Wednesday, September 30, 2009

பயணங்கள் முடிவதில்லை


புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 36
இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வான பஞ்சாப் மாநில பிரித்தல் என்ற நிகழ்வுக்குப் பின்னால் அத்தனை கோரமான மனிதர்களைப் போல அன்றைய இயற்கையும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.
உண்மை.
அன்றைய பஞ்சாப் மாநிலம் அத்தனை அற்புதம்.
"இந்தியாவின் தானியக் களஞ்சியம் ".
ஆரம்ப கால கட்டத்தில் உள்ளே இருந்த நீர்வளம், நிலவளம் ஓரளவிற்குத்தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் உருவாக்கிய நீர்த்தேக்கங்கள், அணைகள், விரிவான முறையில் அமைக்கப்பட்டு இருந்த பாசன கால்வாய் முறைகள், ஆகியவற்றின் மூலம் தரிசாகக் கிடந்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பசுமை பூமியாக மாறியது.
இயற்கையிலேயே நல்ல உழைப்பாளிகளான சீக்கிய மக்கள் மேன்மேலும் தங்களுடைய உழைப்பால் உன்னத நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த பல நிபுணர்கள் உருவாக்கி வைத்திருந்த நீர் ஆதார சூத்திரங்கள் பிரிவினையின் போது பலருடைய வாழ்க்கையை சூறாவாளியாக்கப்போகின்றது என்பதை காலம் மட்டுமே உணர்ந்துருக்கும் போல?
பாசனத்திற்கு தேவையான திறக்க வேண்டிய சமாச்சாரங்கள் கோடு கிழித்த ராட்கிளிப் என்ற ஆங்கிலேயர் புரிந்து கொள்ளாதது.
ஆமாம் கோட்டுக்கு இந்தப்பக்கம் பாசன கால்வாய். திறக்க வேண்டிய கருவிகள் பதினைந்து கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம். கற்பனையில் கொண்டு வாருங்கள். மனிதன் மனம் எப்படி மாறியது என்று புரிந்து இருக்கும்.
கோட்டுக்கு இருபக்கமும் வாழ்ந்த அத்தனை மக்களுமே பாதிக்கப்பட்டார்க்ள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். கோடு கிழித்தவர் மேல் எந்த தவறும் இல்லை. அவருக்கு மவுண்ட் பேட்டன் பிரபு கொடுத்த அவசரம் ஒரு பக்கம். சுதந்திரத்தை சற்று தள்ளிப்போட்டால் ஆற அமர உட்கார்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை பேசி யோசித்து உருவாக்கினால் போதும் என்று மன்றாடிப்பார்த்தார். மவுண்ட் பேட்டன் பிரபு மட்டுமல்ல, நேரு, ஜின்னா கூட செவிசாய்க்கவில்லை. பிரித்தே ஆக வேண்டும். மவுண்ட் பேட்டன் பிரபு சொல்லி இருக்கும் ஆக்ஸ்ட் 15 என்பது இறுதியான உறுதியான நாள்.
மூவரும் ஒதுங்கி விட்டார்கள்.
ஓலம் மிஞ்சியது தான் மிச்சம்.
அதனால் தான் " கொள்கை அளவில் சரி. ஆனால் நடைமுறையில் பெரிய விபத்து " என்று வர்ணிக்கப்பட்டது.
வங்காளம் இந்த அடிப்படையில் பிரித்த போது 85 சதவிகிதம் சணல் விளைவிக்கும் பகுதி ஒரு பக்கம் ஒதுங்கியது. கொடுமை என்னவென்றால் மறுபக்கத்தில் சணலை பதப்படுத்தி தயாரிக்கும் மில் ஒன்று கூட இல்லை.
பஞ்சாப் பிரிவினைக்கோடு, காஷ்மீர் அருகே வடக்கு திசையில் இருந்து பஞ்சாபிற்குள் பிரவேசிக்கும் ஒரு கிளை நதியை ஒட்டி ஆரம்பித்து, தென்கிழக்காக நெடுகச் சென்று மாநிலத்தை இரண்டாகப் பிளந்தது. லாகூர் நகரம் பாகிஸ்தானுக்கும், அமிர்தசரஸ் அதன் பொற் கோயிலுடன் இந்தியாவிற்கும் வந்தது. பிரிவினைக் கோட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்றாலும் பாதிக்கப்பட்டது பெரும்பான்மையினர் சீக்கியர்கள். இயல்பாகவே போர்க்குணம் படைத்த சீக்கியர்கள் இந்தப் பிளவு காரணமாக ஏற்பட்ட கலவரங்களில் முக்கிய பங்கு வகித்தார்கள்.
மெஜாரிட்டி மக்கள் ஒரு புறம் என்கிற கொள்கைக்கு மாறாக, குருதாஸ்பூர் என்கிற சிறு நகரம். ரவி நதியின் இயற்கை அமைப்பு காரணமாக இந்தியாவுக்கு ஓதுக்கப்பட்டது. அப்படி அது பிரிக்கப்படவில்லையானால் இந்தப் பகுதி மட்டும் இந்திய நிலத்தில் தலை நீட்டிக் கொண்டுருக்கும் தனிப் பகுதியிாகத் தெரியும். அதனைத் தவிர்ப்பதற்காக முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிரதேசமாக இருந்தும் அது இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் நில அமைப்பை முன்னிட்டு இப்படிச் செய்ததன் மூலம் ஆங்கிலேயர் சிரில் ராட்கிளிப் தன்னையும் அறியாமல் இந்தியாவுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துவிட்டார். இன்று வரையில் அத்தனை பாகிஸ்தான் மக்களும் குறை கூறும் பிரச்சனை இதுதான்.
காஷ்மீருக்குச் செல்லும் ஒரே தலைமார்க்கம் குருதாஸ்பூர் மூலம் செல்வதுதான். குருதாஸ்பூர் பாகிஸ்தானுக்குச் கிடைத்து இருந்தால், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிருக்கும்.
பிரிவினைக் கோட்டின் படி இந்தியப் பகுதியில் (இந்துக்கள், சீக்கீயர்கள்) தலா 50 லட்சம் மக்களையும், பாகிஸ்தான் பகுதியில் (முஸ்லீம்கள்) 50 லட்சம் பேர்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த பண்டப்பறிமாற்றம் அத்தனை மக்களையும் பண்டார பரதேசியாக்கியது என்றால் அத்தனையும் உண்மை.
பாகிஸ்தான் பகுதியில் உள்ள மொத்த தொழிற்கூடங்கள், விளைநிலங்கள் அத்தனையும் பெரும்பாலும் சீக்கியர்களுக்கு சொந்தமாகவே இருந்தது. பிரிவினை அமலுக்கு வந்த போது கொள்கையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி அத்தனையும் இழந்தார்கள்.
மதம் என்பது இரண்டாம் பட்சம் தான். விரட்டிவிட்டால் மொத்தமும் நமக்குச் சொந்தம். இது தான் முக்கியக் காரணம்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைத்தல், அழித்தல் இன்னும் பல..........
பிரிவினையின் உச்சக்கட்டத்தில் கூர்க்கா ரெஜிமெண்ட் தலைமைப் பொறுப்பில் இருந்த காப்டன் அட்கின்ஸ் தான் தங்கியிருந்த கிராமத்து குடியிருப்புக்கு அருகே இருந்த ஓடிக்கொண்டு இருந்த கழிவு நீர் நிறம் மாறி வெகு நேரமாக ஓடிக்கொண்டுருந்தது.
பலவாறு யோசித்திக்கொண்டு பல மைல்கள் நடந்து போய் பார்த்தபோது சுருதி சுத்தமாய் ஒருத்தர் பின் ஒருவராக வெட்டிக்கொன்று கொண்டுருந்தார்கள்.
இந்த இடத்தில் சில ஆச்சரியமாக உண்மையைப் பார்க்க வேண்டும். சீக்கிய மதத்தின் படி முஸ்லீம் பெண் "உறவு " என்பது நினைத்தே பார்க்க முடியாது. ஆனால் நடந்தது உச்சக்கட்ட கொடுமை. மார்பை அறுத்து, கொத்துக் கறியாக்கி, மந்தையாக ஓட்டிச் சென்று கொளுத்தி கொண்டாடினார்கள். உன்மத்தம் வெறி அடங்கவே இல்லை.
அதோ மற்றொரு பக்கம் முஸ்லீம் மக்கள். போட்டி போட்டுக்கொண்டு. பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் சுதந்திரமோ, மவுண்ட் பேட்டன் பிரபு, கோடு கிழித்த புண்ணியவானோ எவரையும் தெரியாது. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் தலை தரையில் விழுந்தது.
லாகூருக்கு அருகே ஷேக்புரா என்று வியாபார தலத்தில் (அதிகமாக மக்கள் கூடும் இடம்) அத்தனை சீக்கிய இந்து மக்களையும் ஒரே கிடங்கு போன்ற ஒரு அறையில் அடைத்து சுட்டுக்கொன்றவர்கள் இராணுவத்தில் இருந்து ஓடிவந்தவர்கள், பாகிஸ்தான் போலீஸ் பணியில் இருந்தவர்களும். ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
இடப்பெயர்ச்சியின் போது முடிந்தவரையில் கிடைத்த உடைமைகளுடன் கிடைத்த வாகனத்தில் ரயிலில் பயணித்தனர். இரண்டு பக்கமும் காத்து இருந்தவர்கள் கண்களுக்கு சிக்கியர்வர்களை சின்னாபின்னாமாக்கினார்கள்.
ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருபது முப்பது சீக்கியர்கள் சுத்தமாய் தவம் செய்வது போல தன்னுடைய கிர்பான் என்ற வாள் போன்ற ஆயுதத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்கள். பார்த்துக்கொண்டு அவர்களை கடந்து செல்பவர்கள் " உலக அமைதிக்காக" என்று யோசித்துக்கொண்டு கடப்பார்கள். ஆனால் காத்துக்கொண்டுருப்பது அடுத்து வரும் ரயிலுக்காக. ரயில் உள்ளே வருவதற்குள் எந்தப் பெட்டிக்குள் என்ற செய்தியும் வந்து விடும். காவல் காத்துக்கொண்டு வரும் காவலர்கள் இறங்கி வௌியே இறங்கி வந்து தூரமாய் நின்று விடுவார்கள். இரண்டு பக்கமும் கதவு மூடிவிட்டு வேலை முடித்து வௌியே வருவார்கள்.
தண்டவாளம் முழுக்க குருதி ஆறாக ஓடிக்கொண்டுருக்கும்.
இந்த நிலையிலும் பின்னாளில் டில்லியில் நடந்த கலவரத்தின் போதும் மவுண்ட்பேட்டன் பிரபு சொன்ன வாசகம் இங்கு குறிப்பிடத்தக்கது.
"கடமையில் இருக்கும் போது மத துவேஷத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கடமையை சரிவர செய்யாமல் இருக்கும் எந்த அதிகாரிகளையும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுங்கள் ".
அத்தனையும் இழந்தேன். உன் ஆசை அடங்கவில்லை. உருக்குலைத்த உயிரின் ஓலம் கண்டும் உன் வெறி அடங்கவில்லை. மதம் என்ற பெயரில் வனமம் சுடுகாட்டாக்கி விட்டதே உன் உள் வாங்கல் இல்லாத மனம் இனி எதைத் தரும்?

Tuesday, September 29, 2009

யாரு கோடு கிழிச்சா? இப்படி கூறு பிரிச்சா?




புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 35
இந்தியாவிற்குள் நடந்த போராட்டங்களும், தலைவர்களின் முன்னேற்பாடுகளும், இடைவிடாமல் நடந்த அஹிம்சையான, ஹிம்சையான கலவரங்களும் கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களை இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தார்கள். ஜின்னாவின் நேரிடைய நடவடிக்கைகள் உருவாக்கிய கலவர வித்துக்கள் செடியாகி மரமாகி பூத்து கனியாக மாற மாற கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை மனித இனமும் கதறத் தொடங்கி விட்டது.
சுதந்திரம் கொடுக்க முன்னேற்பாடுகள். அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி வந்த ஜின்னா வெற்றிக் கோட்டின் அருகே வந்துவிட்டார். பாகிஸ்தான் என்ற பரிசுத்தமானவர்கள் வாழும் பூமிக்கான இடம் குறித்து, எல்லை குறித்து, வாழ்வாதாரங்கள் குறித்து உரையாடல் தொடங்கியது.
இந்த நேரத்தில் இதை இந்த இடத்தில் சொல்ல வரக்காரணம் என்ன?
இங்கு நடந்த உரையாடல் தான் பஞ்சாப் மாநிலம் பற்றி எறியக் காரணம். நடந்த இடப்பெயர்ச்சி, அவல மக்கள், கண்ணீர், கதறல், இழந்த சொத்துக்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு கண்களுக்கு தெரிந்த வரையில் அகதிகளின் நீண்ட்ட்ட்டட வரிசை. இந்த உரையாடல் நடந்த விபரம் தெரிந்தால் தானே மொத்தத்தையும் உள்வாங்க முடியும்?
கலவரம் ஏன் உருவாகியது? பின்னால் உள்ள காரணம் தான் என்ன? பஞ்சாப்பை பிரிக்க வேண்டிய அவஸ்யம் என்ன? ஒரு வேளை பிரிக்காமல் இருந்தது இருந்தால் இந்த அவலங்கள் நடந்து இருக்காதே?
முதலில் ஜின்னா உரையாடலைத் தொடங்கினார்.
"இந்தியா எப்போதுமே ஒரே நாடாக இருந்தது இல்லை. தேசப்படத்தில் அது அப்படித் தோன்றுகிறது. அவர்களது கடவுளான பசு எனக்கு உணவு. நாங்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும் " என்றார் ஜின்னா.
இவ்வளவு காலமும் எப்படிச் சேர்ந்து வாழ்ந்தீர்களோ அப்படி? " என்றார் மவுண்ட்பேட்டன் பிரபு.
பிரிக்காமல் வாழ்ந்தால் எதிர்கால வல்லரசுக்கான தகுதி, போன்ற பல விதங்களையும் ஜின்னாவிடம் பல நாட்கள் எடுத்துக்கூறினாலும் ஜின்னா காதில் போட்டுக்கொள்ள தயாராய் இல்லை. காரணம் அவரைப் பொறுத்தவரையில் நேரு என்பவர் கர்வம் பிடித்த காஷ்மீர் பிராமணர். தன்னுடைய இந்துந்துவ கொள்கையை தன்னுடைய மேல் நாட்டு கல்விக்கடியில் மறைத்து வைத்து இருப்பவர். காந்தியோ இந்துத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டும் தந்திர நரி.
இவர்களுடன் நாம் எப்படி சேர்ந்து வாழ முடியும்?
சோர்ந்து போய்விட்டார் மவுண்ட் பேட்டன் பிரபு. உறுதியாக இறுதியாக தன்னுடைய கொள்கையை எடுத்துரைத்தார் ஜின்னா. "இந்தியப் பிரிவினை என்பது இயற்கையான விஷயம். அந்தப் பிரிவினையின் மூலம் ஏற்படும் பாகிஸ்தான் பொருளாதார விஷயங்களில் நிறைவு பெற்றதாக இருத்தல் வேண்டும். அப்படியானால் பஞ்சாப் மற்றும் வங்காளம் இரண்டும் பாகிஸ்தானில் இணைய வேண்டும் " என்றார்.
"அது எப்படி? மைனாரிட்டியாக உள்ள முஸ்லீம்கள், மெஜாரிட்டியாக உள்ள இந்துக்களால் ஆளப்படக்கூடாது என்பது தானே உங்கள் பாகிஸ்தானின் அடிப்படை வாதம்? அப்படியானால் வங்களாத்திலும் பஞ்சாப்பிலும் மைனாரிட்டியாக உள்ள இந்துக்களை பாகிஸ்தானுக்குள் திணிக்க வேண்டுமென்பது என்ன நியாயம்? உங்களது இஸ்லாமிய நாட்டுக்காக நீங்கள் கூறும் வாதப்படி பார்த்தால் வங்காளத்தையும் பஞ்சாபையும் வெட்டித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கிருக்கிறதே " என்று கேட்டார் மவுண்ட் பேட்டன்.
"அப்படி இந்த இரு மாகாணங்களும் பிளக்கப்பட்டால் பொருளாதார ரீதியில் இசைவில்லாத ஓரங்களில் கண்ட விதத்தில் செல்லரிக்கப்பட்ட பாகிஸ்தான் தான் எனக்குக் கிடைக்கும் " என்றார் ஜின்னா.
செல்லரித்தது போன்ற பாகிஸ்தானைக்கூட அவருக்குக் கொடுக்க விரும்பாத மவுண்ட் பேட்டன் " அப்படியானால், அப்படிப் பொருளாதார ரீதியில் பலவீனமான ஒரு பாகிஸ்தான் எதற்கு? எனக்கோ வங்காளத்தையும், பஞ்சாப்பையும் பிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சிறு சிறு எண்ணிக்கையில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் உங்கள் பாகிஸ்தானுக்குள் வரப்போவதில்லை. நீங்கள் பாகிஸ்தான் என்பதாக ஒரு இஸ்லாமிய நாடு அமைந்த பிறகும் அதே அளவு எண்ணிக்கையில் அல்லது சற்றுக் கூடுதலாக இங்கே முஸ்லிம் மக்கள் இருப்பார்களே? அப்படியானால் உங்கள் பாகிஸ்தானுக்கு என்ன பொருள்? "
" இப்போதே பிரிவினையை எதிர்பார்த்து பஞ்சாப் பகுதியில் ஏராளமான கொலைகளும், கொள்கை என்ற பெயரில் பல கொடூரங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. பிரிவினை என்று ஒரு கோடு கிழிக்கப்பட்டால் அது ஏராளமான மனித உயிர்கள் பலியாவதற்கும், செல்வங்கள் நாசப்படுத்தப் படுவதற்கும் காரணமாக அமைந்து விடும் " என்றார் மவுண்ட் பேட்டன் பிரபு.
"யுவர் எக்ஸ்லென்ஸி, நீங்கள் தவறாகக் கணக்கிடுகீறீர்கள். பிரிவினை என்பது ஒரு முறைதான். நாங்கள் விரும்பும் தனிநாடு என்று ஒன்று கிடைத்து விட்டால் அப்புறம் எதற்கு இரு சமூகத்தினரும் அடித்துக்கொள்ள போகிறார்கள்."
இதற்கு ஆதாரமாக ஜின்னா அவர்கள் அப்போது நடந்த ஒரு இரு சகோதரர்களின் வழக்கை எடுத்துரைத்தார். சண்டையிட்டுக் கொண்டுருந்த இரு சகோதரர்கள் பாகம் பிரித்த பிறகு இரு சந்தோஷமாய் வாழ்வதாக எடுத்துக் கூறினார்.
இந்தப் புள்ளியில் தொடங்கிய விவாதம் கடைசியில் கோடு போட்டு நடந்த அத்தனை அவலங்களையும் பார்த்த மக்களை அனாதையாக்கியது. உலகம் பார்த்திராத அத்தனை அக்கிரமங்களும் நடந்தது.
கதை ஜின்னா. திரைக்கதை மவுண்ட் பேட்டன் பிரபு. வசனம் பேசியது மக்கள். ஆனால் மொத்தத்திற்கும் இயக்குநர் பொறுப்பை ஏற்றவர் கோடு கிழித்த சிரில் ராட்கிளிப் என்பவர்.
அவர் போட்ட கணக்கில் ஜனத்தொகையை கணக்கில் கொண்டு முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி (50,00,000) பாகிஸ்தானுக்கும், இந்துக்கள் (50,00,000) பெருவாரியாக வாழும் பகுதி இந்தியாவுக்கும் என்கிற அடிப்படையிலும், இயற்கை அமைப்புகளையும் வைத்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்தார்.
ஆனால் அவர் எந்த சிந்தனையில் அடிப்படையின் கீழ் கோடு கிழித்தாரோ அதிலும் பல சிக்கல்களை இயற்கை உருவாக்கி வைத்து இருந்தது.
இயற்கையும் ஒரு வகையில் கொடூரத்திற்கு காரணமாய் அமைந்து விட்டது.
அன்று கிழித்த கோட்டை தாண்டியதால் இராமயாணம்? இப்போது கிழித்த கோட்டால் பரிசுத்த பூமியில் பரிதவித்த மக்கள்?

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625


Monday, September 28, 2009

புழுதியை கிளப்பிய பொக்கிஷம்



ருசித்த வாளுக்கும் ரசித்த கண்களுக்கும் விசும்பிய குரல்கள் கேட்கவில்லை. வெறியை சமைத்த கரங்கள் புசிக்க மறந்து ருசிக்கு அலைந்தாயே? அடங்காத பசி உனக்கு அனாதை வாழ்க்கை?
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 34

கண்ணீர், கதறல், கலவரம்.

பாகிஸ்தானின் தந்தை ஜின்னா சாகிப்பின் வெற்றி ஊர்வல வாகனத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு உடன் பயணித்து இருக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஆமாம்.

மொத்த சீக்கிய, சுயம் சேவக் தீவிரவாத எண்ணம் கொண்ட குழுக்கள் என்ன ஆனார்கள்.? மொத்த நவீன வசதிகளும், ஆள் பலமும், ஆளுமை பலத்துடன் வெறியுடன் கூட்டத்திற்குள் கலந்து இருந்தவர்கள் என்ன ஆனார்கள்?

மவுண்ட் பேட்டன் பிரபுக்கு சற்று குழப்பம். உளவுத்துறை தவறான தகவல்களை தந்து விட்டார்களோ? எத்தனை விதமாக கலங்கி விட்டேன். மொத்தமாக கூடி வந்த இந்த சூழ்நிலையில் அரை மணி நேரத்திற்குள் அரை யுகம் வாழ்ந்த அவஸ்த்தைகள். அப்பாடா........ என்று பெருமூச்சில் ஜின்னா சொன்ன லொள்ளு வார்த்தைகளை மறந்து போயிருக்கலாம்.

எத்தனை உழைப்பு, அதிகாரம், ஆட்சி, ஆளுமை என்ற போதிலும் தீவிரவாதம் என்ற ஒரே சொல் அத்தனை பேர்களையும் அலைக்கழித்து விடுகின்றது.

ஒரே ஒரு குறி. ஆனால் பாதிப்பு பல லட்ச மக்கள். அதைத் தொடர்ந்து நீக்கவே முடியாத கறைகள் வன்மத்தின் தொடர்ச்சி.

மொத்த சிறப்பான திட்டுமிடுதல் பெற்ற நபர்கள் ஏன் ஜின்னாவை சுட்டுக்கொல்லவில்லை. அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. வாகனத்தில் மவுண்ட் பேட்டன் பிரபும் சேர்ந்து பயணிப்பார் என்று.

மவுண்ட் பேட்டன் பிரபு மரியாதைக்குரிய இந்திய வைஸ்ராஸ். எந்தக் குறையும் சொல்ல முடியாதவர். எவருமே வெறுக்க முடியாத அத்தனை நேர்மையான மனிதர். உத்தரவு கொடுக்க வேண்டிய நபர் அமைதியாய் பின்னால் மறைந்து விட்டார். குண்டு வைத்திருந்தவர்கள் உத்தரவு இல்லாததால் அவர்களும் மறைந்து விட்டார்கள்.

ஒருவேளை அன்று மட்டும் அந்த குண்டு வீச்சு நடந்து இருந்தால் மொத்த இந்தியாவின் முகமே மாற்றம் பெற்று இருக்கும்?

இன்றைய சுதந்திர இந்தியாவின் வாழ்ந்து கொண்டுருக்கும் நாம் அனைவருமே பாடுபட்ட அத்தனை தலைவர்களையும் விட தன்னாலான புத்திசாலி நடவடிக்கைக்களால் மவுண்ட் பேட்டன் பிரபு ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்தார் என்றால் அதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. காரணம் பின்னால் வரப்போகின்ற அத்தியாயங்களில் சுதந்திரம் வாங்கிய பிறகும் கலவரங்களை நிறுத்த முடியாமல் நேரு அவர்கள் ஓய்வில் (கோடை வாஸ்தலம்) இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு அவர்களை வரவழைத்து அவரின் கைகளில் அதிகாரத்தை கொடுத்த கொடுமையும் நடந்தது.

துப்பறியும் துறைக்கு தலைவரான சாவேஜ், மவுண்ட் பேட்டன் பிரபு, எட்வினா, ஜின்னா, அலிகான் அத்தனை பேர்களும் அச்சம் தீராமல் இறங்கினார். வெற்றி ஊர்வலம் ஒரு முடிவுக்கு வந்தது. மாளிகையை அடைந்தது.

ஆனால் இந்த இடத்தில் ஏன் இந்த தீவிரவாத எண்ணம் தோன்றியது? என்பதற்கான காரணத்தையும் உள்ளே போய் பார்த்துவிடலாம்.

பாகிஸ்தான் இந்தியா பிரிவினை மற்றும் பஞ்சாப் மக்களின் இடப்பெயர்ச்சி என்று எல்லாவகையிலும் அன்றைய நீதிபதி ஜி.டி. கோஸ்வா அவர்களின் அறிக்கைப்படி ஐந்து லட்சம் பேர்கள்.

கலவரத்திற்குள்ளே பல சிரமங்களுக்கு இடையே பலவிதங்களிலும் பணியாற்றிய உதவிய சரித்திர ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் (பண்டரின் மூன், வீ. ஹட்சன்) கணக்குகள் இரண்டு லட்சம் முதல் தொடங்குகிறது.

ஆனால் பார்த்த பத்திரிக்கையாளரின் கணக்கு பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை இருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால் உறுதியான கணக்கு ஒரே ஒரு வகையில் கிடைத்தது. ஆமாம் வாகா எல்லை சோதனைச் சாவடி, சுலைமாங்கி, பல்லோக்கி போன்ற மார்க்கங்கள் வழியாக சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பேர்கள் வந்தார்கள்.

வங்காளத்தில் இருந்து கலவரம் இன்றி இடம் பெயர்ந்தோர் மொத்த எண்ணிக்கை (அகதிகள்) ஒரு கோடி பேர்கள்.

கிடைத்த வரையில் பரவாயில்லை என்று மக்கள் பணம், மாடு, ஆடுகள், மாட்டுவண்டி என்று பஞ்சாப்பின் அத்தனை சிறிய பெரிய பாதைகள் முழுக்க மக்களின் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சில அகதிகளின் கூட்டம் மைல் கணக்கில். நடந்து வரும் போதே இரு பக்கமும் எறிந்து கொண்டுருந்த வயல்வௌிகளும், ஆலைகளும், கொலைகளும், கற்பழிப்புகளும் என்று பார்த்து பயந்து கொண்டு குடிக்க நீர் இல்லாமல் நா வரண்டு நடக்க திராணி இல்லாமல் உயிரை கையில்பிடித்துக்கொண்டு. நடந்து வரும் போதே தாக்கிய விஷ ஜுரம், காப்பாற்ற முடியாத குழந்தைகள் பெரியவர்கள் பாதை எங்கும் அப்படியே விட்டுவிட்டு பயணித்துக்கொண்டுருந்தார்கள்.

பஞ்சாப்பின் ஒவ்வொரு பாதையும் ஒரு புதைகுழி, முடிவற்ற மயானம்.

லாகூரில் இருந்து அமிர்தசரஸ் வரையிலான 65 கிலோமீட்டர் தூரமும் இடைவௌிகளில் ஏராளமான புதைக்கப்படாத பிணங்கள் அழுகி நாற்றத்துடன் காணப்பட்டது. பறந்து கொண்டுருந்த கழுகுக் கூட்டங்கள் அந்த இடத்தை விட்ட பறந்து வேறு இடம் செல்ல வேண்டிய நிலைமை இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டுருந்தது. பிணங்கள் வந்து கொண்டே இருந்தது.

நடந்து வந்த கூட்டங்களினால் உருவான காலடித் தடங்களின் புழுதி பறந்து மேலே வானத்தை மறைத்தது. வேறு வழியே இல்லாமல் அங்கங்கு சமைத்து சாப்பிட அடுப்பு உருவாக்கிய புகை மண்டலம் விண் வரைக்கும் தொட்டு தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வினோத பயத்தை தந்தது.

சுதந்திரம் பெறுவதற்காக உழைத்த அத்தனை தலைவர்களுமே இதனை கண்டு நடுநடுங்கி விட்டார்கள். வௌ்ளையர்கள் கூட இந்த கோரத்தை இந்த அளவுக்கு எதிர்பார்த்து இருக்கவில்லை. கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விட கட்டுக்குள் அடங்காமல் கலவரத்தீ மேலும் மேலும் பல்வேறு இடங்களுக்கு பரவிக்கொண்டேயிருந்தது.

சுதந்திரம் என்பது வேண்டி விரும்பி வாங்கிய போது சுமையாகத்தான் இருந்தது.

வௌ்ளையர்கள் இறக்கி வைத்த அந்த சுமை, வாங்கியவர்களின் பலத்தை சோத்தித்தது. சுமையை தாங்க முடியாமல் எலும்பு நொறுக்கியது. வன்மம் வளர்க்க காரணமாக இருந்தவர்கள், வன்மத்தை மட்டுமே வளர்த்தவர்கள், வளர்ந்த போது கட்டுக்குள் கொண்டு வராமல் அதில் கொண்டு குளிர் காய்ந்தவர்கள், கண்டும் காணமல் இருந்த தலைவர்கள், தவறு என்று சொன்ன காந்தியை பரிகாசமாய் பார்த்தவர்கள் அன்று தான் உள்மனதில் உணர்ந்து இருப்பார்கள்.

காரணம் அத்தனை பேர்களுக்கும் அன்று காந்தி இருந்த கல்கத்தா பூமி ஆச்சரியமாக இருந்தது. கலவர பூமியாக மாறிவிடும் என்று எதிர்பார்த்து இருந்த அத்தனை பேர்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு கல்கத்தா பிரார்த்தனை பூமியாக மாறியிருந்தது.

இந்துக்களும் முஸ்லீம்களும் கூட்டம் கூட்டமாக, குழுவாக, பல்வேறு மதப்பாடல்களை பாடிக்கொண்டு அவரது தங்கியிருந்த இடத்துக்கு போய்க்கொண்டே இருந்தார்கள்.

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625



































Sunday, September 27, 2009

நடிகர் சத்யராஜ் ஜின்னாவின் வழித்தோன்றலா





உயிர்க்குருவிகள் நகர்ந்த ஊர்வலம். ஒளிந்திருந்தவர்களின் கையில் சிக்காத மாயம்?
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 33

நடிகர் சத்யராஜ் ஜின்னாவின் வழித்தோன்றலா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் ஜின்னா அவர்களை இன்று வரையிலும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் எத்தனை விமர்சனங்கள் அவரைப்பற்றி என்ற போதிலும் அவருடைய இரும்பு போன்ற நெஞ்சுறுதியை, மனோ தைரியத்தை ஒப்புக்கொள்ளாமல் இருந்தது இல்லை.

சொல்லப்போனால் அவருடன் மற்ற எந்த தலைவர்களையும் ஒப்பிடுவது கூட முடியாது. காரணம் ஒவ்வொரு முறையும் தளர்ந்து போய் விடுகின்ற மவுண்ட் பேட்டன் பிரபு அவரைப்பற்றி சொல்லும் வார்த்தைகள் இது. அத்தனை தைரியம் படைத்த ஜின்னா அவர்கள் மவுண்ட் பேட்டன் பிரபு சொன்ன விஷயத்தைக் கேட்டதும் சொன்ன வார்த்தைகள் இது.

"எவ்வளவு பெரிய ஆபத்திற்குள்ளும் எவ்வளவு சுலபமாக தன்னைச் சிக்கவைத்துக் கொள்ளுகிறார். எவ்வளவு நெஞ்சுரமும் நேர்மைத் துணிவும் இருக்கிறது இந்த மனிதரிடம்?" நன்றிப்பெருக்குடன் ஜின்னா மவுண்ட் மகாராஜனைப் பார்த்தார்.

"ஆமாம். நீங்கள் பயணிக்கும் வாகனத்தில் நானும் வருகிறேன் " சொல்லி முடித்த போது மவுண்ட் பேட்டன் பிரபு மனைவியான எட்வினா மவுண்ட் பேட்டன் பிரபு சொன்ன வார்த்தைகள் அத்தனை பேர்களையும் கதிகலங்க வைத்தது.

"நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறேன்"

இதுபோன்ற சூழ்நிலையில் கூட ஜின்னா தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளத் தயாராய் இல்லை.

"எது வேண்டுமானலும் நடக்கட்டும். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை " ஜின்னா கூறிய வார்த்தைகள்.

மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனம். திறந்தவௌி வாகனம். இரு பக்கம் திரளனான மக்கள் கூட்டம். ஜின்னாவின் பக்கத்து இருக்கையில் மவுண்ட் பேட்டன் பிரபு. அதே வாகனத்தில் மவுண்ட் மனைவி. யோசித்துப் பாருங்கள்.

இனி நிரந்தரமாய் வாழவேண்டிய பாகிஸ்தான் நாட்டில் என்பதால் தான் வாழ்ந்த, பாகிஸ்தான் என்ற கனவைக் கொண்டு அன்றாடம் செலவழித்த பொழுதுகள் கொண்ட வீடான எண்.10 ஓளரங்கசீப் ரோடில் இருந்த வீட்டை அன்று விலை கொடுத்து வாங்கியவர் யார் தெரியுமா?

"சரித்திரத்தின் எதிர்மறை நியாயம்" என்கிற விதத்தில் சேட் இராமகிருஷ்ண டால்மியா என்கிற தொழிலதிபர். இத்தனை நாளும் அங்கு பறந்து கொண்டுருந்த பச்சையும் வௌுப்புமான முஸ்லீம் லீக் கொடி பறந்த அந்த வீட்டின் கொடிமரத்தில் சேட் டால்மியா பசு பாதுகாப்பு இயக்கத்தின் கொடியை ஏற்றினார்.

ஜின்னா பாகிஸ்தான் செல்வதற்காக மவுண்ட் பேட்டன் பிரபு அவருக்கு டி.சி.3 என்கிற விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார். படியில் ஏறியவர் கடைசியாக மொத்தமாக தீர்க்கமாக சற்று நேரம் நகரத்தை பார்த்தவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் " இது தான் நான் கடைசியாக டெல்லியை பார்ப்பது?"

விமானம் கராச்சியை அடைந்த போது திரண்டுருந்த மக்கள் கூட்டத்தை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார்.

எப்போதும் அப்படித்தான் ஜின்னா. எந்த உணர்ச்சிகளையும் வௌியே காட்டிவிட மாட்டார்.

எனது பிணத்தின் மீது பிரிவினை நடக்கட்டும் என்ற காந்தியும், என்னை நிர்ப்பந்திக்க முடியாது என்ற மவுண்ட் பேட்டன் பிரபும் ஜின்னாவிடம் தோற்றுப் போனார்கள். கிட்டத்தட்ட கையில் இருந்து பறிக்கப்பட்டதைப் போல.

"எங்களால் ஒருவரைக் கூட பிடிக்க முடியவில்லை " என்று துப்பறியும் தலைவர் சொன்ன போது அருகே இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு மனைவி எட்வினா சொன்ன வார்த்தைகள் தான்

"அப்படி என்றால் நானும் உங்களுடன் பயணிக்கின்றேன் ".

ஏற்கனவே உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மகாராஜன் மனைவியை வேறு வழியே இல்லாமல் (நச்சரிப்பு) ஊர்வலம் (1947 ஆகஸ்ட் 14 கராச்சி) ஆய்த்த ஏற்பாடு நடந்து கொண்டுருந்தது.

சவப்பெட்டியை கொண்டு செல்லும் (கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ்) வாகனமாக மனதில் நினைத்துக்கொண்ட மவுண்ட் பேட்டன் பிரபு பின்னால் வந்த காரில் மனைவியை அமர (பிழைத்து விட்டு போகட்டும்) வைத்தார்.

31 பீரங்கி குண்டுகள் (?) முழங்க கூட்டம் தொடங்கி ஊர்வலம் சுமார் ஐந்து கிலோ மீட்டர். இருபக்கமும் அரணாக ராணுவ வீரர்கள். துப்பறியும் குழுவினர் வாகனம் நகர நகர உற்றுப் பார்த்துக்கொண்டே இவனா? அவனா? என்று அவஸ்த்தை பார்வை. அரை மணி நேரம் பயணம் கவர்னர் ஜெனரல் மாளிகையை அடைய.

குட்டிச்சுவர், மரக்கிளை, ஓரத்தில் நின்ற வாகனங்கள், என்று எல்லாப்பக்கத்திலும் மனித தலைகள். ஆரவார கோஷங்கள். ஜின்னா முகத்தில் எப்போது போல இறுகிய தசையிலான முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் வெற்றுப் பார்வை போல மெதுவாக கையாட்டிக்கொண்டே.

மவுண்ட் பேட்டன் பிரபுக்கு சொல்லவே வேண்டாம்.

துப்பறியும் துறைக்கான தலைவர் திரு.சாவேஜ் செத்து சுண்ணாம்பாகியிருப்பார். கால்சட்டைப் பையில் வைத்திருந்த துப்பாக்கியின் விசையை விரல்கள் தொட்டபடி நோட்டம் விட்டபடியே நடந்து கொண்டே. எந்த சத்தமும் அவர் காதில் விழவில்லை. அடுத்த அடியில் என்ன நடக்குமோ? என்ற அச்சம்.

அந்த அரைமணி நேர பயணம் முடிவுக்கு வந்தது. இறங்கியதும் ஜின்னா சொன்ன வார்த்தைகள் இங்கு முக்கியம்.

" ஆண்டவனுக்கு நன்றி. நல்லவேளை உங்களை நான் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துவிட்டேன் ". மவுண்ட் பேட்டன் பிரபு மயங்கி விழாத குறைதான்.

"என்ன கொழுப்பு இந்த மனிதருக்கு? என்று நினைத்துக்கொண்டு

" நீங்கள் எங்கே கொண்டு வந்து சேர்த்தீர்கள்? நான் அல்லவா உங்களை உயிருடன் இங்கு கொண்டு வந்து சேர்த்தேன் ".

ஜின்னா லொள்ளு வார்த்தைகள் மவுண்ட் பேட்டனை காயப்படுத்தியிருக்குமா என்று தெரியவில்லை.

ஆமாம் ஜின்னாவை சுட்டுக்கொல்ல திட்டம் போட்டு தயாராய் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்?


தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625




Saturday, September 26, 2009

கதாநாயகனின் உயிருக்கு குறி






புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (32)
உச்சக்கட்ட தொடக்கம்
அத்தனை வௌ்ளையர்களும் நடுநடுங்கியதும் ,பரவசப்பட்டதும் அவ்வப்போது அவஸ்த்தைபட்டதுமான ஒரே இந்திய ஜீவன் மகாத்மா காந்தி என்றால் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
மவுண்ட் பேட்டன் பிரபு வேண்டுகோளின்படி அதுவும் பிரயாசைப்பட்டு அவரை கல்கத்தாவில் உட்கார வைத்தாகிவிட்டது. அவருக்கு அங்கு தன்னுடைய மக்களால் அவருக்கு கிடைத்த மரியாதை?
ஆக்ஸ்ட் 15 அன்று நவகாளியில் ஒரு இந்து சாகமாட்டான். அது போல கல்கத்தாவில் ஒரு முஸ்லீம் கூட சாகக்கூடாது சொல்லிக் கொண்டு காரில் இறங்கி நடந்த போது விழுந்த அர்ச்சனை வார்த்தைகள், தன் மேல் விழுந்த "நல்ல" விஷயங்கள், பாதையில் பரப்பி வைத்த முட்கள், உடைக்கப்பட்டு தெறித்து விழுந்த கண்ணாடிச் சிதறல்கள், மலக்குவியலை மலை மலையாக வீசி எறிந்த மக்கள். இவர்களின் வாழ்வுக்காக இவர்களின் சுதந்திரத்திற்காக இவர் சிறைச்சாலையில் இருந்த விஷயங்களை நாட்களை கொள்கைகளை தனியாக பார்ப்போம்.
இந்தியாவிற்குள் விமர்சனத்திற்குள் வாழ்ந்த காந்தியின் வௌிவட்டாரத்தையும் பார்த்துவிடலாம்.
உப்பு சத்தியாகிரகத்தின் பாதிப்பாக அன்றைய லார்ட் இர்வின் காந்தியை சிறையில் இருந்து விடுவித்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அன்றைய பிரிட்டிஷ் ஆளுமையில் நடுநாயமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்க்கு வாயிலும் வயிற்றிலும் வௌிவந்த புகை நிற்கவே இல்லை.
"அரை நிர்வாண பக்கிரி" யை மன்னர் சந்திப்பதா? இயல்பாகவே பெரிய காதுகளைப் பெற்ற காந்தி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காந்தி இர்வின் ஒப்பந்தம் (1931 பிப்ரவரி 17) ஏற்பட்டது. எப்போதும் போல (வட்ட மேஜை மாநாடு) தன்னுடைய புகழ்பெற்ற "ஆடையை" உடுத்திக்கொண்டு மன்னர் மாளிகையில் உள்ளே நுழைந்த போது அத்தனை மக்களும் ஆச்சரியமாய் பார்த்தனர். அவர் தங்கியிருந்த இடத்தில் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
இவரா? இந்த மனிதரா?
காந்தியை அங்கு விரும்பி வந்து சந்தித்த பிரபலங்கள்
ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, மேரியா மாண்டி சோரி, சார்லி சாப்ளின், ஹெரால்ட் லஸ்கி, கான்டர்பெரி ஆர்ச் பிஷப், ஜான்ஸ் ஸ்மட்ஸ். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் மட்டும் பொருமிக்கொண்டு வௌியே காட்டவில்லை. மொத்தத்திலும் சர்ச்சில் எதிர்பார்க்காத கொடுமையும் நிகழ்ந்தது. வைஸ்ராஸ் சமமாக உட்கார வைத்ததே தவறு என்றவருக்கு மாட்சிமை தாங்கிய மன்னர் அழைத்து "உங்களுக்கு தேநீர் விருந்து அளிக்க ஆசை " என்றதும் சுத்தமாக வெறுத்துப்போய்விட்டார்.
மன்னர் காந்தியை மரியாதையாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அளித்த தேநீர் விருந்தை முடித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வௌியே வந்த போது திரண்டு இருந்தனர் பத்திரிக்கையாளர்கள். ஏராளமான கேள்விகள் புன்சிரிப்புடன் அத்தனை பேருக்கும் பதில்கள்.
கூட்டத்தில் இருந்து ஒரு நிருபர் கேட்ட கேள்வி.
" மிஸ்டர் காந்தி. இப்படிப்பட்ட அறைகுறை உடையுடன் மன்னரைச் சந்திக்க உங்களுக்ச் சங்கடமாக இல்லையா?"
காந்திஜி அவரை புன்கையுடன் ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்ன பதில்.
"ஒரு சங்கடமும் இல்லை. எங்கள் இருவருக்கும் போதுமான உடைகளை மன்னரே அணிந்திருந்தார்"
பிரிட்டிஷார் கடைசியாக காந்தியை சிறையில் வைத்த ஆண்டு 1942. மொத்தமாக சிறையில் வாழ்ந்த நாட்கள் 2338. இதில் 249 நாட்கள் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த நாட்கள்.
மன்னர்களுடனும், வைஸ்ராய்களுடனும், பிரபல அரசியல் மேதைகளுடனும் பேசிய காந்தி இந்த எளிய பாதிக்கப்ட்ட மக்களுக்குப் பொறுமையான குரலில் அத்தனை அவமதிப்புகளையும் பொருட்படுத்தாமல் எடுத்துக்கூறி அவர்களை சகஜ நிலைக்குத் திரும்பும் நோக்கத்துடன் பேசினார்.
அவரது அஹிம்சைப் போராட்டத்தின் திட்டமே இதுதான்.
கலகத்தில் இறங்க இருக்கும் இரண்டு கூட்டத்தினரிடையே அவரது உயிரைப் பணயப் பொருளாக வைத்த ஒரு ஒப்பந்தம்.
இவை ஒரு பக்கம் நடந்து கொண்டுருக்க மவுண்ட் பேட்டன் பிரபு பாகிஸ்தானின் கதாநாயகன் புது மாப்பிளையை தனது (ஜின்னா சாகிப்) அலுவலகத்திற்கு வரவழைத்து இருந்தார். அருகில் லியாகத் அலிகான். காரணம் உலகில் தலைசிறந்த துப்பறியும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைவரான திரு. சாவேஜ் கொடுத்த தகவல்.
அவருடைய பணியாளர்கள் இந்தியா முழுக்க பிச்சைகாரர்கள் வேஷம் முதல் வீடுகளில் எடுபிடியாக என்று அத்தனை துறைகளிலும் ஊடுருவி இருந்தனர்.
காரணம் அங்கு அப்போது அவர்கள் விவாதித்த செய்தி அத்தனை முக்கியமானது. லாகூரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள அரசியல் தலைவர்களின் கூட்டு சதி ஆலோசனையின் மொத்த விபரீதம்.
தாராசிங் என்ற தலைவர் குழுவில் தீவிரவாத எண்ணம் கொண்ட சீக்கியர்களும், ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் என்று இந்து மத தீவிரவாத குழுக்களும் சேர்ந்து ஆகஸ்ட் 14 அன்று ஜின்னா சாகிப்பை பாகிஸ்தான் அசெம்பிளி கட்டிடத்தில் இருந்து கவர்னர் ஜெனரல் மாளிகைக்கு செல்லும் போது அணிவகுப்பின் போது கலந்து கொண்டு சுட்டுக்கொல்வது.
மற்றொன்று பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய அனைத்து பொருட்களையும் ஏற்றிச் செல்லும் "பாகிஸ்தான் ஸ்பெஷசல்" என்று ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பது.
கட்டுக்கோப்பான சீக்கியர்களின் கையில் அத்தனை நவீன வசதிகளும் மனம் முழுக்க அத்தனை வெறியும் இருந்தது.
அவர்களின் கொள்கை ஒன்று தான்.
எத்தனை பிரச்சனை என்றாலும் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களே இறுதியில் ஜெயிப்பார்கள்.
தன்னால் மாற்றிக்கொள்ள முடியாத முஸ்லீம் வேடத்திற்கு சுயம் சேவக் தொண்டர்கள். உத்தரவிட வயர்லெஸ் வசதியுடன் அங்கங்கே ஒருவர். ஒருவர் சிக்கினாலும் அடுத்தவர்க்கு என்ன தொடர்பு? என்று தெரிவிக்க முடியாதபடி நவீன முறைகள். மொத்தத்தில் அன்று அவர்களின் மொத்த திட்டத்தையும், அமைப்பையும் கேட்டு முடித்தவுடன் ஜின்னாவின் முகம் வௌிறி விட்டது.
24 மணி நேரத்தில் எத்தனை பேர்களை கைது செய்யமுடியும்?
பிரச்சனை வேறு விதமாக மாறி உள்நாட்டு போர் உக்கிரமாகி விடும் என்ற பயம் மவுண்ட் பேட்டன் பிரபுக்கு. குழம்பிப்போய் மவுண்ட் மகாராஜன் எடுத்த முடிவுதான் ஜின்னாவின் உயிரையும் காப்பாற்றி இன்று வரையிலும் பாகிஸ்தானின் தந்தை என்று அவர் புகழ் கொடி பறந்து கொண்டுருக்கிறது.
எருமைப் பால் குடித்து ஏப்பத்துடன் வாழ்ந்தவர்களும், காரம் பசு பால் குடித்து அறிவில்லாமல் வாழ்ந்து, அடித்துக்கொண்டவர்களுடன் ஆட்டுப்பால் குடித்து அறிவுடன் வாழ்ந்தவர்.
தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625