்டும் போடப்பட்டது. பைத்தான் என்ற மொழியை இயக்கும் அளவிற்குக் கற்கமுடியவில்லை. என்னிடமிருந்த பழைய விபி தொகுப்பியில் தமிழ் ஒருங்குறி இணக்கமில்லை.

இறுதியாக சி#, டாட் நெட் மொழி கற்க வாய்ப்பு கிடைத்தது. அவ்வாய்ப்பில் எழுத்துப்பிழை திருத்தியை மீண்டும் புதிதாக உருவாக்க முயலப்பட்டது புதுமொழிக்கே உரிய தடங்கல்களைத் தாண்டி மேசைக்கணினிக்கான செயலிமட்டும் உருவாக்கப்பட்டது. ஆனால் இதைக் கொண்டு இணையத்தில் நேரடியாகப் பயன்படுத்த முடியாததால் எல்லாருக்குமானதாக இதுயில்லை. டாட் நெட் நுட்பத்தில் இணையதளத்தை உருவாக்குவது மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த தீர்வாகப்பட்டது. அதற்கான புரவல் வழங்கியின் பொருட்செலவு கொஞ்சம் தயக்கத்தைத் தந்தபோது வலைத்தமிழ் பார்த்தசாரதி அண்ணன் உடனே தனது வழங்கியைத் தந்தார். பின்னர் சில மாதத்தில் புதிய தளம் கட்டப்பட்டு வாணி பிறந்துவிட்டாள்
--

எழுத்துப் பிழை திருத்தி சவால்கள்

பொதுவாகப் பிழை திருத்திகளில் கொடுக்கப்படும் சொற்களில் கணிக்கவியலாச் சொற்களை விட்டுவிட்டுப் பிழையென கண்டுபிடித்த சொற்களை மட்டுமே சுட்டுக்காட்டும் யுக்தி கையாளப்படும். அரிசியில் கல்லைப் பொறுக்குவது போல மேலோட்டமான இம்முறையில் ஒருவகையில் நம்பகத்தன்மை குறைகிறது. 

சல்லடையால் ரவையைச் சலிப்பதுபோல ஆழமாகச் சொற்களைச் சேதித்து, பிழைகளைக் காட்டும் முறையே சிறந்தது. ஆனால் தமிழ் போன்ற ஒட்டுநிலை மொழிகளில் அதாவது ஒன்றிக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து வழங்கப்படும் போது இது சாத்தியாமா என்று கேள்வி எழும். ஒரு பெயர்ச்சொல்லானது 

வினைச்சொல்லுடனும் இணைந்து எண்ணிக்கையில்லாத அளவிற்கு வரிந்தாலும் பிரதானமான பயன்பாட்டின்படி ஒரு பெயர்ச்சொல்லானது  சுமார் 640 விதங்களிலும் அதேபோல வினைச்சொல்லும் பிரதானமான பயன்பாட்டின்படி 1450 விதங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலப் பிழைதிருத்தி யுக்தியுடன் தமிழில் அமைக்க குறைந்தது சுமார் 35 மில்லியன் சொற்கள் வேண்டும். 

பிறமொழி திருத்திகளை மட்டும் பின்பற்றி இம்மாதிரி இயல்மொழி பகுப்பாய்வு என்பது மிகவும் கடினமாகிவிடும். ஆனால் நமது தொல்காப்பியரும் நன்னூலாரும் தமிழுக்கான புணர்ச்சி விதிகளை ஈராயிரம் ஆண்டுக்கு முன்னரே தந்துவிட்டனர். 

எனவே மற்ற மொழி திருத்திகளைப் பின்பற்றாமல் தமிழுக்கென்று புதிய அணுகுமுறைவேண்டும். அதில் தற்காலநடைமுறையில் உள்ளவிதிகளைக் கணினிக்குக் கற்பிப்பதன்மூலன் 35 ஆயிரம் வேர்ச்சொற்கள் மட்டும் கொண்டு சாராசரியான பிழைதிருத்தியை வடிவமைக்கமுடியும். 

இரண்டே ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இதில் "தமிழர்களாகயிருக்கிறார்கள்" என்று தட்டச்சிட்டாலும் படித்துப் புரிந்துகொண்டு "தமிழர்களாகவிருக்கிறார்கள்" என்று பிழைதிருத்தி வழங்கும்.

இயல்பாக ஒரு எழுத்துப்பிழை திருத்தி உருவாக்குவதில் உள்ள சவால்கள் நீங்கலாக, தமிழில் பிழை திருத்திகள் உருவாக்குவதில் எதிர்படும் சவால்கள் சில

பிறமொழி திருத்திகளைப் பின்பற்றி தமிழுக்கு உருவாக்க முடியாததால் தமிழ்ப் பின்புலத்தில் இருந்து சிந்திக்கவேண்டும். தமிழும், கணினியும் ஆழமாகக் கற்கவேண்டும்.

தற்காலத் தமிழ்ச் சொற்பட்டியல்கள் எளிதில் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் "தேர்வுக்குழு", "காவல்நிலையம்", "முதலமைச்சர்" போன்ற இருசொலால் இணைந்த ஏராளமான சொற்கள் அகராதியிலும் இருப்பதில்லை அத்தகைய சொற்களைத் தானியங்கி கருவி கொண்டோ, கைமுறையிலோ இணையத்திலிருந்து திரட்டவேண்டும்.

ஒரு மூலச் சொல் எந்தெந்த வகையில் தற்காலத்தில் பிற இடைச்சொல்லுடன் புணரும் என்ற தகவல்கள் எளிதில் தெரிவதில்லை எனவே அதற்கான பட்டியலை முதலில் தயாரிக்க ஒரு தமிழ் வாசகராக மாறவேண்டும்.

தயாரித்த பட்டியல் மூலம் ஒரேமாதிரி விதிகள் கொண்ட சொற்களை அதற்கான பகுப்பில் இடவேண்டும். இதுதான் கடினமான பணி. கொஞ்சம் சொற்களைப் பகுப்பில் போட்டப்பிறகு புதிதாக ஒரு விதி அவற்றுக்குள் மாறுபடும் பிறகு மீண்டும் முதலிருந்து பகுக்கவேண்டும்

எழுத்துப்பிழை திருத்தி என்பது நீண்டகாலத் திட்டம் என்பதாலும் வணிகச் சந்தை இல்லையென்பதாலும் கல்லூரி மாணவர்கள் முதல் தனியார்வரை உழைப்பையோ, பொருளையோ செலவளிக்க முடிவதில்லை.

பிழை போல இருக்கும் சில சொற்கள் வேறு பொருளில் சரியான சொல்லாக இருக்கிறது. உதாரணத்திற்கு "அவண்" என்ற சொல் ஆண்பால் சுட்டுப்பெயரின் பிழையான வடிவம் என நினைத்தால் தவறு. இச்சொல்லுக்கு அவ்விடம் என்ற பொருள் உள்ளதால் சரியான சொல்லே. இதுபோல பல சொற்கள் விடுபடலாம் அதனை சோதனை செய்து கண்டுபிடிக்கவேண்டும்.

கணித்தமிழ் இன்றைய நிலை

கடந்தாண்டு புதுவையில் நடந்த உத்தமம் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க பதிவுக் கட்டணம் 3000 ரூபாய். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் வல்லுநர்கள் போன்ற தொழில்ரீதியாக மேம்பாட்டைப் பெறக்கூடியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும். தன்னார்வலர்களால் முடியாது. அதேவேளையில் தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற்ற பிறகு கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல நிதி பல்வேறு அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. 

ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? சரியாகப் பயன்படுகிறதா? எனத் தெரியவில்லை. இவர்களின் செலவுகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் மாறவேண்டும். அந்த நிதியைக் கொண்டு இத்தகைய ஆய்வு மாநாட்டுக் கட்டணத்தை ஏற்று தன்னார்வலருக்கு உதவியிருக்கலாம்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் எழுத்துணரி முதல் சிறுசிறு அகராதிகள், ஆண்ட்ராய்ட் எழுதிவரை சிலர் உருவாக்கினாலும் அதிகப் பொருட்செலவுடன் உருவாக்கியுள்ளதால் அவற்றை இலவசமாக அவர்கள் வெளியிடுவதில்லை. அரசு அவற்றை வாங்கி திறமூலமாக நாட்டுடைமையாக்கலாம் அதன் மூலம் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு உதவும். ஒரு நிலையான வருமானம் இருப்பதால்தான் என்னால் தொடர்ந்து இதனைச் செய்துவரமுடிகிறது. வருமானம் குறைவாக இருந்து படைப்பாற்றல் இருக்கும் ஒருவர் தொழிற்நுட்பத்தில் பங்களிப்பது இயலாதகாரியமாகிவிடுகிறது. 

தமிழை வைத்து வியாபாரம் பார்ப்பதா? என்று கூறிக்கொள்பவர்கள் தன்னார்வலர்களின் முயற்சிகளுக்கு புரவலர்களாக இருப்பதில்லை. இப்படி இருக்கும் போது எப்படி இலவச மென்பொருட்கள் வளரும்?  புத்தகங்களுக்குச் சந்தை உள்ளதோ அதேபோல தமிழ் மென்பொருட்களுக்கும் சந்தை உருவாகும் போது ஆற்றல் மிக்க மென்பொருட்கள் வந்து குவியும் என்று நம்புகிறேன்.


தமிழில் இது போன்ற ஆக்க பூர்வமான பணிகள் செய்யும் நீச்சல்காரன் போன்றவர்களுக்கு நீங்கள் ஆதரவு கரம் நீட்ட வேண்டும். இதனை பலருக்கும் கொண்டு சேர்க்க உங்கள் நட்பு வட்ட வட்டத்தில் பகிர அழைக்கின்றேன்.



பின்குறிப்பு

பலரும் என்னிடம் குறுகிய காலத்தில் அதிக மின் நூல்களை வெளியிட்டு உள்ளேன் என்று ஆச்சரியப்பட்டனர்.  

அதற்குக் காரணம் நீச்சல் காரன் வெளியிட்டுள்ள சந்திப்பிழை திருத்தி மற்றும் வாணி தமிழ் பிழைத்திருத்தியுமே காரணம் ஆகும். 

கடந்த 2001 வருடம் தொடங்கி அதற்குப் பிறகு தமிழகத்தில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் 70 சதவிகிதம் ஆங்கில வழிக்கல்வியில் கற்றுக் கொண்டு வருவதால், அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் இணையத்தில் புழங்கும் போது அவர்கள் மறந்த தமிழ் வார்த்தைகளை நிச்சயம் இது போன்ற மென்பொருட்கள் அவர்களுக்கு அடையாளம் காட்டும் என்பதால் இவரைப் போன்றவர்கள் ஆதரிப்பது நமது கடமையாகும். 

தமிழ் என்ற மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல பிழைப்பு வாதிகளைத் தாண்டி இவரைப் போன்ற குறுகிய நபர்கள் மூலம் தான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்வோம்.



Tuesday, March 17, 2015

நமக்குத் தேவையானது. இது முக்கியமானது.

புதிய எழுத்துப்பிழை திருத்தி அறிமுகம்

தமிழில் நாவி சந்திப்பிழை திருத்தி உட்பட மொத்தம் நான்கு திருத்திகள் உள்ளதாக தமிழ்ப்பேராயம் கூறுகிறது. ஆனால் உலகில் யாவரும் இணையத்தில் பயன்படுத்தும் வண்ணம் தமிழில் முழுமையான ஒரு திருத்தி உருவாக்குவது மிகவும் சவாலான காரியம். தமிழ் மென்பொருட்களுக்கு வணிகச் சந்தை இல்லையென்பதாலும், ஆய்வுச் செலவும், ஆக்கச் செலவும், இணையவெளியீட்டுச் செலவும் பெரிய தடையாகவுள்ளதால் இதுவரை ஒரு முழுமையான மென்பொருள் வெளியாகவில்லை.

அதற்கான ஒரு சிறுமுயற்சியாக இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது. 

தற்போது பீட்டா பதிப்பாக(சோதனை நிலையில்) வெளிவந்துள்ள இத்திருத்தி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரைவில் செழுமையான வடிவமாக வெளிவரும். அதுவரை முக்கியமான சில சொற்களும் விடுபட்டிருக்கும் வழுக்களும் இருக்கலாம், ஆனால் பல்வேறு இலக்கண விதிகளைப் பயன்படுத்தி இத்திருத்தி இயங்குவதால் சுமார் 70 மில்லியனுக்குமேல் சொல்வடிவங்களைப் புரிந்துகொள்ளும்.

நாவியில் பயன்படுத்தியது போல உங்கள் வாக்கியங்களை வாணியில் கொடுத்து "திருத்துக" பொத்தானை அழுத்தவும், பின்னர் பிழை திருத்தியபிறகு "சம்மதம்" பொத்தானை அழுத்தி, திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சுயதிருத்தம் என்ற தேர்வு பொத்தானைத் தேர்வு செய்யாவிட்டால் இக்கருவி தானாக எந்தப் பிழையையும் திருத்தாது, வெறும் பரிந்துரை மட்டும் வழங்கும். காட்டப்படும் பரிந்துரைப் பட்டியலில் வாணியின் பரிந்துரைகளும், பயனர் அளித்த சொல்லும் இருக்கும். கூடுதலாக பயனர் திருத்திக் கொள்ள எழுத்துப்பெட்டியும் உள்ளது. ஒரு சொல்லை மட்டுமோ அல்லது மொத்தமாகவோ மாற்றிக் கொள்ளலாம். 

மேலும் உதவிக்குறிப்புகள் இங்கே

இத்திருத்தி என்ன செய்யும் என்றால்,

இறுதி எழுத்துச் சந்திகள் தவிர (அதற்கு நாவியைப் பயன்படுத்தலாம்) மற்ற சந்திகளைக் கணித்துப் பரிந்துரைக்கும். 

உதாரணம்:எடுத்துகொள்ள -> எடுத்துக்கொள்ள, அகட்சி -> அக்கட்சி என்று பரிந்துரைக்கும்.

புணர்ச்சி விதிப்படி இதன் சொற்பிழை சோதனை அமைவதால் புணர்ச்சி தவறிய சொற்களையும் சுட்டிக் காட்டும். உதாரணம்:நூறுக்கும் - > நூற்றுக்கும் என்று சரியாகப் பரிந்துரைக்கும். "கருத்தில் கொண்டு" என்று எழுதினாலும் "கருத்திற் கொண்டு" என்று எழுதினாலும் புரிந்துகொள்ளும். "பொருற் பெயர்" என்று தவறாக எழுதினால் இவ்வழியில் "பொருட் பெயர்" எனப் பரிந்துரைக்கும்.

ல-ள-ழ, ன-ந-ண, ர-ற போன்ற வேற்றெழுத்து வேறுபாடுகளைக் கண்டு பரிந்துரைக்கும். சில இடங்களில் (ஒளி,ஒலி,ஒழி) இயல்பான சொல் இருந்தால் தவிர இதர இடங்களில் சுட்டிக் காட்டி பரிந்துரைக்கும். உதாரணம்:ஒலிந்துவிட்டேன் -> ஒளிந்துவிட்டேன்/ஒழிந்துவிட்டேன், சுவறில் -> சுவரில் எனப் பரிந்துரைக்கும்.

பிழையான சொற்களைக் கண்டுபிடித்த பிறகு இருவகையாகப் பரிந்துரைகள் வழங்கப்படும். ஒன்று இலக்கணம் சார்ந்த திருத்தங்களான புணர்ச்சி திருத்தம், ஒற்று, வேற்றெழுத்து திருத்தம் போன்றவற்றைச் செய்யும். இரண்டாவது இலக்கணம் சாராத திருத்தங்களான தட்டச்சுப் பிழை திருத்தம், வழக்குமொழி திருத்தம், சில பிறமொழிச்சொல் திருத்தம் போன்றவற்றையும் செய்யும்.

பிறமொழிச் சொற்கள் சிலவற்றையும் திருத்தும் உதாரணம்: டாக்டர் -> முனைவர்/மருத்துவர்

வழக்குமொழிகளைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான திருத்தங்கள் தென்தமிழக வழக்கிற்கு வழங்குகிறது. வடதமிழகம், இலங்கை வழக்குகளைக் காலப்போக்கில் இணைத்துக்கொள்ளப்படும். உதாரணம்: விழுந்திருச்சே ->விழுந்துவிட்டதே, அடிச்சுகிட்டு -> அடித்துக்கொண்டு
தட்டச்சுப் பிழைகள் என்பது கண்ணுக்குத் தெரிந்த எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத தவறான ஒருங்குறி வடிவங்களும்தான். பல்வேறு தட்டச்சு இடைமுகங்களில் தமிழ் உள்ளீட்டு முறைகளில் சிலசமயம் தவறாக எழுத்துக்கள் சேர்ந்துகொள்ளும். 

உதாரணம்: க + ஒ என்பதை க+ எ+ அ என்று எடுத்துக்கொள்ளும் கொள்கை -> கொள்கை. துணைக்காலுடன் ஒற்றுக்குறி சேர்ந்து ரகரவொற்றாகத் தெரியும் ா் -> ர் போன்ற பல பரிந்துரைகளும் உண்டு

வழமையான பிற மொழி சொற்பிழை திருத்தி போல பிழையாக எழுதிய சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டிவிடும். சில முக்கிய பிரமுகர்கள், கதைமாந்தர்கள், முக்கிய நகரங்கள் தவிர பொதுவாக உயர்திணைப் பெயர்கள், இடங்களின் பெயர்கள் தற்போதைக்குச் சேர்க்கவில்லையென்பதால் அச்சொற்கள் அடிக்கோட்டுக் காட்டப்படும். 

எனவே அடிக்கோடிட்டுக் காட்டுபவை எல்லாம் பிழையென்று அர்த்தமில்லை திருத்தியின் பட்டியலில் இல்லாத சொல்லெனப் பொருள் கொள்க

இச்செயலியின் ஆய்விற்கே பொருளாதாரச் சிக்கல்கள் நிலவியபோது இணைய வெளியீடு முடியாமல் ஓராண்டு கடந்துபோனது. பெருந்தன்மையுடன் வலைத்தமிழ் நிறுவனம் தனது வழங்கியைக் கொடுத்துதவியதால் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி அவர்களுக்கும்,
இலக்கண ஆலோசனைகள் அளித்துவரும் முனைவர் செங்கைப் பொதுவன் அவர்களுக்கும்,

தொடர்ந்து ஆலோசனைகளும், பலருக்கு அறிமுகமும் செய்துவரும் ஜோதிஜி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயன்படுத்திப்பாருங்கள். 

வழமைபோல குறைகளையும் ஆலோசனைகளையும் எமக்கு அறியத்தாருங்கள், 

பயனுள்ளதாக இருந்தால் வாணியை அடுத்தவருக்கும் அறியத் தாருங்கள்



Wednesday, March 04, 2015

மாற்றங்கள் உருவாக்கும் பாதைகள்

ரு நூற்றாண்டின் நான்கில் ஒரு பகுதியை அனுபவத்திற்கு செலவழித்துள்ளேன் என்பதை வாசிக்கும் போது சற்று மிரட்சியாக இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகள் என்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் தானே?  இந்த 25 ஆண்டுக்குள் உருவான சமூக மாறுதல்களும், மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நவீன தொழில் நுட்ப வசதிகளும் ஒவ்வொரு தனி மனிதர்களையும் நிறைய மாற்றம் அடையச் செய்து உள்ளது. நானும் மாறியுள்ளேன். நான் விரும்பாவிட்டாலும் நான் மாறியாக வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கின்றேன்.

ம்மிடம் இன்று பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயணம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அதற்கான தேவைகளும் உள்ளது. நெருக்கடிகள் நம்மை உந்தித் தள்ளுகின்றது. இன்று எவராலும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகின்றது. 

ன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்களால் மட்டுமல்ல, பணிபுரிகின்ற பணிச்சூழலில் நினைத்த நேரத்தில் கண்டங்களைக் கூடக் கணப் பொழுதில் கடந்து விட முடிகின்றது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்திற்குள்ளே இருக்கும் அடுத்த ஊருக்குள் செல்ல முடியாமல், அந்த ஊரைப் பற்றி அறிந்திருக்காமலேயே வாழ்ந்து முடித்தவர்கள் அநேகம் பேர்கள். என் மாவட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்குக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் பள்ளிச்சுற்றுலா என்ற பெயரில் ஒரே ஒரு முறை தான் நான் சென்றுள்ளேன்.  இன்று நான் தமிழ்நாட்டுக்குள் இன்னமும் முழுமையாக செல்ல வாய்ப்பு அமையாத மாவட்டங்கள் மூன்று உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்யாகுமரி.

டை மழை பெய்தால் கண்மாய் மீன். அளவான மழை என்றால் கடல் மீன். இது தவிர அன்றாட உணவில் ஆட்டுக்கறி. கோவில் திருவிழா என்றால் கோழிக்கறி. வீட்டு விசேடங்கள் என்றால் காய்கறிகளின் அணிவகுப்பு விருந்து தான் வாழ்க்கை. உணவு தான் முக்கியம். உணவே தான் மருந்து என்று வாழ்ந்த வாழ்க்கை. இன்று எப்போது தான் உங்கள் நாக்கை அடக்கப் போறீங்களோ? என்று மனைவி கேட்ட காலம் மாறி மகள்கள் கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்துள்ளது. 

மார்கழி மாதம் குளிர் பொறுத்து, சில சமயம் சுடுதண்ணீர், பல சமயம் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நான்கு சந்துகள் தாண்டி இருந்த பெருமாள் கோவிலுக்கு ஓட்டமும் நடையுமாக அக்காக்களுடன் ஓடியுள்ளேன். பொழுது விடியாத நிலையில் இருட்டுக்குள் தடவி பயந்து ஓடி கோவிலை அடைந்து பூஜை முடிந்து பெற்ற வெண் பொங்கல், சுண்டல் சமாச்சாரத்தைச் சூடு பொறுக்க முடியாமல் தின்று முடிக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அடுத்த நாளும் அதே கோவிலுக்குச் செல்ல வைத்தது.  இன்று கோவில்களில் கூடும் கூட்டமும், இதற்கென தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் எனக்கு வேடிக்கைப் பொருளாக மாறியுள்ளனர்.

வீட்டுக்கருகே இருந்த கோவில் குளக்கரையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அன்று பேசப் போகின்ற அரசியல்வாதியின் பழையைப் பேச்சை கேட்டுக் கொண்டே கடந்த போதும், இரவில் பாதித் தூக்கத்தில் தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது அறைகுறையாக அன்றைய அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கேட்டபடியே அவற்றை மறந்து போனதுண்டு. "இங்கே அரசியல் பேசாதீர்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை எந்த இடத்திலும் பார்க்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக 24 மணி நேரமும் ஒவ்வொரு இடத்திலும் தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.  ஆனால் தீவிர அரசியல் கொள்கைகள் மாறி திருகுதாள அரசியல் அங்கீகாரம் பெற்று விட்டது.

றாம் வகுப்புப் படித்த போது படக்கதைகள் அடங்கிய புத்தகத்திற்காக அலைந்த பொழுதுகள், பத்திரிக்கைகளில் வந்த நடிகர் மற்றும் நடிகைகளில் கிசுகிசுகளைப் படிக்க அலைந்த தருணங்கள், விடுமுறை தினங்களில் அருகே இருந்த நூலகத்தில் குடியிருந்த நேரங்கள் எனக் கழித்த பொழுதுகள்.  ஆனால் இன்று வாரப்பத்திரிக்கைகள் தவிர்த்து பெரிய கட்டுரைகள் அனைத்தையும் டேப்லெட் கணினி வழியாகப் படிப்பது தான் வசதியாக உள்ளது. 

ரு நாள் கூடத் தவறாமல் சென்ற பள்ளிக்கூட வாழ்க்கை. பயம் கலந்த மரியாதையோடு ஆசிரியரைக் கண்டு ஒளிந்து திரிந்த வாழ்க்கை. கல்வி தான் நம் வாழ்க்கை. ஒழுக்கம் மட்டுமே நமக்கு உயர்வைத் தரும் என்ற அறிவுரைகள். கல்லூரி வந்த போதிலும் எதிர்காலம் குறித்த எவ்வித அவநம்பிக்கைகளையும் சுமக்காத நம்பிக்கைப் பொழுதுகள். இந்த உலகமே அழகானது என்று நினைத்து வாழ்ந்த காலங்கள்.  நாம் வாசித்த புத்தகங்களில் படித்த, பாதித்த சாதனையாளர்களைப் போல நாமும் ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்வான  நிலைக்கு வந்து விடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்த வாழ்க்கை என் அனைத்தும் கடந்த 25 ஆண்டு பயணத்தில் மாறியுள்ளதை இந்த மின் நூல் வழியாகப் பேசியுள்ளேன். 

ள்ளிக்கூடத்தில் மக்குப் பையனுக்கும் சராசரி மாணவனுக்கு இடையே உள்ள ஒரு இடத்தை ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து இருந்தார்கள். காரணம் பாராட்டிவிட்டால் பாம்பு படம் எடுத்து ஆடி விடும் என்ற நம்பிக்கையில். 

"உன் அக்கா, அண்ணன் பெயரைக் கெடுப்பதற்காகவே நீ எங்களிடம் வந்து சேர்த்துள்ளாய்" என்ற பொதுப் பாராட்டு அவ்வப்போது கிடைக்கும். பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் முத்துச் சாமி வழங்கிய ஆசிர்வாதம் இன்னமும் என் நினைவில் உள்ளது. "இந்த வருடம் நீ தேர்ச்சி பெற மாட்டாய். கணக்கில் பத்து மதிப்பெண்கள் எடுத்தாலே ஆச்சரியம்" என்றார். அவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு 84 மதிப்பெண்கள் எடுத்தேன்.  தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தை கையாளத் தெரியாதவனாக இன்னமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

னால் வாரந்தோறும் ஐம்பது லட்சத்தைக் கையாள வேண்டிய பொறுப்பை வாழ்க்கை எனக்கு வழங்கியுள்ளது. பணம் கைக்கு வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்த கணக்குகளை ஒப்படைத்து விடுவதால் "அவர் கணக்கு விசயத்தில் புலி" என்று பாராட்டும் அளவிற்கு நிறுவன நிர்வாக விசயங்களில் திறமையைக் காட்ட முடிகின்றது. எனக்குப் பின்னால் எவர் என் பதவியில் வந்து அமர்ந்தாலும் நான் உருவாக்கிக் கொடுத்த "வழிகாட்டலை"த்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்வாகம் சொல்லுகின்ற அளவிற்கு ஒவ்வொன்றிலும் எளிமை மற்றும் நேர்மையை உருவாக்க வாழ்க்கை கற்றுத் தந்துள்ளது.

நகைமுரண் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று போல. 

மாற்றம் என்பது மட்டும் மாறாதது. மாற்றங்கள் தான் உங்களை வழி நடத்துகின்றது. மாற்றமே உங்களை உருவாக்குகின்றது. மாற்றத்தை உங்களால் உள்வாங்க முடியாத பட்சத்தில் தேங்கிக் கிடக்கும் குளத்தைப் போல உங்கள் வாழ்க்கை நாற்றம் எடுத்து விடும் என்று அர்த்தம். நான் மாறினேன். என்னை இந்தச் சமூகம் மாற்றியது. மாற்றத்தை உள் வாங்கினேன். தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டேன். 

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டேயிருந்தால் இருட்டறையில் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க விரும்புகின்றோம் என்று அர்த்தம். பல சமயம் திடீரென வெளிச்சம் நம் மீது பரவும் போது நம் வளர்த்துக் கொண்டுள்ள குறுகிய எண்ணங்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக வாழ்க்கையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். என்றாவது ஒரு நாள் மற்றவர்களின் பார்வைக்குப் படத்தான் செய்யும். 

வெளிப்படைத்தன்மை எல்லா இடத்திலும் தேவையில்லை என்றாலும் உங்கள் மனசு விடாமல் துரத்தும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே தானே ஆக வேண்டும்? நான் என்னையே கேள்வியாக்கிக் கொண்டதுண்டு. என்னையே கேலிப் பொருளாக மாற்றிக் கொண்டதும். மற்றவர்களின் கேலிகளைக் கவனித்ததுண்டு. மொத்தத்தில் ஒவ்வொரு நாளையும் பள்ளிக்கூடத் தினம் போலப் பார்ப்பதுண்டு. காரணம் இங்கே ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்கள். நாம் மாணவர்களாக வாழும் பட்சத்தில். 

ணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றையும் பற்றி இந்த மின் நூலில் பேசியுள்ளேன். கடந்த 14 மாத மின் நூல் உலகில் என் முந்தைய ஆறு மின் நூல் வழியாக 66000+ நபர்களைச் சென்றடைந்துள்ளேன். "வாழ்க்கையில் இலக்கு தேவை" என்கிறார்கள். நிச்சயம் ஒரு லட்சம் என்ற இலக்கு நோக்கி இந்தப் பயணம் சென்று சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 

ந்த மின் நூலை நண்பர் ராஜராஜனுக்கு சமர்பித்துள்ளேன். அட்டைப்படம் உருவாக்கிக் கொடுத்த நண்பர் மனோஜ் மற்றும் என் மின் நூல்களுக்குச் சிறப்பான வகையில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றி.

ஏதோவொரு தருணத்தில், யாரோ ஒருவர், உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு என் எழுத்தை வாசித்துக் கொண்டிருப்பார் என்பதே யான் பெற்ற இன்பம்.

Sunday, February 15, 2015

வலைத்தமிழ்

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம். சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன். 

ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும், அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்குச் சிறப்பான அங்கீகாரத்தைத் தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும். எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில், எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும். 

இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை, வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து, தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். 

ஜோதிதியின் ஆலோசனையின்பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம், இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது. இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் மாடசாமி, ரம்யா, ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை, வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும், உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே? இதைத்தான் இந்தப் பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டுக் காட்டியுள்ளார். 

இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள், முதலாளிகளின் மனோபாவம், தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது. பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார். 

எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார். இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது. 

மொத்தத்தில் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" போல், தமிழகக் கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஜி.டி.நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார். 

மேலும் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார்.. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன. 

ஜோதிஜி கடந்த 2009 முதல் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து, தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார். 

தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும். தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும், ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை, தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு. 

தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை, அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி, இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை, அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள், தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார். 

இவர் இதற்கு முன்னால் "டாலர் நகரம்" என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்ற. பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம், குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம். இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும். 

இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. 

தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும், ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும், இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. 
நன்றி.. 

ஆசிரியர் குழு சார்பாக 

ச.பார்த்தசாரதி 
U.S.A


தொடர்புடைய பதிவுகள்

Monday, February 09, 2015

உணர்வுகளை வாசித்து, வெற்றிக்கு வழிகாட்டும் ஆவணம்

திருப்பூர் பனியன் தொழிலில் தான் நுழைந்தது முதல் சந்தித்து வரும் பல்வேறு நிகழ்வுகளை, அந்த நகரம் பிறமாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு வாழவைப்பதை, வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததை, ஏற்றுமதி மிகுதியினால் அந்நிய செலாவணி மிகுந்திருப்பதைத் தனது டாலர் நகரம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.

வலைதமிழ் என்ற இணைய இதழில் தொடராக எழுதி வந்து தற்போது மின்நூலாக வந்திருக்கும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் அதன் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம், 

பின்னலாடை தொழிலோடு இணைந்து அதில் உழலும் முதலாளிகள் முதல் அடிமட்ட தொழிலாளி வரை உள்ள மனிதர்களை வாசித்த வரலாறு என்றும் சொல்லலாம். 

திருப்பூர் எனது சொந்த ஊர். நான் 4 வகுப்பு வரை அங்குக் கொங்கு நகர் நகராட்சி பள்ளியில் படித்துவிட்டு, பின்னர்த் திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தாலும், வருடந்தோறும் விடுப்பிற்குத் திருப்பூர் வந்து கொங்குநகர், பன்சிலால், தனலட்சுமி மில் ரோடு, யூனியன் மில் ரோடு, கஜலெட்சுமி தியேட்டர், டைமண்ட் தியேட்டர் பகுதி, ராயபுரம், ஏற்றுமதியில் நிராகரிக்கப்பட்டு 2ம் தரம் (செகண்ட்ஸ்) உலாவரும் காதர்பேட்டை எனச் சுற்றிச் சுற்றி வந்தது, முன்சீப் சீனிவாசபுரம் (தற்போதைய திருப்பூர் திருப்பதி கோவில் தெரு) ல் உள்ள பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர்களின் நடவடிக்கைகளைப் பள்ளிப்பருவத்திலிருந்தே கண்காணித்து வந்தது போன்ற வற்றால், நண்பர் ஜோதிஜியின் தொடரின் ஒவ்வொரு அத்தியாயம் வெளி வந்த போதும் நுனிப்புல் மேய்வது போல் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அறிவாளி திரைப்படத்தில் எஸ்.வரலட்சுமி நடிகைக்குச் சப்பாத்தி செய்யத் தங்கவேலு சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அதுதான் எனக்குத் தெரியுமே என்பது போல் நான் அருகில் இருந்து சுவாசித்த பனியன் தொழிலின் சில விபரங்களை அதுதான் எனக்குத் தெரியுமே என்று நகர்ந்திருக்கிறேன். 

ஆனால் முழுத் தொடரும் முடிந்து நண்பர் மின்நூல் வடிவில் பதிவேற்றியபிறகு பதிவிறக்கம் செய்து ஒரு விடுப்பு நாளில் தொடர்ந்து படித்த போது விறுவிறுப்பும், சுவாரசியமும் தொற்றிக் கொண்டது என்றால் அது மிகையல்ல. 

தனியார் தொழிலில் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்குத் தொழிலாளிகள் மாறுவது என்பது யதார்த்தமாக நிகழக் கூடிய ஒன்றே. அந்த வகையில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த ஜோதி கணேசன் மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்திறன் இணைந்த ஒரு பொறுப்பில் புதிய நிறுவனம் ஒன்றில் உள் நுழைந்தது முதல் அங்குள்ள பிரச்சனைகளை ஆழ்ந்து உணர்ந்து படிப்படியாக அவற்றைக் களைந்து வெற்றி கண்ட கதையைத் தொடர் அருமையாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. 

பொதுவாக ஒரு தொடரை, அல்லது அது தொகுப்பாகப் புத்தகமாக வெளிவருகையில் அதை வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர் தன்னுடைய வணிகமும் அதில் இணைந்துள்ளது என்கிற சுயநலத்தில் அந்தத் தொடரைப் பற்றி, புத்தகத்தைப் பற்றி உயர்வாக ஒன்றிரண்டு பக்கங்கள் பதிப்புரை எழுதுவது இயல்பு. 

ஆனால் வலைதமிழ் இணைய நிறுவனத்தினர் நண்பர் ஜோதி கணேசனின் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பினை கண்டு திக்கு முக்காடி, மின்நூலுக்கு எழுதியிருக்கிற நெடிய பதிப்புரையிலிருந்தே தொடரின் வெற்றியை நாம் உணர முடிகிறது. 

என் தம்பி ஒருவன் இன்று மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்ற ஒரு பனியன் நிறுவனத்தில் படிப்படியாக வளர்ந்து பொதுமேலாளராக அந்த நிறுவனத்தில் ஒரு அங்கமாக வளர்ந்து ஏறக்குறைய ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அந்த நிறுவனமே கதியென்று இருக்கிறான். அவனது முதல் மனைவி அந்த நிறுவனம், 2 வது மனைவிதான் இல்லற வாழ்விற்குத் தேர்வுசெய்து மணம் முடித்துக் கொண்ட மனைவியும், குழந்தைகளும். அத்தகைய dedicated அர்ப்பணிப்பான உழைப்புத்தான் இந்த உயரத்திற்கு அவனைக் கொண்டு வந்திருக்கிறது. 

அது போல திருப்பூர் பின்னலாடை தொழிலோடு ஐக்கியமாகிவிட்ட ஜோதிஜியின் அர்ப்பணிப்பை அவருடைய விவரிப்புகளிலிருந்து உணர முடிகிறது. அன்றாடம் வேலை தேடி வருபவர்கள், வேலையின் உள் நுழைந்து சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு காலூன்றி வெற்றி பெறுபவர்கள், சோம்பேறித்தனத்தால் பாதியில் விட்டு விட்டுத் தோற்பவர்கள், சம்பாதிப்பதில் பெரும்பகுதியை டாஸ்மாக் கில் இறைப்பவர்கள், நிறுவனத்தில் பணியில் இருந்து கொண்டே நிறுவனத்திற்குத் துரோகம் இழைப்பவர்கள் இப்படிப் பலரைப்பற்றி விவரித்துச் செல்கிறது தொடர். 

பஞ்சிலிருந்து நூலாகி, நூல் துணியாகி, துணி வெள்ளைக்கப்பட்டு, அதில் கலர்கள் சேர்க்கப்பட்டு, பல வடிவங்களில் வெட்டப்பட்டு, ஓரிடத்தில் தைக்கப்பட்டு, ஓரிடத்தில் தரம் பிரிக்கப்பட்டு, ஒரிடத்தில் பெட்டியில் அடுக்கப்பட்டு வணிக மையத்திற்குச் செல்லும் வரை பல உப தொழில்கள் அதைச் சார்ந்துள்ளது. அந்த விபரங்களைப் புரிந்து கொண்ட பல சாதாரணத் தொழிலாளிகள், சில வருடங்கள் தொழில் பழகிவிட்டு, தனக்குத் தெரிந்த மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை உப தொழிலாகத் துவங்கிக் கொண்டு, தான் முன்னர்ப் பணி புரிந்த நிறுவனத்திலிருந்தே ஆர்டர்கள் பெற்று வெற்றிப் படியை தொட்டவர்கள் ஏராளம். 

தொழில் சார்ந்த நிர்வாகவியலில் நண்பரின் தொடரை ஒரு பாடமாகவே வைக்கலாம். அத்தனை நெளிவு, சுளிவுகளை விவரித்துள்ளார். ஏற்றுமதி தொடர்பாகப் பையர் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்த்து, (சாம்பிள்) மாதிரி வாங்கி அனுப்பி, ஆர்டர் ஏற்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு பலரின் கடுமையான உழைப்பை செலுத்தி தயார் செய்து இறுதிநிலை வருவதற்குள் நெய்தலில், சாயமேற்றுவதில், ஆடை வடிவமைப்பில், பட்டன் அமைப்பதில், ஜிப் அமைப்பதில், அளவில் இப்படி ஏதேனும் ஒரு விஷ‌யத்தினால் சிறு தவறு நேர்ந்தாலும் ஒட்டு மொத்த ஆர்டரும் ரத்தாகி அடிமாட்டு விலையில் காதர்பேட்டையை வந்தடைந்துவிடும். 

அந்த ஆர்டருக்காக உழைத்த முதலாளி எழுந்து நிற்க பல வருடங்களாகிவிடும் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் தொடரின் ஆசிரியர். 

காரைக்குடி நகரில் படிப்பை முடித்துப் பிழைப்பிற்காகத் திருப்பூர் புலம் பெயர்ந்து, நுழைந்ததிலிருந்து இது தான் தனது பிழைப்பிற்கான ஊன்றுகோல் என்று பின்னலாடை தொழிலை நேசித்து, அதன் ஒவ்வொரு அணுவையும் சுவாசித்து, வெற்றியடைந்ததை, இடையில் 30 ஆண்டுகளாகச் சந்தித்த இடைஞ்சல்களை, காயங்களை, அதிலிருந்து மீண்டு எழுந்து நின்றதை மிகச் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நண்பர் ஜோதி கணேசன். 

ஒரு தொழிற்சங்க நிர்வாகியான எனக்கு ஒரே ஒரு நெருடல், குழந்தை தொழிலாளர்- உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் நலச்சட்டங்களைப் பல நிறுவனங்கள் பின்பற்றாமலிருப்பது, உரிமைகள் கோர ஒன்றிரண்டு பேர் ஒன்றிணைந்தால் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்வதைக் காட்டிலும் அவரை உடனே வெளியேற்றுவது என்கிற முதலாளித்துவம் ஆகியவையும் இந்த நகர் முழுவதும் நிறைந்திருப்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்று எண்ணினேன். 

மற்றபடி இந்தத் தொடருக்கு விமர்சனம் எழுதிய அனைவரும் பல விபரங்களைச் சுட்டிக் காண்பித்தாலும், இறுதியில் இது தொழிலாளியாக, முதலாளியாக, நிர்வாகியாக எவ்வாறாகிலும் இந்தப் பின்னலாடை தொழிலில் நுழைபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லியிருப்பதோடு நானும் உடன்படுகிறேன். 

நிச்சயமாக அவரின் தொழிலில் உள்ள stress, tension ஆகியவற்றிலிருந்து விடுபட நிச்சயம் அவரின் எழுத்து அவருக்கு உதவியாக உடனிருக்கும். ஜோதிஜி இன்னும் பல வெற்றிப்படிகளைக் கடக்க வாழ்த்துக்களுடன் 

தோழமையுடன் 
எஸ்.சம்பத். மதுரை.




தொடர்புடைய பதிவுகள்






Wednesday, February 04, 2015

கதை போல எழுத முடியுமா?

தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள்.  

2013ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக  திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 

இந்த நூல்கள் 50000 முறைக்கு மேல் பதிவிறக்கம்  செயப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது 

சமீபத்தில் வலைத்தமிழ் இணைய இதழுக்கு "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் "என்ற தொடரை இருபது வாரங்களாக எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற்சார்ந்தவற்றை எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தரமுடியாத நுணுக்கங்களை   சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்தளித்துள்ளார். 

இத்தொடரை வாசித்தவர்களிடம்  இருந்துவந்துள்ள விமர்சனங்களை வைத்தே இத் தொடரின் கருத்தாழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு படைப்பின் சிறப்பு. அந்த வகையில் இத் தொடர் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை 

ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கிறது.ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை, நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.

இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி  

அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  அவற்றை தொடர்வதை சில இடங்களில் சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார். 

இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாது  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில்  இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள் ,சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

ஆயத்த ஆடைத் தொழிலில் ,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா என ஆச்சர்யப் பட வைக்கிறது  ஜோதிஜியின் எழுத்துக்கள்  

அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது தவறாமல் கிடைக்கவேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தயங்காத  மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

 பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன? என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .
   
இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூல நான் அறிந்து  கொண்ட ஒன்று தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை என்ற உண்மையை ஓங்கி உரைக்கிறது இத் தொடர். திறமையான ஒருவர் வெளியே போனாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி.. விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன 

இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறைக்கு ஒரு குட்டு வைக்கிறார் ஜோதிஜி  இடை இடையே சமுதாய  நிலையை கூறவும் தவறவில்லை..

ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறார். திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்த்துகளில்  புலப்படுகிறது  

இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களை உளவியல் ரீதியாக விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கறேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை

திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள்  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன்.

ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை 

இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள்,வெற்றி தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்   ஜோடி. குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன்.

ஒரு பயனுள்ள தொடரை வெளியிட்ட வலைத் தமிழ் இணைய தளத்திற்கும் படைத்தளித்த ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 



தொடர்புடைய பதிவுகள்

Monday, February 02, 2015

உன்னாலும் முடியும் தம்பி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..

”திருப்பூர் டைரி குறிப்புகளாக..”   ஆகஸ்ட் 1ல் துவங்கிய ஜோதிஜியின் உள்மன பயணம் டிசம்பர் 12ல் வெகு அற்புதமாக நிறைவடைந்து விட்டது .

இங்கு தோற்றவர்கள் , தவறாக ஜெயித்து விட்டு அதை தக்க வைத்துகொள்ள தெரியாமல் ,பேராசையால் அகலகால் வைத்து காலத்தின் நீண்ட எல்லைக்குள் அடையாளம் தெரியாமல் கரைந்து போனவர்கள் கடின உழைப்புக்கு மதிப்பு பெறாமல் விரக்த்தியில் நஷ்டபடுத்துபவர்கள் போன்ற பலரையும் பற்றி தன் பார்வையில் எடை போடும் களமாக இந்த தொடரை செதுக்கி இருக்கிறார் ஜோதிஜி

முதல் போட்ட முதலாளிகள் மனோபாவத்தில் தொடங்கி ஒவ்வொறு  துறையின் பணி, அதன் பணிச்சுமை ,அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் மனோ நிலை அவர்களை அணுகும் முறை மேலும் திருப்பூர் பற்றி சிறிதும் அறியாதவகள் அல்லது திருப்பூரில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளை சுமந்து கொண்டு இருபவர்களாக்கான  ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்திர்க்கான ”கையேடு”  போல  வெகு அற்புதமான தனது எழுத்து நடை அளுமைதிறத்தால் சொல்லி இருக்கிறார். தொடருக்கு  சுவாரசியம் சேர்க்க ஓர் கதைக்கு, திரைகதை முக்கியம் என்பதை போல சில உண்மை பாத்திரங்களை எடுத்து அழகாக தொடரை நகர்த்தி இருக்கிறார் .

தனது கடந்த 22 வருட அனுபவ பாதையில் கற்றதும் பெற்றதுமாக இந்த துறையில் தனது கடின உழைப்பை உரமாக்கி இதுதான் திருப்பூர் என்ற இங்குள்ள தொழில் அமைப்பை கூர்ந்து கவனித்து அதோடு சளைக்காமல் ஓயாமல் ஓடி , அதன் ஆழத்தை தொட்டு அதில் கண்டெடுத்த தனது அனுபவ முத்துக்களை சரமாக்கி வருங்காலதை திருப்பூரில் வளமாக்கிக் கொள்ள  விரும்புபவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம் என்று தனது வாழ்வையே பணயமாக்கி சொல்லியிருக்கிறார் ’உன்னால் முடியும் தம்பி’ என்பது எம் எஸ் உதயமூர்த்தி வாக்கு.

ஆனால் ஜோதிஜியின் வாக்கியம் ”உன்னாலும் முடியும் தம்பி “ என்பதுதான் அது என்பதாக தந்து இருக்கிறார் .பொதுவாக ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல இடத்திலும் சொல்லு ஒரு வழக்கு உண்டு அது ”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”ஆனால் இவர் தான் கண்ட நியாய அநியாயங்களை முடிச்சுகளை த்னது நம்பிக்கை அறிவால் அவிழ்த்து ,அதன் பலனையும் விளைவையும் விவரித்து  சொல்லி இருகிறார் . 

இங்கு பல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு சில வெளிநாட்டிலிருந்து ஆர்டர்  கொடுக்கும் கம்பெனிகளில் வார மற்றும் மாதாந்திர தொழிலாளர் சட்ட உரிமைகளாவது இருக்கிறது ஆனால் அந்த கம்பெனியில் பணிபுரியும் அழுவலக (Staffs) பணியாளர்கள் நிலைமை முற்றிலும் அடிமையானது .மனித உரிமைகள் இங்கு காசுக்காக பிழியப் படுவது பற்றி அவர் ஏனோ மிக குறைவாகவே சொல்லி இருக்கிறார் என்பது ஆதங்கம் .

பதினைந்து வருடமாக இந்த ஊரின் அலை வேகத்தோடு பயணித்து கொண்டு இருக்கும் நான் இந்த பதிவுகளை பற்றி சொல்வது மிக பெரிய விசயமாக இருக்காது. 

ஆனால் திருப்பூருக்கு சம்பந்தமில்லாமல் இந்த பதிவுகள் மூல மட்டுமே 20 வாரங்கள் வலைத்தமிழ் மூலம் படித்து பயணித்தவர்கள் சொல்லும் கருத்தே இங்கு ஆசிரியர் இந்த பதிவுக்களுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் வெற்றியின் எல்லைக் கோடாக இருக்கும் .   

Saturday, January 31, 2015

வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு

எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தசூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருட கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன். 

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது.  இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா?  

2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா? 

3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா? 

4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்றஇறக்கங்களை பதிவு செய்யும் தொடர் என்பதா? 

5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா? 

6. தான் கடந்து வந்த 22வருட திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது

7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையை சொல்லும் தொடர் என்பதா? 

8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையை புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா? 

9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா? 

என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.

எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு. 

“வாழ்க்கை என்பதை புரிந்து வாழ்பவர்களுக்கு கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது. வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது தங்களுக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். உங்களுக்கு உண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறை இல்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்” என்று வாழ்வியலை பதிவு செய்திருக்கும் விதம் அருமை.

“தர்மம் நியாயம் அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே. பணம் என்ற காகிதத்திற்காக இதன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது” என்று மனித மனங்களை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

“ஓரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்”.

“அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும்.இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை.ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார்“ என்று நிர்வாகவியலை விளக்கியிருக்கும் விதம் அருமையிலும் அருமை..

“ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது. தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

“நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

“ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது.'ஒழுக்கம் உயிரை விட மேலானது' என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை.ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது. இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்”.

இவ்வளவுதான் திருப்பூர் என்று எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள் ஜோதிஜி.

தொழிலையும் விளக்கி அதிலிருக்கும் மனித மனங்களையும் விளக்கி திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதியுள்ள ஜோதிஜியின் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்பது வளர நினைக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் வைத்திருக்க வேண்டிய கையேடு ஆகும்.

தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

“ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன்.ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது”. 

“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”

அன்புச்சகோதரர் ஜோதிஜி இதுதான் உங்களது 22 ஆண்டு கால உழைப்பிற்கான சம்பளம்.

ஆம். நம்பிக்கை தானே வாழ்க்கை. 

உங்கள் நல்ல எண்ணங்கள் எந்த அளவுக்கு நீங்கள் சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கு உதவியாய் இருந்துருக்கும் என்பதனை உங்கள் சத்தியமான வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன். வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் கடத்திய உணர்வுகள் என்பது இன்னும் சில மாதங்கள் அதன் தாக்கம் எனக்குள் இருப்பதைப் போல உங்களால் பலன் அடைந்தவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்கள் தலைமுறைகளை வாழ வைக்கும் என்று உறுதியாய் நானும் நம்புகின்றேன்.

நன்றி ஜோதிஜி

மாரியப்பன் ரவீந்திரன். மதுரை.

அலைபேசி எண் 944 27 38 002


தொடர்புடைய பதிவுகள்


பேசா பொருளை பேசு

இது மனிதர்களின் கதை

குறிப்புகளின் குறிப்புகள்