Saturday, December 13, 2014

கடைசி அத்தியாயம்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..... 

அத்தியாயம் 20 

துணிவே துணை 

"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன். பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள், அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள், அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன். 

சில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன். அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன். இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது. 

பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன். என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல. இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும். ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே? ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை. நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை. ஏன்? 

இங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை. முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது. மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது. அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது



"பயத்தோடு வாழப் பழகிக் கொள்"  புதிய மின் நூலை தரவிறக்கம் செய்ய

Wednesday, December 10, 2014

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள், நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக “பயத்தோடு வாழ பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன். 

ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன். அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும். 

சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும்.


நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம். 

எத்தனை சமூகம் சார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம். இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம். 

"பயத்தோடு வாழப் பழகிக் கொள்" எனது ஐந்தாவது புதிய மின் நூலை இலவசமாக தரவிறக்கம் செய்ய சொடுக்க

Friday, December 05, 2014

பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்.

"சார் உங்க மாதிரி ஆட்களிடம் எங்கள மாதிரி ஆட்கள் வேலை செய்வதே பாவம் சார். இதற்கு மேலே நான் ஏதாவது பேசினால் ரொம்பச் சங்கடமாகப் போயிடும். எனக்குக் கணக்கு முடிச்சு குடுங்க. நான் போயிடுறேன்" 

ராஜாவுக்கும் எனக்கும் ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேர உரையாடல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. 

ராஜா என்பவன் பல விதங்களில் ராஜா தான். அகத்தியர் உயரத்தில் தான் இருப்பான். ஆனால் செயலாக்கத்தில் கம்பீரமானவன். மற்றவர்களை விட எதையும் தனித்தன்மையுடன் செய்யக் கூடியவன். அவனின் வயது இருபத்தி மூன்றே தவிர அகாயச் சூரன். காசு விசயத்தில் கெட்டி. அதே சமயத்தில் உழைப்பில் வீரன். தனக்குச் சேர வேண்டிய ஒரு ரூபாயைக்கூட அடுத்தவன் எடுக்க அனுமதிக்க மாட்டான். அதே சமயத்தில் அடுத்தவரின் ஒரு பைசாவை அபகரிக்க வேண்டும் என்று எண்ணத்தில் கூட நினைக்க மாட்டான். 

அவனிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டு நாம் நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம். ஆனால் அவன் எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் பெரிய பதவியில் இருந்தாலும் நேருக்கு நேராக நின்று கிழித்துத் தோரணம் கட்டி விட்டு தான் நகர்வான். நான் இருந்த நிறுவனத்தில் FINISHING DEPARTMENTல் ஒப்பந்தக்காரராக இருந்தான். 

இந்தத் துறையில் வந்த பிறகு தான் தைத்த ஆடைகள் தரம் வாரியக பிரிக்கப்பட்டு முழு வடிவம் பெறுகின்றது. வெளிநாட்டுக்காரர்கள் எதிர்பார்க்கும் ஆயத்த ஆடைகள் அழகு வடிவம் பெறுகின்றது. ராஜாவுக்குக் கீழே ஒரு படை பட்டாளம் உண்டு. இவனுக்குக் கீழே பணிபுரிபவர்கள் அதனைத் தேய்த்து, பாலிபேக்கிங் செய்து ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். 



+++++++++++++++++++++


வருகின்ற 09 டிசம்பர் அன்று எனது ஐந்தாவது மின் நூல் வெளியாகின்றது. முதல் வருடம் மிகச் சிறப்பாக மின் நூல் தளத்தை வழிநடத்திய இளையர் பட்டாளத்திற்கு இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன்.

மின நூல் தளத்திற்கு தங்களை அர்ப்பணித்துள்ள இளையர் குழுவினர் பற்றி அறிந்து கொள்ள (அடுத்த பதிவில்)


இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள் 

1. ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்

ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர்.  


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26,924

வெளியிட்ட தினம் 19.12.2013

2. வெள்ளை அடிமைகள்

இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர் 


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458

வெளியிட்ட தினம் 29.01.2014

3. தமிழர் தேசம்

தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி, நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர்.


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7,631

வெளியிட்ட தினம் 28.02.2014

4. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர்.  மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன். 

முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன்.


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928

வெளியிட்ட தினம் 27.03.2014