Friday, October 31, 2014

வண்ணங்களே வாழ்க்கை

என்ன வேண்டுமானாலும் பெறலாம். எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது. மொத்தத்தில் முதலீடு செய்யப் பணம் இருந்தால் போதும். உலகளாவிய வணிக ஒப்பந்தத்தம் உருவாக்கிய செயல்பாட்டின் காரணமாக எந்த உயர் ரகத் தொழில் நுட்பத்தையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருப்பூருக்குள் கொண்டு வந்து விடலாம். 

அந்நிய முதலீடு என்பது நம் நாட்டிற்குத் தேவையில்லை என்ற கருத்து முழுமையாகச் செல்லுபடியாகாத ஒரே ஊர் என்றால் அது திருப்பூர் மட்டுமே. காரணம் இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள பல வித நவீன ரக எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே. ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரைக்கும் பலதரப்பட்ட எந்திரங்கள் தான் இங்கே ஆட்சி செய்கின்றது. 

ஆனால் வருடந்தோறும் லட்சணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இங்கே எந்தக் கண்டுபிடிப்பும் உருவாக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளின் தொடக்கம் கூட இங்கே உருவாக்கப் படவில்லை. 

அது குறித்து இங்கே எந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவும் இல்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். நாம் 66 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் யாருக்கோ அடிமையாகத் தான் இருந்து அடக்கமாக வாழ்ந்து பழகியிருந்தோம். 


இன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை. 

சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றோம். ஆனால் நம்மை ஏதோவொரு சர்வதேச நிறுவனம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலே பணம் துரத்தும் பறவையாக மாறி நாமும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். 





Friday, October 24, 2014

வேலையைக்காதலி

நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும். நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்கு சோர்வு வருவதில்லை. 

அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது  நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும். அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும். அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது. 

உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது.  அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். வேலையில்லாதவர்களுக்கும், வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போல செயல்படும். பழிவாங்குதல், கடமைகளில் இருந்து தப்பித்தல், காரணம் சொல்லுதல், காரணங்களை தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கி தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும்.  


ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும். 

நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது.  இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது. அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது. ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன். அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். 



Saturday, October 18, 2014

கொள்ளையடிப்பது தனிக்கலை

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. அதற்கு மனதை தயார் படுத்தியிருக்க வேண்டும். சவால்களோ? சங்கடங்களோ எதிர் கொள்ளத் தெரிய வேண்டும்? நாம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று அங்கலாய்ப்பட்டுக் கொள்ளாமல் புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். 

இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள். 

வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மிகப் பெரிய பலவீனமே பற்றாக்குறை பட்ஜெட் தான். இதன் காரணமாகத்தான் இங்கே உரிமைக்கான எந்தப் பெரிய போராட்டமும் நிகழ்வதில்லை. நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள். ஒரு நாள் பொழுது என்பதைத் தங்கள் பொருளாதாரம் சார்ந்து சிந்திப்பதால் வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. 

இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது. சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும். அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களில் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை.




Friday, October 10, 2014

காற்றில் பறக்கும் கௌரவம்

காலம் செய்யும் கோலத்தை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. 

'என்னை மிஞ்சியவர்கள் இந்த உலகில் யாருமில்லை' என்று கருதிய மாமன்னர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கைத் தடங்களின் அடையாளங்களில் எதுவும் மிஞ்சவில்லை. சம்மந்தப்பட்டவர்களின் வாரிசுகள் இன்னமும் இருக்கின்றார்களா? எப்படி இறந்தார்கள்? என்பது கூட அறியாத அளவுக்குக் கொடுமையான காலம் அனைத்தையும் கரைத்து விட்டது. 

பதவியைப் போதையைப் போல ரசித்து ருசித்தவர்களின் அந்திம வாழ்க்கை சொல்லும் கதை அனைத்தும் அந்தோ பரிதாபம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. இனி மிச்சம் ஏதும் இருக்கக்கூடாது என்று உச்சமாய் அதிகாரத்தைச் சுவைத்து வாழ்ந்த அதிகாரவரக்கத்தினர் பலரின் வயோதிக வாழ்க்கை என்பது அனாதை விடுதியில் தான் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. 

சமூகத்தில் உள்ள பல தரப்பட்ட நிலைகளைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழில் நிறுவனங்களின் கதையும் பல அனுபவங்களை நமக்குப் பாடமாகச் சொல்கின்றது. 

பெயர்ப் பொருத்தம் பார்த்து வைத்த நிறுவனங்கள், ஜாதகத்தில் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாஸ்த்து பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் போன்ற சிறப்பம்சம் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை தலைமுறைகள் தொடர்கின்றது? 



Sunday, October 05, 2014

தமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா


தமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது.  வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிக்கூடம் எட்டாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடையடைப்பு, உண்ணாவிரதம், மௌன போராட்டம், பால்குடம் ஏந்தி பிரார்த்தனை என்று எல்லா பக்கங்களிலும் செலவு பிடிக்கும் சமாச்சாரமாக நடந்து கொண்டேயிருகின்றது.

யாரோ சிலர் இத்தனை செலவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார் என்றால் வந்த வருமானத்திற்கு அல்லது வரப் போகின்ற வருமானத்திற்காக தங்கள் விசுவாசத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம். கண்ணீர் விடும் எவரும் எனக்கு பதவி வேண்டாம் என்று ஒதுங்கவில்லை.

மொத்தத்தில் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக பார்க்கும் அண்டை மாநிலங்களில் கூட நடத்தப்படும் கூத்துக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது முடங்கிப் போன தமிழ்நாட்டு நிர்வாகம் என்பது இப்போது இல்லாமலேயே போய்விட்டது.  ஒரு வேளை கலைஞருக்கு இது போல ஒரு சம்பவம் நடந்து இருக்கும் பட்சத்தில் இந்நேரம் திமுகவில் அடிதடி, வெட்டுக்குத்து என்று தொடங்கி இந்நேரம் பல கொலைகள் கூட விழுந்துருக்கும்.  பதவியை கைப்பற்றும் போராட்டத்தில் பல தலைகள் உருண்டிருக்கும்.

ஆனால் அதிமுகவில் மயான அமைதியும் இன்னமும் பயத்துடன் தான் பம்முகின்றார்கள்.  இது தான் ஜெயலலிதாவின் வெற்றிக்குக் காரணம். இதுவே தான் இந்த தோல்வியைக் கொண்டு வந்து நிறுத்தியதற்கும் காரணமாகவும் உள்ளது.

••••••••••••

இந்தியாவில் இதைப் போல சில சமயம் நடந்து விடுகின்றது. யாரோ ஒரு தனி நபர் மூலம் பல கோடி மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் ஏதோவொன்று நடந்து விடுகின்றது. 

27 செப்டம்பர் 2014. பரப்பன அக்ரஹாரா 

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த பெயரும் இடமும் இந்தியாவில் உள்ள மக்கள் மனதில் பதிந்ததோ இல்லையோ இங்கே உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் பீதியைக் கிளப்பியிருக்கும். இனிமேல் மிக மிக கவனமாக திருட வேண்டும் என்று முயற்சிப்பார்கள்.

சொடுக்கி படிக்க 


•••••••••

ஜெயலலிதாவுக்கென்று ஒரு தனியான கொள்கையுண்டு.

"இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலையுண்டு".

அவர் ஆட்சிக்காலம் முழுக்க இந்த விலைப்பட்டியலில் சிக்காதவர்கள் யாருமே இல்லை என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு தனி நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

"உங்கள் பணத்ததால் என்னை விலைக்கு வாங்க முடியாது" என்று நிரூபித்தவர்.

••••••••••

ஜெயலலிதாவின் வாழ்க்கை எங்கு தொடங்கியதோ அதே மாநிலத்தில் (அரசியல்) முடிவடைந்து விட்டது. அடுத்த பத்து வருடங்கள் என்பது அரசியலில் அனாதை ஆனதற்குச் சமம்.  இதற்குப் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை விட இவர் உருவாக்கிக் கொண்டதே அதிகம். அடிமைக் கூட்டத்தை வளர்த்து வந்தவர் தனக்கு ஆலோசனை சொல்லும் கூட்டத்தை வளர்க்காமல் இருந்தது யாருடைய குற்றம்?

ஆனால் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் இவருக்கு உண்டான அவப்பெயர் மட்டும் என்றுமே மாறாது. மறையாது. இவரின் உழைப்பு, திறமைக்கு அப்பாற்பட்டு கிடைத்த அனைத்து விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன் தனிப்பட்ட குணாதிசியத்தால் இன்று கொட்டிக் கவிழ்த்து விட்டார். 

"அதிகாரம் என்பது உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தும். ஆனால் எச்சமாய் மாற்றி விடும்" என்பதை இப்போது கிடைத்த தனிமையில் உணர்வாரா?

•••••••••••

ஒவ்வொரு முறையும் நான் ஒரு தொடர் எழுதத் தொடங்கும் போதும், அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது அரசியலில் ஏற்படும் திடீர் மாற்றங்களைப் பற்றி எழுத முடியாமல் போய்விடும்.   

கடந்த பத்து வாரங்களாக செய்தித்தாள்கள், வார இதழ்கள் எதையும் வாசிக்க முடியாத நெருக்கடியான பணிச்சூழல் இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பணியான ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளுக்காக குறிப்பிட்ட நாளை ஒதுக்கி என்னை நானே  ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது.  

கடந்த நாலைந்து நாட்களாக ஜெயலலிதா குறித்த விசயங்களை பதிவு செய்ய முடியாமல் போய் விட்டதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

இந்த சமயத்தில் இதை பதிவாக மாற்றி வைக்கவிட்டால் இது குறித்து தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இதன் முழுமையான விபரங்கள் தெரியாமல் போய் விடக்கூடும் என்பதற்காக இந்தப் பதிவு.

தற்போதைய சூழ்நிலையில் ஜெ. வுக்கு யார் கடிதம் எழுதினாலும் அவர் இருக்கும் பரப்பன அக்கிரஹாரத்திற்குள் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று விடும். 

படிக்க சொடுக்க

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்.

*************

அவர் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருந்த அதிகப்படியான வசதிகள், எடுபிடி, ஏவலாளி, அதிகாரம், பந்தா, ஆணவம், அகங்காரம், பிடிவாதம்,   தான் தோன்றித்தனமான செயல்பாடுகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறையின்மை, சக மனிதர்களை உயிரற்ற ஜடமாய் பார்க்கும் மனோபாவம், போன்ற அனைத்துக்கும் மொத்தமாய் சேர்த்து ஒரு நபர் 1136 பக்க தீர்ப்பின் வாயிலாக படிப்பினையைத் தந்துள்ளார்.  


**********

ஜெயலலிதா கடந்த கால வாழ்க்கையில் பெற்ற "மனோரீதியான தாக்கதில்" இருந்து வெளி வராமல் வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருந்தவர், இது ஆணாதிக்க சமூகம். இதிலும் வென்று போராடி மேலே வந்தவர். கலைஞர் போன்ற ஆட்களை தமிழ்நாட்டில் சமாளித்து மேலே வருவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால் அனைத்தையும் வென்று வந்தவர் மனிதர்களை மதிக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதும் அவரின் தனிப்பட்ட கொள்கையாகவே இருந்தது.

சக மனிதர்களை விட வேள்வி, யாகம், தெய்வம், சாஸ்திரங்கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவருக்கு அவர் வணங்கிய தெய்வங்களே  இன்று சிறப்பான முடிவைத் தந்துள்ளது.

இப்போது நீதி உருவாக்கிய வேலி தான் "காலம்" அவருக்குத் தந்த பரிசாக மாறியுள்ளது. 

•••••••••••••••••••

இது குறித்து நான் படித்த, கேட்ட, அறிந்து கொண்ட தகவல்களை நாலைந்து பதிவுகளாக எழுத முடியும். நீங்கள் படிக்கும் செய்திகள் 90 சதவிகிதம் அவரவருக்கு தோன்றிய வகையில் கதை, கற்பனையுடன் கலந்து கட்டி ஆடுகின்றார்கள். சிறைவிதிகளை உடைக்கவும் முடிகின்றது. ஒப்பந்தப்படி உல்லாசமாக இருக்கவும் முடிகின்றது.

ஆனால் தமிழர்கள் காலந்தோறும் யாரோ ஒருவரிடம் அடிமையாக இருப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டாலும் இன்று வரையிலும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் என்னை விட வேறு திறமையான அடிமையை வேறெங்கும் நீங்கள் கண்டுவிட முடியாது என்பதற்கு உதாரணமாக அதிமுக தொண்டர் படையினர் என்ற பெயரில் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தங்களுக்குத் தெரிந்த வகையில் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் தங்கள் கலைத்திறைமையை தமிழ்நாடு தவிர கர்நாடகா வரைக்கும் ப்ளக்ஸ் பேனர் மூலம் வெளிக் காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.  

இது குறித்து கடந்த ஒரு வாரமாக தமிழ் இணையத்தில் நான் கண்ட ரசித்த படங்களில் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன். 

படிக்க சொடுக்க


இந்த பதிவில் உள்ள மொத்த இணைப்புகளையும் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள். அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சில புரிதல்கள் உங்களுக்கு உருவாகக்கூடும்.  

ஆனால் கடைசியாக சில வார்த்தைகள்,

இணையப் பெருவெளியில் கலைஞர் என்றாலே கபடி விளையாடுவது போல விளையாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  அந்த புகழை தற்பொழுது ஜெயலலிதா எடுத்துக் கொண்டார்.  முதல் முறையாக ஜெ. சம்மந்தப்பட்ட அனைத்து கண்ணீர் காட்சியையும் படிப்பவர்கள் பரிகாசம் செய்வது ஜெ. அரசியல் வாழ்க்கையில் இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். 

ஈழத்தமிழர்கள் பிரச்சனையாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரி எல்லாமே தனக்கு உதவும் விளம்பர சுவரொட்டி போல பாவித்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு கடைசியில் பலதரப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் தான் இன்று பரிசாக கிடைத்துள்ளது. வெளிச்சத்தில் வாழ்ந்து, வெளிச்சத்தையே மட்டும் விரும்பியவருக்கு இன்று வெளியுலகம் தொடர்பு இல்லாத இடமே பரிசாக கிடைத்துள்ளது.

ஆனால் நான் திருப்பூருக்குள் சந்தித்து உரையாடிய சலூன் கடை முதல் பல தரப்பட்ட தொழிலாளர்கள், அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் வரைக்கும் ஜெயலலிதா மேல் கொண்டுள்ள அபிமானம் இன்று வரைக்கும் மாறவில்லை என்பது முதல் ஆச்சரியம்.  ஒரு அரசியல் தலைவரின் தோல்வியின் போது அடுத்த நபர் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும்.  இது தான் பொதுவான விதி.  ஆனால் மொத்த தமிழ்நாட்டு அரசியலிலும் வெற்றிடம் தான் நிலவுகின்றது.  இது தமிழ்நாட்டு அரசியலில் இதுவரையிலும் நிகழாத ஆச்சரியமான நிகழ்வாகும்.

ஜெ. வின் சிறைத்தண்டனை குறித்து நான் சந்தித்து உரையாடிய ஒவ்வொருவரும்  அவரவர் பாணியில் வெவ்வேறு விதமாகச் சொன்னாலும் மொத்தமாக "அவர் செய்த தவறுக்கு மக்கள் ஏற்கனவே தண்டனை கொடுத்து விட்டார்கள்" என்று தான் முடிக்கின்றார்கள்.  தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலும் தங்களது அடிப்படை அரசியல் அறிவில் எந்தப் பெரிதான மாற்றங்களையும் உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதே கண்கூடு.  

தங்களது அடிப்படை வாழ்வாதாரம் சரியாக இருந்தால் போதும் என்கிற நிலையில் தான் இருக்கின்றார்கள்.  மேல் மட்ட ஊழல், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எதிர்காலம் குறித்த அக்கறை போன்ற எதிலும் அவர்களால் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு இருக்கின்றார்கள்.  இன்னும் கொஞ்சம் அதிகமாக இது குறித்து கேட்டால் "இங்கு யார் தான் யோக்கியவான்?" என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து நம்மை நிறுத்துகின்றார்கள்

இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைகளாலும் மனதார இந்தத் தீர்ப்பை வரவேற்க முடியாத சூழ்நிலை தான் இங்கே நிலவுகின்றது. 

ஒவ்வொருவர் முதுகிலும் ஓரு வண்டி அழுக்கு இருப்பதால் அடுத்தவர் அழுக்கு குறித்து பேச முடியாத நிலையில் இருக்கின்றார்கள். 

கலைஞரால் கூட தன் சொந்த வார்த்தைகளில் இந்த தீர்ப்பு குறித்து சொல்ல முடியாத அளவுக்குத் தான் அவரின் நம்பகத்தன்மை உள்ளது. 

இந்த அளவுக்குத்தான்  தமிழ்நாட்டில் அரசியல் உள்ளது.  

சரி விடுங்க. 

இதுவும் கடந்து போகும்.  

கீழே உள்ள பாசக்கார பயபுள்ளைங்க கலைத்திறமையை ரசித்து விடுங்க. 


















தொடர்புடைய பதிவுகள்

காசு, பணம், மணி, துட்டு.

பிரபல்யம் எனப்படுவது யாதெனில்

பிரபல்யங்களின் சாவு

சாராயத்தமிழன்

சொம்புத்தூக்கிகள்


அரசியல் விரும்பாதவர்களுக்கு (மட்டும்)

திருப்பூரில் உள்ள பின்னலாடைத் தொழில் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சார்ந்த சமூக வாழ்க்கையை அனுபவங்களின் வாயிலாக அலசும் தொடர் இது.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

Saturday, October 04, 2014

நேர்மையே உன் விலை என்ன?

மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நள்ளிரவு வரைக்கும் அலைபேசியில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டேயிருந்தது. புதிய எண்கள். புதிய குரல்கள். ஆனால் சொல்லி வைத்தாற் போல் வசைமாறி பொழிந்து தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். 

நீங்கள் மிரட்டப்பட்டவரா? அல்லது மிரட்டியவரா? இரண்டு இடத்திலும் கொஞ்சம் தான் வித்தியாயம் இருக்கும். 


ஒவ்வொரு இடத்திலும் மிரட்டுபவரை கவனித்துப் பாருங்கள். மனதளவில் கோழையாக, தன் உழைப்பை நம்பாமல், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு போட்டி போட முடியாமல், விரும்பாமல், போட்டிக்கான தன் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அத்தனை பேர்களும் மிரட்டும் நபர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் திறமைசாலிகள் அத்தனை பேர்களும் எதிரிகளாகத் தான் தெரிவார்கள். 

இது தான் சமூக நியதியாக உள்ளது. 

வாழ்க்கையென்பது "இப்படித்தான் வாழ வேண்டும்" என்று கட்டுப்பெட்டி தனத்திற்குள் உங்களைப் பொறுத்தியிருந்தால் இது போன்ற சமயங்களில் உங்கள் நிலைமை  திண்டாட்டமாகத்தான் இருக்கும். அல்லது "என் வாழ்க்கை இப்படித்தான். ஆனால் 'எதையும் தாங்கும் இதயம்' எனக்குண்டு" என்பவராயின் இன்னும் கொஞ்சம் மேலே வந்து படபடப்பு குறைந்து பக்குவமாக அணுக முடியும். 

இதற்கு அடுத்த நிலை ஒன்றுண்டு. எப்பேற்பட்ட மோசமான குணாதிசியங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தச் சூழ்நிலையிலும் கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருத்தல். நான் பலபடிகளைக் கடந்து இந்த நிலைக்குத் தான் இந்தச் சமயத்தில் வந்து சேர்ந்து இருந்தேன்.